
பா - கே
மழை மேகம் சூழ்ந்த, ரம்மியமான ஒரு மாலை வேளை...
'மணி... வாப்பா... மழையை ரசித்தபடி, நம்ம நாயர் கடைக்கு போய், டீ குடித்து வரலாம்...' என்று அழைத்தார், லென்ஸ் மாமா.
அலுவலகத்தில், பணி எல்லாம் முடிந்து விட்டதால், டீ குடிக்க தானே கூப்பிடுகிறார், போய் வருவோம் என, கிளம்பினேன். எதிரில் வந்தார், 'திண்ணை' நாராயணன் சார். அவரையும் அழைத்து, தெரு முனையில் இருக்கும், நாயர் கடைக்கு சென்றோம்.
கடையின் தோற்றமே மாறி இருந்தது. நவீன, 'காபி ஷாப்' போன்று, உள் அலங்காரம் செய்யப்பட்டு, மேஜை - நாற்காலி போடப் பட்டிருந்தது. 'டிப் - டாப்' ஆக உடை அணிந்து, கம்ப்யூட்டர் முன் அமர்ந்து, 'பில்' போட்டு, பணம் வாங்கிக் கொண்டிருந்தார், நாயர்.
'என்ன நாயர்... ஆளே மாறிட்டீங்க... கடையும் மாறியுள்ளது...' என்று கலாய்த்தார், லென்ஸ் மாமா.
'அடடா... எந்தா பறையுன்னு சாரே... ஞான் அதே பழைய நாயர் தான்... இப்படி, 'ஷோவா' இருந்தா தான், கஸ்டமருங்க வர்றாங்க... போட்டி அதிகமாயிருச்சுல்ல...' என்று, தமிழும், மலையாளமும் கலந்து பேசினார்.
'சரி... சரி... உன் கையால், டீ போட்டால் அற்புதமா இருக்குமே... மூன்று டீ போடறியா...' என்றார், மாமா.
மாமா வைத்த, 'ஐஸ்' உடனே வேலை செய்தது.
'அதுக்கென்ன... இதோ போடறேன்...' என்று எழுந்து, டீ பாய்லர் முன் சென்றார், நாயர்.
காலியாக இருந்த இடத்தில் மூவரும் அமர்ந்தோம்.
சுவரில் மாட்டப்பட்டிருந்த, எல்.இ.டி., 'டிவி'யில் செய்தி சேனல் ஒன்றில், செய்தி வாசித்துக் கொண்டிருந்தார், இளம் பெண் ஒருவர்.
அதில், 'அமெரிக்க அதிபர், கிரீன்லாந்து தீவை, விலைக்கு வாங்க விரும்பியது. ஆனால், அத்தீவை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் டென்மார்க், அதற்கு சம்மதிக்கவில்லை...' என்று படிக்க, கடுப்பானார், லென்ஸ் மாமா.
'இந்த, டிரம்ப், நல்ல வியாபாரியப்பா... எல்லா இடத்தையும் வளைத்துப் போட பார்க்கறாரு...' என்றார்.
'அமெரிக்கா, கிரீன்லாந்தை வாங்க, இதற்கு முன், பலமுறை முயற்சி செய்தும், முடியல...' என்றார், நாராயணன் சார்.
