தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஏப் 25, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 25, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா-கே

அலுவலகம் பரபரப்பாக இயக்கிக் கொண்டிருந்த, ஒரு காலை நேரம்...

'திண்ணை' பகுதிக்கு, மேட்டர் கொடுக்க வந்த நாராயணன், 'டீ கடை பெஞ்ச்' அரட்டையை முடித்து வந்த குப்பண்ணா, லென்ஸ் மாமா மற்றும் ஆசிரியரை சந்திக்க, தென் மாவட்டம் ஒன்றிலிருந்து வந்த ஆன்மிக பெரியவர் என, நான்கு பேரும், சீரியசாக பேசிக் கொண்டிருந்தனர்.

மற்ற அலுவலர்களுக்கு டீ கொடுத்து முடித்து, இவர்களுக்கு கொடுக்க ஆரம்பித்தேன். மாமா, மசாலா வேர்க்கடலை கேட்டதால், அதையும் பிரித்து, அவர்கள் முன் வைத்து, ஏலக்காய் டீயை பதமாக ஆற்றிக் கொடுத்தேன்.

அவர்கள் பேச்சில் ஹிந்து கோவில்கள் பற்றி அடிபடவும், சமீபத்தில், 'ஈஷா' ஜக்கி வாசுதேவ், கோவில்களை காப்பாற்ற, 'கோவில் அடிமை நிறுத்து' என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளது பற்றி பேசுகின்றனர் என்று நினைத்து, அங்கிருந்து நகர ஆரம்பித்தேன்.

ஆன்மிக பெரியவரை சுட்டிக் காட்டி, 'மணி... கொஞ்சம் இரு. நம் கோவில்கள் பற்றி அருமையான தகவல்கள் கூற ஆரம்பித்துள்ளார். நீயும் கேட்டு பாரு...' என்றார், மாமா.

'தமிழகத்தில், சோழர்கள் மட்டுமே கட்டிய, 40 ஆயிரம் கோவில்கள் இருக்கின்றன. இவ்வளவு கோவில்கள் கட்ட என்ன அவசியம்?' என்று, என்னை பார்த்து கேட்டார், ஆன்மிக பெரியவர்.

நான், 'திரு திரு'வென விழிக்க, அவரே தொடர்ந்தார்:

சோழர் காலத்தில், தமிழகம் தான், உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு. சுமார், 40 ஆயிரம் கோவில்களை, சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினர். அன்று, உலகிலேயே உயர்ந்த கட்டடம், தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரமும் தான்.

அன்று, தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால் போர்த்தப்பட்டது. இதுபற்றி கல்வெட்டும் உள்ளது. இந்த தங்கப் போர்வை, 1311ல், அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதியான, மாலிக்கபூரின் படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு, 500 யானைகள் மேல், எடுத்துச் செல்லப்பட்டது.

இவ்வளவு கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது?

எல்லாம் கடல் வாணிபம் மற்றும் ஏற்றுமதி தான். சோழ நாட்டில், தங்கச் சுரங்கம் கிடையாது. இரும்பு சாமான்கள், துணிகள், கைவினை பொருட்கள், தானிய ஏற்றுமதி மூலம், தங்கம் கிடைத்தது.

உலகிலேயே, ஒரே சீராக, 80 லட்சம் ஏக்கர் விளை நிலம், காவிரி படுகை பகுதியில் அமைந்திருந்தது. மூன்று போக சாகுபடிக்கு, காவிரியில் நீர் வந்து கொண்டிருந்தது.

வியாபாரத்திலும், ஏற்றுமதியிலும், விவசாயத்திலும் கிடைத்த பணம் மற்றும் தங்கத்தை, சோழர்கள், தங்கள் படை பலத்தை பெருக்கிக் கொள்ள பயன்படுத்தினர்.

மலேயா காடுகளிலிருந்தும், மைசூர் காடுகளிலிருந்தும் யானைகள் பிடித்து வரப்பட்டன. தங்கம் கொடுத்து, பர்மாவிலிருந்து, குதிரைகள் வாங்கினர்.

தமிழகத்தை ஆண்ட பெரும்பாலான அரசர்கள், தங்கள் ஆட்சியில், மருத்துவமனை கட்டவில்லை, கல்விச் சாலை அமைக்கவில்லை. ஆனால், கோவில்களை கட்டினர். அதற்கு காரணம் இருக்கிறது.

எந்த ஒரு அரசும் பட்ஜெட் போடும்போது, வரி வசூல் என்ன, அதில் அரசு நடத்த, அதிகாரிகளுக்கு ஆகும் செலவு, மக்கள் நல திட்டங்களுக்கு ஆகும் செலவு என்று கணக்கெடுத்து, தன்னிறைவு திட்டத்தை அடையதான் நிதி நிலை அறிக்கை போடுவர்.

இதையே தான் கோவில்கள் மூலமாக செய்தனர், அரசர்கள்.

அரசன், கோவில் கட்ட ஆரம்பித்தவுடன், கட்டுமான பணிக்கு, அந்த ஊரை சுற்றியுள்ள கட்டுமான கலைஞர்கள், சிற்ப கலைஞர்கள், தச்சர்கள், கட்டுமான பொருட்களான செங்கல், சுண்ணாம்பு போன்றவற்றை உற்பத்தி செய்வோர்...

அதை ஓரிடத்திலிருந்து கோவில் கட்டும் இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்து ஊழியர்கள், ஓவியம் தீட்ட, வர்ணம் அடிக்க, ஓவிய கலைஞர்கள்... இப்படி அனைவருக்கும் அரசு வேலை கிடைத்தது.

