தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஆக 02, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 02, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா-கே

ஆபீசில் பெரும்பாலானவர்களுக்கு, 'ஒர்க் பிரம் ஹோம்' போட்டாச்சு. ஆசிரியர், 'எடிட்' செய்ய வேண்டிய செய்திகள் அனைத்தையும், 'பிரின்ட் அவுட்' எடுக்க வேண்டிய பொறுப்பு, என் தலையில் விழுந்தது.

வாரமலர் இதழுக்கு வரும் கடிதங்கள் அனைத்தும், 'இ - மெயிலில்' வருவதால், தினமும், ௭௦௦, ௮௦௦ கடிதங்களை, 'பிரின்ட் அவுட்' எடுத்து எடுத்து, பிரின்டரில், 'டோனர்' அடிக்கடி தீர்ந்து போகிறது.

கமிங் டு தி பாயின்ட்...

நாளிதழுக்கு வந்த, 'இது உங்கள் இடம்' கடிதங்களை, உதவி ஆசிரியர் ஒருவர், 'ரிமோட்'டில், 'எடிட்' செய்து கொடுக்க, அவற்றை ஆசிரியருக்கு, 'பிரின்ட் அவுட்' எடுத்துக் கொடுத்தேன்.

அவற்றில் ஒன்றை, 'எடிட்' செய்ய முற்பட்ட நேரத்தில், என்னை அழைத்தார்.

'அந்து, உனக்கு கள் பிடிக்குமா?' எனக் கேட்டார்.

'என்ன ஐயா, இப்படிக் கேட்டுட்டீங்க... நான் தான், அந்த லாகிரி வஸ்துக்கள் பக்கமே தலை வைத்துப் படுக்கறதில்லையே...' என்றேன்.

வெடிச் சிரிப்பு சிரித்தவர், 'அதான்... 'நாயகன்' புத்தகத்துலயே, உன், 'கள் உண்ணாமை' பத்தி கட்டுரை வெளியாகி இருக்கே...' என்றவர், 'நீ தான் சரியான ஆள்... இந்த கடிதத்தைப் பார்...' என, காட்டினார்.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியிலிருந்து, எஸ். ராம் மணி என்பவர் எழுதியிருந்த கடிதம் அது. அதில், 'இருக்கிறார்கள், துடிக்கிறார்கள், பழகுகிறார்கள்' என, ஏகப்பட்ட, 'கள்' சமாசாரங்கள் இருந்தன. எனக்குப் புரிந்து விட்டது!

'இதை, 'எடிட்' செய்த உதவி ஆசிரியரைக் கூப்பிட்டு, அவர் எவ்வளவு, 'கள்' போடுவார்ன்னு கேளு...' என்றார்.

அவர் அறையிலிருந்து வெளியே வந்து, ஆபீஸ், 'லேண்ட் லைன்' மூலம், உதவி ஆசிரியரைத் தொடர்பு கொண்டேன்.

மூச்சு வாங்கியபடியே என் அழைப்பை எடுத்த அவர், 'அந்துவா... எப்படி பா இருக்கே... பத்திரமா இரு...' என்றவர், நான் சொல்ல வந்ததைக் கூட கேட்க மனமில்லாமல், 'அந்து... 'கொரோனா டெஸ்ட் ரிசல்ட்' வந்திருச்சு... நான் பெயில் ஆயிட்டேன்' என்றார்.

'என்னது... பெயிலா...' என்றேன்.

'அதான்பா... நெகட்டிவ்...' எனக் கூறி, 'கடகட'வென சிரித்தார். தனக்கு, 'கொரோனா' இல்லை எனத் தெரிந்ததும் வந்த சந்தோஷ பூரிப்பு!

இங்கே ஒரு தகவல்...

'கொரோனா டெஸ்டு'க்கு, மூக்கு மற்றும் தொண்டை திரவம் கொடுத்த பிறகு, 'ரிசல்ட்' வரும் வரையிலான இடைப்பட்ட இரண்டு நாட்களில், 'டெஸ்ட்' கொடுத்தவர்கள் படும் பாடு இருக்கிறதே... சொல்லி மாளாது. பயங்கர, 'திக்... திக்...' தான்.

இரவில் துாக்கமின்றி, வியர்த்து வழிய, எழுந்தமர்கின்றனர்; பகல் நேரத்தில், எதையோ பறிகொடுத்தாற்போல், சாப்பிட மறுக்கின்றனர்.

திடீரென தலையைக் குப்புறக் கவிழ்த்து அமர்கின்றனர்; சிந்தனையே ஓடுவதில்லை அவர்களுக்கு!

'பாசிட்டிவ்' வந்தால் கேட்கவே வேண்டாம்... அதைச் சொல்ல, இங்கு இடம் பத்தாது; பொறுப்பாசிரியர் என்னை, 'டின்' கட்டி விடுவார்!

கமிங் பேக் டு த பாயின்ட்...

அந்த உதவி ஆசிரியரிடம், 'சந்தோஷமா... இனிமே, கள் குடிக்காதே...' என்றேன்.

அவருக்கோ, தலையும் புரியவில்லை; வாலும் புரியவில்லை!

