தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஜூன் 13, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 13, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா - கே

ஊரடங்கு அமலில் இருந்த, மே மாத இறுதியில், ஒருநாள்...

வாரமலர் இதழுக்கு, 'இ - மெயிலில்' வந்திருந்த கடிதங்களை, உதவி ஆசிரியை, 'பிரின்ட்' கொடுக்க, அந்தந்த பகுதிக்குரியதை பிரித்துக் கொடுக்கும் வேலையில் மும்முரமாக இருந்தேன்.

தன் மொபைல் போனில் மேய்ந்துக் கொண்டிருந்தார், லென்ஸ் மாமா.

அப்போது, பணி ஓய்வு பெற்ற பள்ளி தமிழ் ஆசிரியர் ஒருவர், உள்ளே வந்தார். ஓய்வுபெற்ற பின்னரும், நுாலகம் சென்று படிப்பது, அக்கம்பக்கத்தில் உள்ள குழந்தைகளுக்கு, தமிழ் சொல்லிக் கொடுப்பது, தினமலர் நாளிதழுக்கு படைப்புகள் எழுதி அனுப்புவது என்று, சுறுசுறுப்பாக இருப்பார்.

தன்னுடைய இரு சக்கர வாகனத்தில், அவ்வப்போது, அலுவலகம் வந்து செல்வார். தமிழில் ஏதாவது சந்தேகம் என்றால், உதவி ஆசிரியைகள் இவரிடம் தான் விளக்கம் பெறுவர்.

'கம்மிங் பேக் டு த பாயின்ட்!'

வந்தவர், நேராக, லென்ஸ் மாமா எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார்.

'மணி... ஒரு கப் டீ கிடைக்குமா... வெளியில் டீக்கடை எதுவும் திறந்திருக்கவில்லை பா...' என்றார்.

அலுவலகத்தில் உள்ளவர்களுக்காக தயார் செய்து, 'பிளாஸ்க்'கில் வைத்திருந்த டீயை ஒரு கப்பில் ஊற்றி, அவரிடம் கொடுத்தேன்.

மொபைல் போனில் எதையோ பார்த்து, மாமா, உரக்க சிரிக்க, 'என்னாச்சு மாமா...' என்றேன்.

'மணி... காமெடி நடிகர் வடிவேல், 'டுவிட்டரில்' ஒரு மெசேஜ் போட்டிருக்கார்பா... அவர் நடித்த ஒரு படத்தில், சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பது போல், ஒரு காமெடி காட்சி வரும் அல்லவா! அதை போட்டு, 'இந்த, 'கொரோனா' ஊரடங்கில், மக்கள், சும்மா இருக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்த கொடுமை எப்போது தான் தீருமோ...' என்று, 'மெசேஜ்' போட்டிருக்கார். அந்த காமெடி காட்சியைப் பார்த்துத் தான் சிரித்தேன்...' என்றார்.

தன் எதிரில் அமர்ந்திருந்த தமிழ் ஆசிரியரை அப்போது தான் பார்த்து, 'வணக்கம் ஐயா...' என்றார்.

பதிலுக்கு வணக்கம் கூறிய அவர், 'சும்மா என்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?' என்று கேட்டார்.

'ஆரம்பிச்சுட்டார்யா...' என்று, வடிவேல், 'ஸ்டைலில்' கூறியவர், 'நீங்கள் அதைப் பற்றி எதையோ சொல்ல விரும்புகிறீர்கள் என்று நினைக்கிறேன். சொல்லி விடுங்கள்...' என்றார், மாமா.

'தமிழ் ஆசிரியர் எப்போது வந்தாலும், 'எஸ்கேப்' ஆகிவிடும் மாமாவா இப்படி கூறுகிறார்...' என்று ஆச்சரியமாக மாமாவை பார்க்க, 'அப்படி பார்க்காத மணி... உன் மனசுல என்ன ஓடுதுன்னு புரியுது. ஆசிரியர், 'அசைன்மென்ட்' எதுவும் இன்னும் தரல... வெளியே போக முடியாது, அதான்...' என்றார்.

