தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : பிப் 24, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 24, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரியில், பத்திரிகை தொழில் தொடர்புடைய இரண்டு நாள் கான்பிரன்ஸ். நானும், லென்ஸ் மாமாவும் சென்று இருந்தோம்!

'ஹாய் மணி...' என்ற குரல் கேட்டு திரும்பினேன். புதுச்சேரியில் இயங்கி வரும் அமெரிக்க நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் நண்பர் நின்று இருந்தார். இவர், புதுவையில் உள்ள தற்கொலை தடுப்பு மையம் ஒன்றில் கவுன்சிலராகவும் உள்ளவர். எப்போதும், தற்கொலை எண்ணத்தால் தவிப்பவர்களுக்கு, இந்த மையத்தில் தகுந்த ஆலோசனைகள் கூறி, அவ்வெண்ணத்தை மாற்றி நல்வழிப்படுத்துவர். அப்படி ஆலோசனை வழங்கும் தன்னார்வப் பணியிலும் ஈடுபட்டு வருபவர் இந்த நண்பர். அவருடன் ஒரு வெள்ளைக்காரரும் நின்று இருந்தார்.

அவரை அறிமுகம் செய்தார் நண்பர். அவர் கனடா நாட்டைச் சேர்ந்த டாக்டராம். இந்தியாவின் பல பகுதிகளிலும் செயல்படும் தற்கொலை தடுப்பு தன்னார்வ மையங்களை பார்வையிடவும், மிகுந்த உதவிகள் செய்யவும், அந்நாட்டின் பிரதிநிதியாக வந்திருப்பதாகக் கூறினார்.

சம்பிரதாயப் பேச்சுகளுக்குப் பின், 'சிறுநீரகம் பழுதடைந்த கனடா நாட்டவர் பலர், இங்கு வந்து மாற்று சிறுநீரகம் பொருத்தி செல்வது உங்களுக்குத் தெரியுமா? சிறுநீரகத்தை விலை கொடுத்து வாங்குவது சட்டப்படி உங்கள் நாட்டில் குற்றம் என்பதால், எங்கள் நாட்டில் பலரும் ஒரு சிறுநீரகத்துடன் வலம் வரும் அவலம் ஏற்பட்டுள்ளது தெரியுமா உங்களுக்கு?' எனக் கேட்டேன்.

விரிவாக பேச ஆரம்பித்தார்: உங்கள் நாட்டிலும் சிறுநீரகத்தை விற்பது குற்றம் தானே. எங்கள் நாட்டில், இதை கிரிமினல் குற்றமாக சட்டம் கருதுவதில்லை என்றாலும், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் ஆறு மாதம் சிறை தண்டனை உண்டு!

எங்கள் மக்கள் இந்தியாவுக்கு மட்டுமல்ல, சீனா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு கூட சென்று, சிறுநீரகம் பெற்று ஆபரேஷன் செய்து கொள்கின்றனர். இதற்காக, ஒரு சிறுநீரகத்திற்கு, இடைத் தரகர்கள் மூலம், அவர்கள் கொடுக்கும் விலை என்ன தெரியுமா? 20 லட்சம் முதல் 70 லட்சம் வரை!

எங்க நாட்டுல சிறுநீரக தானம் பெற முடியாததால, ஒரே வருஷத்துல நூற்றுக்கணக்கானோர் செத்துப் போயிட்டாங்க! இதனாலேயே, எவ்வளவு செலவு செய்யவும் தயாரா இருக்காங்க...

உங்க நாட்டுல இன்னும் பெரிய கொடுமை என்னான்னா... மாற்று சிறுநீரகம் பொருத்தாமலேயே, வயிற்றை கிழித்து, ஆறு இஞ்சுக்கு வெறும் தையல் மட்டுமே போட்டு, பணத்தையும் பிடுங்கிக் கொண்டு அனுப்பி வருகின்றனர். இங்கே, (கனடா) வந்தபின் அல்ட்ரா சவுண்ட் சோதனை செய்து பார்த்தால், மாற்று சிறுநீரகம் பொருத்தப்படாதது தெரிய வரும்.

