
பா-கே
'அந்து... என்னா, 'மசமச'ன்னு உட்கார்ந்திருக்கே, எங்கேயோ பராக்கு பார்த்துட்டு... இந்த வாரத்துக்கு, 'மேட்டரே' இன்னும் நீ குடுக்கலே...' என, படபடத்தார், உதவி ஆசிரியை, செல்வி.
காலை, 10:30 மணி --
'சிந்தனை செய் மனமே... செய்தால், 'மேட்டர்' கிடைக்கும்ன்னு உட்கார்ந்திருக்கேன்...' என, நான் கூறிக் கொண்டிருந்த நேரத்தில், ஆபீசினுள் வேகமாய் நுழைந்தார், ஆசிரியர்.
வந்த வேகத்தில், தன் சீட்டில் அமர்ந்தபடி, 'மொபைல் போனில்' எதையோ பார்த்துக் கொண்டிருந்த, உதவி ஆசிரியை, பானுமதியைப் பார்த்து, 'என்ன மேடம்... காலங்கார்த்தால வந்ததும் வராததுமாய், போனைப் பார்த்துக்கிட்டிருக்கீங்க... பாருங்க... பாருங்க... பார்த்த நேரமெல்லாம் போக, மிச்ச நேரத்தில் வேலை செய்தா போதும்...' என, சாணக்கியத்தனமாய் ஒரு, 'போடு' போட்டார்.
பீதியில், தன் போனை, 'டேபிளில்' வைத்து, வேலை செய்வது போல், பாவனை செய்தார், உதவி ஆசிரியை.
எனக்கோ, 'குபீர்' சிரிப்பு. ஆசிரியர், தன் அறைக்குள் நுழைந்ததும், நான் மெதுவாக, பானுமதியைப் பார்த்து, 'அப்படி என்ன, 'இன்டரஸ்டிங் மேட்டர்' போனில்?' எனக் கேட்டேன்.
வியர்த்த முகத்தைத் துடைத்தபடியே, 'வாட்ஸ் - ஆப்'ல, வள்ளலார் பாட்டு வந்தது... அதைப் படிக்கப் படிக்க, சுற்றிச் சுழன்று, 'கொரோனா' இந்த உலகைத் தாக்க, என்ன காரணம்ன்னு விளங்கிடிச்சு...
'முழுக்கப் படிச்சிட்டிருந்தேன்... 'என்ன பாவம் செய்தேனோ'ங்கிற தலைப்புல இருக்கு... அரசியல்வாதிங்களுக்கு ரொம்ப பொருத்தம்பா... இந்த பாடலை அனுப்பியவருக்கு நன்றி...' எனக் கூறியவர், 'ஆசிரியர்ட்ட, 'போட்டு'க் குடுத்துராதே... மறுபடி மொபைல்போனான்னு திட்டுவார்...' என்றார்.
பின், அவரே அதை, 'இன்டர்நெட்'டில் தேடி, 'பிரின்ட் அவுட்' எடுத்துக் கொடுத்தார். படித்தேன்... வள்ளலார் அமைதிப்பட்டிருக்கும், கடலுார் மாவட்டம், வடலுாரை நோக்கி, கையெடுத்துக் கும்பிட்டேன்.
இதோ பாடல்...
என்ன பாவம் செய்தேனோ!
* நல்லோர் மனதை நடுங்கச் செய்தேனோ
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ
கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!
* மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ
குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ
தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!
* மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ
உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரஞ் செய்தேனோ
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!
* ஆசை காட்டி மோசஞ் செய்தேனோ
வரவுபோக் கொழிய வழியடைத்தேனோ
வேலை யிட்டுக் கூலி குறைத்தேனோ
பசித்தோர் முகத்தைப்பாராதிருந்தேனோ!
* இரப்போர்க்குப் பிச்சை இல்லையென்றேனோ
கோள் சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ
நட்டாற்றிற் கையை நழுவ விட்டேனோ
கலங்கி யொளிந்தோரைக் காட்டிக் கொடுத்தேனோ!
* கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ
காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ
கணவன் வழி நிற்போரைக் கற்பழித்தேனோ
கருப்ப மழித்துக் களித்திருந்தேனோ!
* குருவை வணங்கக் கூசி நின்றேனோ
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ
கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ
பெரியோர் பாட்டிற் பிழை சொன்னேனோ!
* பக் ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ
கன்றுக்குப் பாலுாட்டாது கட்டி வைத்தேனோ
ஊன்சுவை யுண்டு உடல் வளர்த்தேனோ
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ!
* அன்புடை யவர்க்குத் துன்பஞ் செய்தேனோ
குடிக்கின்ற நீருள்ள குளம் துார்த்தேனோ
வெய்யிலுக் கொதுங்கும் விருக் ஷமழித்தேனோ
பகை கொண்டு அயலோர் பயிரழித்தேனோ!