அதுபற்றி விபரம் அறிய விரும்பி, நாராயணன் சாரிடம் கேட்க, சொல்ல ஆரம்பித்தார்:
ஆர்டிக் கடலில், அமெரிக்காவை ஒட்டியுள்ளது, கிரீன்லாந்து. உலகின் மிகப்பெரிய தீவான இங்கு, 60 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். ஏராளமான கனிமங்களும் உள்ளன
முன்பு, இத்தீவின் சிறு பகுதியை, குத்தகைக்கு எடுக்கலாமா என யோசித்தது, அமெரிக்கா. அது முடியலை. ஆனால், இன்றைய அதிபர், டொனால்ட் டிரம்ப், ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் கொடி கட்டி பறந்தவர். அதனால், கிரீன்லாந்தை மொத்தமாக வாங்கி, அதை பயன்படுத்த விரும்புகிறார்
சுதந்திர ஆட்சி கொண்டது, கிரீன்லாந்து; அதே சமயம், டென்மார்க்கின் தொடர் ஆளுமை கொண்ட பூமி. ராணுவம் மற்றும் வெளியுறவு துறை போன்றவற்றை, தொடர்ந்து கவனித்து வருகிறது. மேலும், தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள, ஆண்டுதோறும், 700 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி செய்கிறது, டென்மார்க் இந்த சூழலில், அமெரிக்கா, கிரீன்லாந்தை வாங்க, 1867லேயே முயற்சித்தது. டென்மார்க் ஒப்புக் கொள்ளவில்லை. மீண்டும், 1946ல், அப்போதைய அதிபர், ஹாரி ட்ரூமன், '100 மில்லியன் டாலர், அதையும் தங்க கட்டியாக தர தயார்...' எனக் கூறியும், டென்மார்க் மசியவில்லை
இப்படி விலைக்கு வாங்குவது, அமெரிக்காவுக்கு புதிய விஷயமல்ல. ஏற்கனவே, பல நாட்டிடமிருந்து பல இடங்களை வாங்கியுள்ளது
* கடந்த, 1763 முதல் 1801ம் ஆண்டு வரை, ஐரோப்பிய நாடான, ஸ்பெயினிடம் இருந்த, லவுசியானா என்ற பகுதியை, 15 மில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கியது
* ஸ்பெயினிடமிருந்து, 1819ல், புளோரிடாவை, 5 மில்லியன் டாலருக்கு வாங்கியது
* மெக்சிகோ நாட்டின், சில பகுதிகள் தனக்கு தேவை என, 1848 - 1856ம் ஆண்டுகளில் பேச்சு நடத்தி, இறுதியாக, 30 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது
* கடந்த, 1867ல், அலாஸ்கா நகரை, 7 மில்லியன் டாலருக்கு, ரஷ்யாவிடமிருந்து வாங்கியது. இதை, ரஷ்யா தர காரணம், எங்கோ இருந்து கொண்டு, அலாஸ்காவை கட்டிக் காக்க முடியாது என, திட்டமிட்டு விற்று விட்டது
* அமெரிக்காவின் இன்றைய விர்ஜின் தீவு, (டேனிஷ் மேற்கிந்திய தீவு) 1916ல், 25 மில்லியன் டாலர் கொடுத்து, டென்மார்க்கிடமிருந்து வாங்கியது
* தஜகஸ்தான் பகுதியில் உள்ள, 1,000 சதுர கிலோ மீட்டர், பாமிர் மலை தொடர் பகுதியை, 2011ல் விலைக்கு வாங்கி, தன்னுடையதாக்கிக் கொண்டது
* ஐரோப்பிய நாடான, ஜெர்மனியின் அருகிலுள்ள, கரோலின் மற்றும் மரியானா தீவுகளை, 1899ல், ஸ்பெயினிடமிருந்து விலைக்கு வாங்கியது
* அரபு நாடான, ஓமனிடமிருந்து, 1958ல், குவாதர் என்ற துறைமுக நகரை, 5.5 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய்களை கொடுத்து வாங்கியது...
- கூறி முடித்தார், நாராயணன் சார்.
எனக்கு தலை சுற்றியது.
'அது சரி... மில்லியன் டாலர், மில்லியன் டாலர்... என்று சொல்கிறீரே... நம் ரூபாய் மதிப்பில் எவ்வளவு என்று சொல்லக் கூடாதா...' என்றேன்.
'அட போப்பா... நம் இந்தியாவில், ஆண்டுதோறும் போடப்படும் பட்ஜெட் தொகையை விட, பல மடங்கு அதிகமாக இருக்கலாம். துல்லியமாக, தெரிய வேண்டுமானால், ஒரு வழி சொல்கிறேன். அதாவது, ஒரு மில்லியன் என்பது, 10 லட்சம்; 1 டாலர் என்பதற்கு, நம்மூர் பணத்தில் தற்போதைய மதிப்பு, 72 ரூபாய். நீயே கணக்கு போட்டு பார்த்துக்க...' என்றார், நாராயணன் சார்.
நான், 'சயின்சி'ல் கொஞ்சம், 'வீக்!' வாசகர்கள் யாராவது போட்டுச் சொல்லுங்களேன்.
அப்போது, டீயும், சமோசாவும் கொண்டு வந்து வைத்தார், நாயர்.
இது, எதையும் காதில் வாங்காமல், பக்கத்து டேபிளில் அமர்ந்திருந்த, இளம்பெண்களை நோட்டமிட்டபடி, சுடச்சுட இருந்த சமோசாவை, 'மொச்சு... மொச்சு...' என்று சாப்பிட ஆரம்பித்தார், மாமா.
மழைக்கு சுகமாக இருந்தது, ஏலக்காய் டீ. டீக்கும், சமோசாவுக்கும் காசு கொடுத்து விட்டு, நாயரிடம் விடைபெற்று, என் வாகனத்தில் பறந்தேன்.

