தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஆக 11, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 11, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கே

அலுவலகத்திற்கு வந்த குப்பண்ணா, 'மக்களுக்கு என்ன தேவை என்று அறிந்து, அதை வியாபாரப்படுத்தினால், லாபம் கிடைக்கும்...' என்று கூறி, ஒரு கதையை சொன்னார். அது:

ஒரு செருப்பு கம்பெனி, இரு ஊழியர்களை, ஒரு தீவுக்கு அனுப்பி, அங்கு, தம் கம்பெனி செருப்பு விற்க வாய்ப்பு உள்ளதா என, பார்த்து வரச் சொன்னது.

முதல் ஊழியர், போய் பார்த்து, 'அங்கு, யாருக்குமே செருப்பு அணியும் பழக்கமே இல்லே... அதனால், வாய்ப்பே இல்லை...' என, கூறி விட்டார்.

அடுத்த ஊழியர், 'அங்கு, யாருக்குமே செருப்பின் அருமை தெரியலே... ஆக, நம் செருப்பை அங்கு அறிமுகப்படுத்தி, அணிய கற்றுக் கொடுத்தோமானால், அமோக ஆதரவு கிடைக்கும்...' என, கூறினார்.

'ஆக... நேர்மறையாக சிந்திப்பவர்களுக்கு, நேர்மறை விஷயங்கள் பிடிபடும்.

'இனி, விஷயத்துக்கு வருவோம்.

'சீலிங் பேன் விற்பனையாளர்களுக்கு, ஒரு பொற்காலம் காத்திருக்கிறது. எங்கே, எப்படி என்கிறீர்களா...' என்று கேட்டு நிறுத்தினார், குப்பண்ணா.

பின், அவரே தொடர்ந்தார்:

சமீப காலமாக, ஐரோப்பாவில் பல நகரங்களில், வெயில், 40 டிகிரியை தொட்டுக் கொண்டிருக்கிறது. அதனால், மக்கள், 'உஷ்... உஷ்... என்ன வெயில்...' என, குரல் எழுப்ப ஆரம்பித்து விட்டனர்.

ஐரோப்பாவில், அபூர்வமாய் சில வீடுகளில், மேஜை மின்விசிறி இருப்பதை காண முடியும். ஆனால், அவர்களுக்கு தெரியாத விஷயம், 'சீலிங் பேன்!'

'சீலிங் பேன்' மாட்டினால், அறை முழுவதும் காற்று வரும் என்பது கேள்விப்படாத விஷயம். ஆக... இது தான் சரியான சமயம். நம் நாட்டில் உள்ள, தனியார் மின்விசிறி நிறுவனங்கள், ஐரோப்பாவிற்கு தங்கள் கூடாரத்தை மாற்றினால், அமோகமாய் வியாபாரம் செய்து, நல்ல லாபம் பார்க்கலாம்.

- என்று முடித்தார், குப்பண்ணா.

மும்பையில் வசிக்கும் நண்பர் ஒருவர், சொந்த வேலையாக சென்னை வந்தார். என்னை சந்திக்க விரும்பி, அலுவலகத்திற்கு வந்திருந்தார். பல விஷயங்கள் பற்றி பேசியவர், மும்பையில் உள்ள பெரும் பணக்காரர்கள், இப்போதெல்லாம், தங்கள் வீட்டு திருமணத்தை கப்பலில் நடத்த விரும்புவதை பற்றி கூறினார், அது:

மண்டபங்களில் திருமணம் நடத்தி, போரடித்து விட்டதால், இப்போதெல்லாம் பலர், தங்கள் வீட்டு திருமணத்தை சொகுசு கப்பல்களில் நடத்த விரும்புகின்றனர்.

அதை பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள, 'மை ஷாதி வாலே வெட்டிங்' என்ற நிறுவனம் நடத்தி வரும், ஜெ. பி. யதுவன்சியுடன் பேசினால்போதும். அனைத்து ஏற்பாடுகளையும் அவரே செய்து தருவார்.

திருமண மண்டபங்களில், மூன்று வேளை சாப்பாடு, 24 மணி நேரமும் காபி, டீ, நடன நிகழ்ச்சிகள், 'பார்ட்டி' மற்றும் ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் இருப்பது போல், இதிலும் உண்டு. கூடுதலாக, 'ஸ்பா, கேசினோ' மற்றும் 'ஷாப்பிங்' என, எல்லாவற்றையும் சொகுசு கப்பலிலேயே அனுபவிக்கலாம்.

துறைமுக வரி, கப்பலில் அறைகள், அறை சர்வீஸ், சொகுசு கப்பல் நிற்கும் இடங்களில் சுற்றி பார்க்க வசதி என, எல்லாம் இதில் அடக்கம்.

'பார்ட்டி' என்றால், மேல் தளத்திலும், முக்கிய நிகழ்ச்சிகளை, மையத்திலும் நடத்த ஏற்பாடு செய்து தரப்படுகிறது.

