தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : மார் 14, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 14, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா-கே

'வீட்டில் இருக்கும் சேர், சோபா எல்லாம் பழசாகி விட்டது. காயலான் கடைக்கு போட்டுட்டு, புதிதாக வாங்கி வைக்க உத்தரவிட்டுள்ளார், வீட்டுக்காரம்மா...' என்றார், சோகமாக, லென்ஸ் மாமா.

'நம்மிடம் குறைந்த விலைக்கு வாங்கி, கொஞ்சம், 'டிங்கரிங்' பார்த்து, புதிது போல் மாற்றி, அதிக லாபத்துக்கோ, ஏலத்துக்கோ விற்று, காசு பார்த்துடுவாங்க, மாமா. யாருக்காவது இலவசமா கொடுத்துடுங்களேன். உங்க பேரை சொல்லி, உபயோகப்படுத்திப்பாங்க...' என்றேன்.

'மணி... ஏலம் என்றதும் ஒரு விஷயம் நினைவுக்கு வருது. கொஞ்சம் இரு...' என்று கூறியவர், தன் பையிலிருந்து ஒரு ஆங்கில நாளிதழை எடுத்துக் காட்டினார்.

'ஆங்கில இதழை எதுக்கு என்னிடம் காட்டுறீங்க...' என்றேன்.

'சும்மா படம் பார்க்க...' என்று கிண்டலாக கூறியவர், தொடர்ந்தார்...

'பழைய ஹாலிவுட் நடிகையர், படத்தில் நடிக்கும்போது, தான் பயன்படுத்திய, ரசிகர்களை கவர்ந்த கவர்ச்சி உடைகளை ஏலத்தில் விடுவாங்கப்பா... அப்படி, அந்த உடைகள் ஏலம் போய், கோடிக்கணக்கில் லாபம் சம்பாதிச்சு கொடுத்துருக்காம்... படித்து சொல்றேன் கேள்...' என்று, படிக்க ஆரம்பித்தார்:

* கடந்த, 1955ல் வெளிவந்த, தி செவன் இயர் இட்ச் என்ற படத்தில், மர்லின் மன்றோ அணிந்திருந்த ஆடை காற்றில் பறப்பது போன்ற புகைப்படம், உலகம் முழுவதும் பிரபலமானது.

அந்த காட்சியில் மர்லின் மன்றோ அணிந்திருந்த வெள்ளை ஆடை, 2011ல் ஏலத்தில், விற்பனைக்கு வந்தது. அதை, 34 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார், ஒருவர்.

உலகத்திலேயே இன்று வரை, மிக அதிக விலைக்கு ஏலம் போன ஆடை இது தான்.

* கடந்த, 1964ல், மை பேர் லேடி என ஒரு படம் வெளிவந்து, வெற்றிகரமாக ஓடியது. இதில் நடித்த ஆன்டிரி ஹெப்பர்ன் அணிந்திருந்த நுாதன, 'ஆஸ்காட்' ஆடை மற்றும் தொப்பி, 2011ல் நடந்த ஏலத்தில், 33.22 கோடி ரூபாய்க்கு விற்பனையானது.

* கடந்த, 1997ல் வெளியான, டைட்டானிக் படத்தில், 'யூ ஜம்ப், ஐ ஜம்ப்' என, ஒரு காட்சி உண்டு. அப்போது, கேட் வின்ஸ்லெட் என்ற நடிகை அணிந்திருந்த ஆடை, 2012ல், 2.43 கோடி ரூபாய்க்கு விலை போனது.

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த இரண்டு வயதான நீயூகிம் என்ற பெயருள்ள ரேஸ் புறாவை, சீன நபர், 13.9 கோடி ரூபாய்க்கு வாங்கினார். ஏலத்தின போது, அறிவிக்கப்பட்ட ஆரம்ப விலை, 18 ஆயிரம் ரூபாய் தான்.

அவர் படித்து முடித்ததும், 'அம்மாடியோவ்... இவ்வளவு கோடி ரூபாய்க்கா ஏலம் எடுப்பர். இதையெல்லாம் ஏலம் எடுத்து என்ன செய்வர்; வீட்டில் வைத்து அழகு பார்ப்பரா...' என, நினைத்துக் கொண்டேன்.



ரஷ்யாவின் அதிபராக, ஸ்டாலின் இருந்த காலம். அப்போது, அந்நாட்டைச் சேர்ந்த மனோதத்துவ நிபுணரான உல்ப் மெஸ்சிங் என்பவர் மிகவும் புகழ்பெற்றிருந்தார்.

மந்திரவாதிகள் மற்றும் மாயாஜாலம் செய்யும் கண்கட்டி வித்தைக்காரர்கள் போன்று, பலரையும் வெல்லக்கூடிய வகையில் பல அதிசயமான செயல்களை செய்து கொண்டிருந்தார், உல்ப் மெஸ்சிங்.