'என்னப்பா அந்து... என்ன, 'பிட்'டு இது...' என்றார்.

'மேட்டரை எடிட் செய்யச் சொன்னா, 'கள்'ளை எல்லாம் அப்படியே விட்டுடறியே...' என்றதும், 'ஆ... புரிஞ்சிடிச்சு... ரெண்டு நாளா ஒரே, 'டிப்ரஷன்'பா... அதான், தாறுமாறா, 'எடிட்' பண்ணி, எல்லாத்தையும், 'மிஸ்' பண்ணிட்டேன்... செம்பட்டி மேட்டர் தானே... மன்னிச்சிக்கோ... ஆசிரியர்கிட்டே நான் மன்னிப்பு கேட்டேன்னு சொல்லிடுபா... ப்ளீஸ்...' என அழாத குறையாகக் கெஞ்சினார்.

கூடவே, 'நாயகன் புத்தகம் தலைகீழ் பாடம் எனக்கு... அது கூட, என் மனசுல நிழலாடல பார்த்துக்கோ... பை த பை... எங்கம்மா இப்ப, 'நாயகன்' புத்தகம் படிச்சிட்டிருக்காங்க... அதை வாங்கி, மறுபடி, 'கள்' சேப்டரைப் படிச்சிடறேன்... எனக்காக கொஞ்சம் ஆசிரியரிடம், 'ரெக்கமண்ட்' செய்ப்பா... ப்ளீஸ்...' என, மீண்டும் கெஞ்சினார்.

ஆசிரியரிடம் அனைத்தையும் விளக்கினேன்.

'கடகட'வென சிரித்த ஆசிரியர், 'இனிமேல், மேட்டரில், 'கள்' போடும் தவறை, அவர் செய்ய மாட்டார். இப்படி நல்லவிதமா, எப்போதும் மறக்காத வகையில், தவறைச் சுட்டிக் காட்டினால், தவறுகளைப் பெரும்பாலும் தவிர்க்கலாம் பா...

'அதை விட்டுட்டு, 'எத்தனை முறை சொல்றது... திரும்பத் திரும்ப செய்யிறியே... உன் சம்பளத்தைப் பிடிக்கப் போறேன்... அறிவே இல்லையா உனக்கு...' என, 'காச்மூச்'னு கத்தினா, கத்தறவங்களுக்கும், ரத்தக் கொதிப்பு ஏற்படும்... கேக்கறவங்களுக்கும், 'பீப்பி' ஏறும்...

'அதையெல்லாம் தாண்டி, அந்த அழுத்தத்துலயே அந்த ஊழியர், மேலும் மேலும் தவறு செய்வார்... புரிஞ்சுதா...' எனக் கூறினார்.

அவருடைய சாணக்கியத்தனத்தை எண்ணி வியந்தேன்!



புத்தகம் ஒன்றில் படித்தது:

அரிசி தவிட்டு எண்ணெயை தான், 'ரைஸ் பிரான் ஆயில்' என, ஆங்கிலத்தில் அழைக்கிறோம். இதை தான், சீனா, ஜப்பான் போன்ற வெளிநாடுகளில், அதிகமாக உபயோகிக்கின்றனர்.

இந்தியாவில், ஏராளமாக அரிசி விளைந்தும், அதிக அளவில் தயாரிக்கப்படுவதில்லை.

இதில் அதிக அளவு, வைட்டமின், 'ஏ' உள்ளது. இதயத்திற்கு இதமானது. ஜப்பானில், 'ஹார்ட் ஆயில்' என்றும், அமெரிக்காவில், 'ஹார்ட் புட்' என்றும் அழைக்கப்படுகிறது.

'ரைஸ் பிரான் ஆயில்' குறைவான அடர்த்தி கொண்டது. விரைவில் சூடாவதால், 20 சதவீதம் வரை, எரிபொருள் சேமிக்கலாம். இதில், பிசுபிசுப்பு தன்மை குறைவாக இருப்பதால், எண்ணெய் வைத்திருக்கும் பாத்திரத்தில் கூட, பிசுபிசுப்பு தன்மை இருக்காது.

'கொலஸ்ட்ரால்' குறைவு. இதற்கு தனி மணமும் கிடையாது; அதனால், நாம் சமைக்கும் உணவின் சுவை, அப்படியே இருக்கும். சிக்கு வாசனை வரவே வராது; மொறு மொறுப்பு குறையாது. வயதானவர்களுக்கு நெஞ்செரிச்சல் இல்லாமல், எளிதில் ஜீரணமாகும்.

மேலும், கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. நம் ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, நீரிழிவு நோயையும் கட்டுக்குள் வைக்கிறது.

தோல் சுருக்கம், அரிப்பு மற்றும் தலையில் பொடுகு வராமல் பாதுகாக்கிறது; அதனால், உலகளவில் பல அழகு சாதன பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. பெண்களுக்கு, மாதவிடாய் பிரச்னைகளிலிருந்து விடுவித்து, புத்துணர்ச்சி தருகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

இந்த எண்ணெயை, அமெரிக்க இதய சங்கமும், உலக சுகாதார நிறுவனமும் மிகவும் பயனுள்ள எண்ணெயாக பரிந்துரைக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us