'ராயல் கரீபியன், ஜலேஷ் அண்ட் பிரின்சஸ் க்ரூஸ்' மற்றும் 'கோஸ்டா க்ரூஸ்' என, பல கப்பல் நிறுவனங்கள், இந்த திருமணங்களுக்கு ஏற்பாடு செய்து தருகின்றன.

உதாரணமாக, 'கோஸ்டா க்ரூஸ்' நிறுவனம், மும்பை - கொச்சி இடையே, மூன்று இரவு பயணத்தில், 100 விருந்தினர்களுடன், 38 லட்ச ரூபாய்க்கு, கச்சிதமாக முடித்து தருகிறது.

'மை ஷாதி வாலே வெட்டிங்' நிறுவனம், கோவா - மும்பை; துபாய் - மும்பை; சிங்கப்பூர் - மலேஷியா மற்றும் மாலத்தீவுகள் - இந்தியா இடையே திருமணங்களை நடத்த ஏற்பாடு செய்து தருகிறது.

பெரிய இடத்து திருமணம் என்றால், மூன்று இரவு, 250 விருந்தினர்களுக்கு, 98 லட்சம் ரூபாய் வசூலிக்கிறது.

ஏற்கனவே, மூன்று, வெளிநாடு வாழ் இந்திய குடும்பங்களின் திருமணங்களை, மும்பை - சிங்கப்பூர் இடையே நடத்திக் கொடுத்து அசத்தியுள்ளார், யதுவன்சி. நான்காவதாக, அடுத்த மாதம், துபாய் - மும்பை இடையே மற்றொரு திருமணம் நடக்க உள்ளது.

இது தவிர, டிசம்பர் மாதம், ஒரு பெங்களூரு ஜோடி, தங்கள் திருமணத்தை, இதே சொகுசு கப்பலில் நடத்த திட்டமிட்டுள்ளது.

பணக்காரர்கள் இடையே இதுபோன்ற விஷயங்கள் வேகமாக பரவி வருகின்றன.

சென்னை, கேரள மாநிலம், கொச்சின் மற்றும் கர்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்தும் சிலர், 'எங்களுக்கும் திருமணம் நடத்தி தர இயலுமா...' என, கேட்டுள்ளனர்.

'ஒரு கோடியை, ஒரு ரூபாயாக நினைக்கிறவங்களுக்கு, இதெல்லாம் பெரிய தொகையா... சீக்கிரம், ஒரு சொகுசு கப்பலில் நடைபெறும் திருமணத்தில் கலந்துக்க தயராகுங்க...' என்றார்.

வாய் பிளந்தபடி கேட்டுக் கொண்டிருந்த எனக்கு, பணம் இருந்தால், எப்படியெல்லாம் அனுபவிக்கின்றனர் என்று தோன்றியது.



கடந்த வாரம், அலுவலக நுாலகத்தில், பழைய, 'தினமலர்' பிரதி ஒன்றை, தீவிரமாக தேடிக் கொண்டிருந்தார், உதவி ஆசிரியர். அவருக்கு உதவுவதற்காக, நானும், அலமாரி அலமாரியாக தேடினேன்.

அப்போது, 1964ம் ஆண்டு வெளியான, 'கல்கண்டு' இதழ், கண்ணில் பட, அதில், ஆசிரியர் தமிழ்வாணன் வெளியிட்டிருந்த அறிவிப்பை பார்த்தேன். அது:

எனக்கு, ஒரு நாளைக்கு வரும் கடிதங்கள் ஒன்றா, இரண்டா... கடிதங்களை பிரித்து பார்ப்பதற்கே ஒரு நாள் போதாது... அவ்வளவு கடிதங்கள். இப்படி இருக்கும்போது, என்னால் எப்படி கடிதங்களுக்கு பதில் எழுத முடியும்.

இதனால், உங்களிடமிருந்து வரும் கடிதங்களை கண்டவுடன், என் கண்கள் கலங்குகின்றன. எனவே, எத்தனை மாதங்களானாலும் பொறுத்திருக்க கூடியவர்கள் மட்டும், என்னிடமிருந்து பதிலை எதிர்பாருங்கள். கடிதங்களுக்கு மட்டுமல்ல; கேள்விகளுக்கும் தான்.

கேள்விகளுக்கு மட்டும், உடனே பதில் சொல்லி விடும்படி கொஞ்சமாகவா வருகின்றன. மற்ற கடிதங்களை போல, கேள்விக்கான கடிதங்கள், 100 மடங்கு அதிகமாக வருகின்றன. எனவே, கடிதங்கள் எழுதியவர்களை விட, கேள்வி கேட்டவர்கள் தான் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும்.

எனக்கு, தினமும் எத்தனை ஆயிரம் கடிதங்கள் வருகின்றன என்பதை, நேரில் வந்து பார்த்தவர்களுக்கு மட்டும் தான் புரியும். என் நிலைமையையும், எனக்கு முன் இருக்கும் கடிதங்களையும் கண்டு, அவர்கள் கண்கள் கண்டிப்பாக கலங்கும்.

இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டுமானால், எவ்வளவு கடிதங்கள் குவிந்திருக்கும்! திக்குமுக்காடித்தான் போயிருப்பார் என்று நினைத்துக் கொண்டேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us