மந்திர, தந்திரங்கள் செய்யாமல், எண்ண அலைகளை கொண்டு மாபெரும் சக்திமிக்க செயல்களை உல்ப் மெஸ்சிங் செய்து வரும் செய்தி, ஸ்டாலினுக்கு வந்தது. இதைப் பற்றி கேள்விப்பட்டு ஆச்சரியம் அடைந்தார்.

ஒருநாள், உல்ப் மெஸ்சிங்கிடம் தருமாறு, ஒரு கட்டளை கடிதத்தை அனுப்பியிருந்தார், ஸ்டாலின்.

அதில், 'உல்ப் மெஸ்சிங்... மூன்று நாட்களுக்குள், ஸ்டாலினை அவரது கிரெம்ளின் அரண்மனையில் சந்திக்க வேண்டும்...' என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

ஸ்டாலினை தான் சந்திக்கவில்லை என்றால், தன் தலை தப்பாது என்பதை அறிந்திருந்தார், மெஸ்சிங். அதேசமயம், தன் திறமையை காட்டி, ஸ்டாலினுக்கு எண்ணங்களின் சக்தியை புரிய வைக்க வேண்டும் என்பதிலும் தீவிரமாக இருந்தார்.

மூன்றாவது நாள், ஸ்டாலின் அறையில், அவரது மேஜைக்கு எதிரே, ஒரு உருவம் நின்றது. அந்த முகம் புதியதாக தெரிந்தது.

'யார் நீ...' என்று கேட்டார், ஸ்டாலின்.

'உல்ப் மெஸ்சிங்...' என்றார், மெஸ்சிங்.

'உன்னை யார் உள்ளே அனுமதித்தது. அனுமதி அட்டை வைத்துள்ளாயா...' என்றார், ஸ்டாலின்.

'இல்லை, நான் வழக்கமான வழியில் தான் வந்தேன். யாரும் என்னை தடுக்கவில்லை...' என்றார், மெஸ்சிங்.

பதறிப் போனார், ஸ்டாலின். தன் மேஜையின் மேலும், கீழும் இருந்த பல பாதுகாப்பு பொத்தான்களை அழுத்தினார். அடுத்த நிமிடம், ஒரு பெரிய பாதுகாப்பு படையே, அங்கே குவிந்து விட்டது.

தான் மிகவும் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டிருந்த, ஸ்டாலினின் கோட்டையில், எப்படி இந்த மெஸ்சிங் உள்ளே நுழைந்தார் என்பது, அவருக்கு ஆச்சரியம் தந்தது.

ஒவ்வொரு வாயிலிலும் நின்றவர்களிடம், 'யார் இவரை உள்ளே விட்டது...' என்று கேட்டார், ஸ்டாலின்.

அனைவரும், 'நாங்கள், நமது பாதுகாப்பு துறை தளபதி லெவ்ரெண்டி பெரியாவை மட்டுமே உள்ளே அனுப்பினோம்; வேறு யாரையும் இங்கே அனுப்பவில்லை...' என்றனர்.

ஒரு கணம் பதற்றத்தை குறைத்து, மெஸ்சிங் பக்கம் திரும்பினார், ஸ்டாலின்.

'சரி... உண்மையை சொல், நீ எப்படி உள்ளே வந்தாய்...' என்று கேட்டார்.

'மரியாதைக்குரிய தலைவர் ஸ்டாலின் அவர்களே... உங்களை வந்து சந்திக்குமாறு கடிதம் அனுப்பியிருந்தீர்கள். அந்த கணம், நான் வலையில் சிக்கிய எலி என்று புரிந்து கொண்டேன். எனவே, என் திறமையை தங்களுக்கு புரிய வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

'ஒரு சிறிய துரும்பும் புக முடியாத உங்கள் பாதுகாப்பு வளையத்தில் புகுந்து, உங்களை சந்திக்க விரும்பினேன். எனவே, கடந்த இரண்டு நாட்களாக, 'நான் தான் தளபதி லெவ்ரெண்டி பெரியா...' என்று, எனக்குள் சொல்லி வந்தேன்.

'அந்த வார்த்தைகள் என் உருவத்தை மாற்றி, இங்கிருந்த பாதுகாப்பு வீரர்களுக்கு லெவ்ரெண்டி பெரியா உருவத்தை காட்டி தந்து விட்டது. நான் இப்படித்தான் உள்ளே வந்துள்ளதாக நம்புகிறேன்...' என்றார், மெஸ்சிங்.

ஒரு மனிதன், தன் எண்ண வலிமை மூலம், மாபெரும் சாதனைகளை நிகழ்த்த முடியும் என்பதற்கு, இந்நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டாக இன்று வரை கருதப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us