சென்னையில, 17 வயது சித்தாள் பையன் ஒருத்தனோட சிறுநீரகத்தை பொருத்திக் கொண்ட, 55 வயது கனடாக்காரர், விமானத்தில் நாடு திரும்பும்போது, பாரிச வாயுவால் தாக்கப்பட்டு, கைகால் செயலிழந்தார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவுல ரிச்மாண்ட் எனும் இடத்துல வால்டர் கிளாக்ன்னு ஒரு நிறுவனம் இருக்கு. இந்த நிறுவனம் சீனாவில் ஷாங்காயில் உள்ள ஒரு ஆசாமியுடன் கூட்டுச் சேர்ந்து, சீன சிறுநீரக வியாபாரம் செய்யுது. சிறுநீரகம் வேண்டி இந்த நிறுவனத்தில் பதிவு செய்யவே, 2 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்!

சிறுநீரகம் கிடைத்ததும், சீனாவிலிருந்து தகவல் வரும். நோயாளிகள் சீனா சென்று, அங்குள்ள மருத்துவமனையில் சிறுநீரக மாற்று ஆபரேஷன் செய்து கொள்ள வேண்டும்! சிறுநீரக சந்தையாகவே செயல்படுகிறது சீன நாடு!

இந்தியாவில் ஏழ்மை அதிகம்... பணத்திற்கு ஆசைப்பட்டு, சிறுநீரகத்தை விற்று விடுகின்றனர். எங்கள் நாடும், டபிள்யூ.எச்.ஓ., — உலக சுகாதார நிறுவனமும் செய்வதறியாது கையைப் பிசைந்து கொண்டுள்ளது என முடித்தார்.

பெருமூச்சு விட்டபடி கை கழுவச் சென்றேன்!

***

பிரபல நாளிதழ் ஒன்றில் பணியாற்றி ஓய்வு பெற்ற அந்த முதியவரை, கடந்த வாரம் சந்தித்தேன். சமூக அவலங்கள் அவரை வெகுவாக பாதித்துள்ளது. கொதிப்பாக பேசினார்... சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்று பற்றி விவரித்தார்...

நாகர்கோவிலில் அமைந்துள்ள அந்த ஓட்டல் ஒரு பிரபலமான அசைவ ஓட்டல்பா... அங்கு, மாலை 4:00 மணிக்கு இஞ்சிச்சாறு சேர்த்து சுவையான டீயும், சுடச்சுட மெது வடையும் போடுவாங்க. இதனால், மாலையில் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதும்...

சமீபத்தில் ஒரு நாள் அந்த நெரிசலான நேரத்தில் ஒருவர், 'ஐயோ! கொல்ல வாரானே... காப்பாத்துங்க!' என்று அலறியடித்தபடியே ஓட்டலுக்குள் பாய்ந்தார். அவரைத் தொடர்ந்து ஒரு ஆசாமி, கையில் அரிவாளுடன் விரட்டிக் கொண்டு வந்தான். ஆனால், அந்த முரட்டுக்காளை ஓட்டலுக்குள் நுழையாமல், படியிலேயே நின்று விட்டான். கொலைக்காரனானாலும் அவனுக்கும் தப்பிப் பிழைக்க வழி தெரிந்திருந்தது.

திடீரென ஏற்பட்ட பரபரப்பால், ஓட்டலில் கலெக்ஷன் குறைந்தது. ஓட்டல் அதிபர் கோபத்தால் கொதித்துக் குதித்தார். மனிதாபிமானம் சற்றும் இல்லாமல், அடைக்கலம் தேடி வந்த அப்பாவியை, கழுத்தை பிடித்து ஓட்டலுக்கு வெளியே தள்ளினார்.

எப்படியாவது தப்பித்துக் கொள்ள வேண்டுமேயென்று, தலைதெறிக்க ஓடினார் அவர். ஆனால், அந்த கொலைகாரன் அவரை மடக்கிப் பிடித்து, கண்டபடி நாலைந்து வெட்டு வெட்டி, ஓடி மறைந்து விட்டான்.

நடுரோட்டில், அந்த அப்பாவி ரத்த வெள்ளத்தில் துடி துடித்து உயிருக்காக மன்றாடிக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றி ஒரு பெருங்கூட்டமே திரண்டு விட்டது. 'ஐயோ பாவம்...' என்று இரங்கினரே தவிர, அவரது உயிரைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை.