கோவிலுக்கு மானியமாக கொடுக்கப்பட்ட நிலங்களை, விவசாயிகளுக்கு குத்தகை விட்டு, விவசாய உற்பத்தி செய்யப்பட்டது. அதற்கு ஒரு சமூகம்.

கோவிலுக்கு கொடுக்கப்பட்ட பசு மாடுகளை கவனிப்பதற்காக, ஒரு சமூகம்; இதனால், கோவிலுக்கும், அந்த கிராமத்தாருக்கும் பால் சார்ந்த பொருட்கள் கிடைத்தன.

தெய்வத்துக்கு, நைவேத்தியம் சமைக்க, சமையற் கலைஞர்கள். அதற்கு ஒரு சமூகம். சமையல் பாத்திரங்கள் செய்ய, மண் பானை செய்வோர் மற்றும் உலோக பாத்திரம் செய்வோர், அதற்கு ஒரு சமூகம். பூஜைகளை கவனிக்க ஒரு சமூகம்.

நந்தவனம் மூலம் தெய்வத்திற்கு பூ மாலை மற்றும் அலங்கார சேவை செய்ய, நந்தவனம் காப்போருக்கு வேலை. அதற்கு ஒரு சமூகம். தொடர்ந்து வேலை இருக்க, அதற்கேற்ப கோவில் உற்சவங்கள் நடத்தப்பட்டன.

மங்கள இசை இசைக்கும் கலைஞர்கள், ஓர் சமூகம். கூத்து கலைஞர்கள் என, அவர்களுக்கும் ஆண்டு மானியம் மற்றும் வேலை.

தெய்வத்திற்கு வஸ்திரங்கள் நெய்ய, ஒரு சமூகம். அந்த வஸ்திரங்களை துவைக்க, ஒரு சமூகம். அவருக்கும் தொடர்ந்து கோவில் மானியம் மூலம் வேலை.

கோவிலை சுத்தமாக வைத்துக்கொள்ள, ஒரு சமூகம். அவருக்கும் கோவில் மூலம் வருமானம்.

இவை அனைத்தையும் நிர்வாகம் செய்ய, கணக்கு பார்க்க, ஒரு சமூகம்.

இவர்கள் அனைவரும் அவரவர் வேலையை பார்க்க, அதன் மூலம் வாழ்வாதாரம் பெறவும், கோவில் ஒரு மிகப்பெரிய தொழிற்சாலையாக, ஆன்மிகம் சார்ந்த வாழ்வாதாரம் தரும் இடமாக அமைக்கப்பட்டது.

பெரு வெள்ளம் வந்து ஊரே மூழ்கினாலும், கோவிலின் கோபுர கலசத்தில், 12 ஆண்டு வரை கெடாத, அந்த கிராமத்தின் மண்ணுக்கேற்ப விளையும் விளை பொருட்களின் விதை பொருட்கள். 12 ஆண்டுக்கு ஒருமுறை, அதை மாற்றி அமைத்து, மராமத்து பணிகள் மேற்கொள்ள, மேற்சொன்ன அனைவருக்கும் ஒரு கூட்டு வேலை வாய்ப்பு.

இப்படி, அவரவருக்கு தெரிந்த பணி, அதை சார்ந்த சமூகம், ஒன்றிணைந்து தன்னையும் காப்பாற்றிக் கொண்டு, தன்னிறைவு வாழ்க்கை என, வாழ்வதற்கு கட்டமைக்கப்பட்டதே, நம் கோவில்கள்.

இப்படி கோவிலை வைத்து, ஒரு தன்னிறைவு பொருளாதாரத்தை உலகிற்கு வாழ்ந்து காட்டியதாலேயே, தமிழகம், உலகத்துக்கு வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறது.

கோவில்கள் இல்லாமல் போனால் வாழ்வாதாரம் கெடும் என்பதை, அந்நிய சக்திகள் அறிந்திருந்தனர். இந்த கட்டமைப்பை உடைக்க, தன்னிறைவு பொருளாதாரத்தை தகர்க்க, கோவிலின் மீது மாற்று மத படையெடுப்பு நடத்தப்பட்டது என்பது, வரலாறு சொல்லும் உண்மை.

நான், பல ஊர்களுக்கு சென்று, அங்குள்ள கல்வெட்டுகளை ஆராய்ந்தும், பழைய நுால்களை படித்தும், நம் கோவில்களின் தொன்மையையும், சிறப்புகளையும் தொகுத்து, புத்தகமாக வெளியிட இருக்கிறேன். அது சம்பந்தமாக, ஆசிரியரை சந்திக்க வந்துள்ளேன்.

- இவ்வாறு கூறி முடித்தார், அந்த ஆன்மிக பெரியவர்.

அவர் கூறிய விஷயங்களை கேட்டு ஆச்சரியமடைந்தோம்.

'இனி, கோவிலுக்கு சென்றால், எண்ணெயை, துாணில் துடைப்பது, விபூதி பிரசாதத்தை ஆங்காங்கு கொட்டி, அசுத்தம் செய்வது போன்ற எந்த செயல்களையும் செய்யக் கூடாது. செய்பவர்களையும் தடுக்க வேண்டும்...' என்று கூறி சென்றனர், நாராயணனும், குப்பண்ணாவும்.

தமிழகத்தில் பிறந்ததற்காக பெருமைப்பட்டபடி, நாங்கள், எங்கள் வேலையை பார்க்க சென்றோம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us