* பொது மண்டபத்தைப் போயிடித்தேனோ
ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ
சிவனடியாரைச் சீறி வைதேனோ
தவஞ்செய் வோரைத் தாழ்வு சொன்னேனோ
* சுத்த ஞானிகளைத் துாஷணஞ் செய்தேனோ
தந்தை, தாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ
தெய்வ மிகழ்ந்து செருக்கடைந்தேனோ...
என்ன பாவம் செய்தேனோ, இன்னதென்றறியேனே!
(மனு முறை கண்ட வாசகம்)
- வள்ளலார்
வள்ளலார் சொல்லிச் சென்று விட்டார்... நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
ப
பி.சண்முகவடிவு என்பவர், பி.யூ., பிரைமரி ஸ்கூல் தலைமை ஆசிரியை. இப்பள்ளி, கொளத்துப்பாளையம், கங்காபுரம் தபால் நிலைய எல்லையில் உள்ளது.
அவர் ஒரு சர்தார்ஜி, 'ஜோக்'கை, 'இ - மெயில்' மூலம் அனுப்பி இருந்தார். 'ஜோக்' இதோ...
மஹாராஷ்டிர மாநிலம் புனேயிலிருந்து, பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பொது தலைநகரான, சண்டிகர் செல்லும் விமானத்தில் ஏறுகிறார், சர்தார்.
மூன்று, 'சீட்' உள்ள வரிசையில் அவருக்கு நடுவில் இருந்த, 'சீட்' ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், ஜன்னலோரம் இருந்த, 'சீட்'டில் உட்கார்ந்து கொண்டார். அது, ஒரு வயதான பெண்மணிக்கு ஒதுக்கப்பட்டிருக்க, அவர், தன்னுடைய, 'சீட்'டை விட்டுத் தருமாறு கேட்கிறார்.
'அதெல்லாம் முடியாது. நான் வெளியே வேடிக்கை பார்த்துகிட்டு தான் வருவேன். ஜன்னலோரம் உட்கார்ந்தாதான் அது முடியும்...' என்றார், சர்தார்.
பணிப்பெண்ணிடம், 'எனக்கு, என், 'சீட்'டை ஒதுக்கிக் கொடுங்க. இந்த ஆள், 'டார்ச்சர்' பண்றான்...' என்றார், பெண்மணி.
'சார்... தயவுசெய்து, இவுங்களுக்கு அந்த, 'சீட்'டை கொடுத்து, உங்க, 'சீட்'ல உட்காருங்க...' என்றார், பணிப்பெண்.
'அதெல்லாம் முடியாது. நான் வெளியே வேடிக்கை பார்த்துகிட்டு தான் வருவேன். ஜன்னலோரம் உட்கார்ந்தாதான் அது முடியும்...' என்றார், சர்தார்.
'சார்... தயவுசெஞ்சு, 'சீட்'ட விட்டுக் கொடுங்க... கெஞ்சி கேட்கிறேன் சார்...' என்றார், விமான துணை கேப்டன்.
'அதெல்லாம் முடியாது. நான் வெளியே வேடிக்கை பார்த்துகிட்டு தான் வருவேன். ஜன்னலோரம் உட்கார்ந்தா தான் அது முடியும்...' என்றார், சர்தார்.
கேப்டன் வருகிறார். நடந்த விவரங்களை கேட்டு, சர்தார்ஜியின் காதில் மெதுவாக எதையோ கூறுகிறார். அதிர்ந்துபோன சர்தார், தன்னுடைய, 'சீட்'டுக்கு மாறி உட்காருகிறார்.
ஆச்சரியமடைந்த மற்றவர்கள், கேப்டனிடம் தனியே சென்று, 'என்ன சொன்னீர்கள்...' என கேட்டனர்.
'ஒன்றுமில்லை ஜென்டில்மேன்... நடுவுல இருக்கற, 'சீட்' மட்டும் தான், சண்டிகர் போகும்... மற்ற, 'சீட்'கள் எல்லாம், குஜராத் போகும்ன்னு சொன்னேன். அவ்வளவு தான்...' என்றார், கேப்டன்.
சர்தார்ஜிகள், எவ்வளவு, 'புத்திசாலிகள்' பார்த்தீர்களா?
இதில், இன்னொரு சோகம் இருக்கிறது...
நாம் கூறும், 'சர்தார்ஜி ஜோக்'குகளை, அவர்கள், 'மதராசி ஜோக்' என மாற்றி, நம்மை கிண்டலடிக்கின்றனர்!
யார் புத்திசாலி... மதராசிகளா, சர்தார்ஜிகளா?