அப்போது, அந்தக் கூட்டத்தில் நின்று கொண்டிருந்த நல்லவர் ஒருவர், பக்கத்து கடைக்குச் சென்று, இந்தக் கோர சம்பவம் பற்றி காவல் நிலையத்திற்கு போனில் தகவல் கொடுத்தார். 'நேரில் இங்கு வந்து புகார் எழுதிக் கொடுங்கள்!' என்று காவல் நிலையத்திலிருந்து பதில் வந்தது.

பாவம்! அவர் என்ன செய்ய முடியும்? 'அநியாய வட்டிக்கு பணம் கொடுத்து பிழைப்பவர் கதி இது தான்!' என்று எண்ணியபடியே, சம்பவ இடத்திற்கு மீண்டும் செல்லாமல் நடையைக் கட்டி விட்டார்!

இதற்கிடையே தகவல் அறிந்து அவரது மனைவி ஓடோடி சம்பவ இடத்திற்கு வந்து, படுகாயமுற்றுக் கிடந்த கணவரின் முகத்தைப் பார்த்து, குமுறி குமுறி அழுதாள். தன் கணவரைத் தூக்கி, கடை வராந்தாவில் கிடத்தும்படி, கூட்டத்தினரைப் பார்த்து கண்ணீரும், கம்பலையுமாக மன்றாடினாள்!

உதவ வேண்டியது தான்... காவல் துறையிலிருந்து உபத்திரவம் வருமே என்று பலர் எண்ணியிருக்க வேண்டும். ஒருவர் பின் ஒருவராக கம்பியை நீட்டி விட்டதால், கூட்டம் மெலிந்து கரைந்து போயிற்று!

இந்த நேரத்தில், லேசான மழைத் தூறலும் விழுந்தது. ரத்த வெள்ளத்தில் மிதந்து நனைந்து கொண்டிருந்த கணவரைப் பார்த்து, மனைவி, விம்மி விம்மி அழுதாள். 'குடை வைத்திருக்கும் நல்லவர்களே, இரக்கமுள்ளவர்களே, முகத்திலாவது மழைத்துளி விழாமல் காக்கலாமே...' என்று கதறிய அவள் கண்களிலிருந்து, பொல பொலவென்று கண்ணீர் வடிந்தது!

இந்த சோகக் காட்சியைப் பார்த்த ஒருவர், மனமுருகி, தம்மிடமிருந்த குடையை அவளிடம் கொடுத்து விட்டு, நனைந்து கொண்டே வேகமாக நடந்து மறைந்தார். குடை ஒரு தடயமாகி விடக்கூடாதே என்பது தான் அவரது வேகமான நடைக்கு காரணமாக இருக்கலாம்!

சம்பவம் நடந்த மூன்று மணி நேரத்திற்குப் பின்,மரணத்திற்கான அறிகுறிகள் தென்படத் துவங்கிய வேளையில், போலீஸ் ஜீப் இரைந்து கொண்டே வந்து நின்றது.

போலீசார் தடதடவென்று குதித்து இறங்கியதும், கூட்டம் மடமடவென்று கலைந்து, ஐந்தாறு பேரே நின்று கொண்டிருந்தனர்.

அவர்களில் ஒரு வயோதிகர், தன் கண்களை துடைத்துக் கொண்டே, 'போலீஸ், சட்டத்தின் கெடுபிடி, மக்களின் உதவும் மனப்பக்குவத்தையே அழித்து விட்டது...' என்று, பயந்து பயந்து முணுமுணுத்தார்.

உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தவரை மருத்துவமனையில் அனுமதிக்க போலீசார் ஏற்பாடு செய்தனர். ஆனால், அந்த அனாதையாக்கப்பட்ட, 'அப்பாவி' சில மணி நேரத்தில், துடி துடித்து பரிதாபமாக இறந்து போனார்!

இதுவே, 1945ம் ஆண்டிற்கு முன்னர், இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? மக்கள் திரண்டு கொலைக்காரனை விரட்டிப் பிடித்து, ஒரு மரத்தில் கட்டி போலீசாரிடம் ஒப்படைத்திருப்பர். படுகாயமுற்றவரை, எப்படியாவது தூக்கிப் போய் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்திருப்பர்! அத்தகைய உதவிக் கரங்களை இப்போது கட்டியது யார்? எனக் கூறி முடித்தார்.

சிந்திப்போமா?

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us