சொல்ல ஆரம்பித்தார், தமிழ் ஆசிரியர்:

அடிக்கடி நாம் உபயோகிக்கும் வார்த்தை தான் இந்த, சும்மா.

சும்மா என்ற இந்த வார்த்தைக்கு, தமிழில், 15 அர்த்தங்கள் உண்டு. வேறு மொழிகளில் இல்லாத சிறப்பை, நாம் அடிக்கடி கூறும் இந்த, சும்மா எனும் வார்த்தை எடுத்துக் காட்டுகிறது.

1.சும்மா இருங்கள் - அமைதியாக; 2.சும்மா இருக்கிறேன் - கொஞ்ச நேரம் களைப்பாறியபடி; 3.சும்மா சொல்லக் கூடாது அருமை - உண்மையில்; 4.சும்மா கிடைக்காது - இலவசமாக; 5.சும்மா கதை அளக்காதே - பொய்; 6.சும்மா தான் இருக்கிறது எடுத்துக்கொள் - உபயோகமற்று; 7.சும்மா சும்மா சீண்டுகிறான் இவன் - அடிக்கடி. 8.இவன் இப்படித்தான், சும்மா சொல்லுவான் - எப்போதும்; 9.ஒன்றுமில்லை, சும்மா சொல்கிறேன் - தற்செயலாக; 10.இந்த பெட்டி சும்மா தான் இருக்கிறது - காலி; 11.சொன்னதையே சும்மா சொல்லாதே - மறுபடியும்; 12.சும்மா வெறும் கையோடு போகக் கூடாது - ஒற்றுமில்லாமல்; 13.சும்மா தான் இருக்கிறோம் - சோம்பேறித்தனமாக; 14.சும்மா ஏதாவது உளறுவான் - வெட்டியாக; 15. எல்லாமே சும்மா தான் சொன்னேன் - விளையாட்டிற்கு.

நாம் அன்றாடம் உபயோகிக்கும் இந்த சும்மா என்கிற ஒரு சொல், நாம் பயன்படுத்தும் இடத்தின்படியும், தொடரும் சொற்களின்படியும், 15 விதமான அர்த்தங்களை கொடுக்கிறது என்றால், அது, சும்மா இல்லை.

சும்மாவாவது சிந்தித்தீர்களா இதை.

உலகில் உள்ள மற்ற மொழி அனைத்தும், வாயால் பேச, செவிக்குக் கருத்தை உணர்த்துகின்றவை. ஆனால், தமிழ் மொழி இதயத்தாலே பேசி, இதயத்தால் உணர வைக்கும் மொழியாகும்.

இதுதான் தமிழ் மொழியின் சிறப்பு. இன்றளவும் பேச்சிலும், எழுத்திலும் நீடித்து நிலைத்து தன்னையும், தான் சார்ந்த இனத்தையும் பெருமைப்படுத்திக் கொண்டிருப்பது, தமிழ் மட்டுமே.

- இப்படி கூறி முடித்ததும், கை தட்டி, நிஜமாகவே அருமையான விளக்கம் வாத்தியாரே...' என்று பாராட்டினார், மாமா.

எனக்கும் ஒரு, 'மேட்டர்' கிடைத்ததே, என்று வேலையைத் தொடர்ந்தேன்.

அதற்குள் ஆசிரியர் வரவே, அவரை சந்திக்க சென்றார், தமிழ் ஆசிரியர்.



சிறப்பான ஆட்சியாளர்கள்இருந்த நாடு, அது. திடீரென, அந்த நாட்டின், பிரதமர் இறந்து விட்டார். புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டும். அறிவுள்ள, திறமையான ஒருவரை பிரதமராக நியமிக்க விரும்பினர், ஆட்சிப் பொறுப்பாளர்கள்.

பல்வேறு விதத்தில் சிலரை மதிப்பீடு செய்தனர். இறுதிகட்ட தேர்வில், மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க, ஒரு போட்டி வைத்தனர். மூன்று பேரையும் ஒரு தனி அறையில் வைத்து உட்புறமாக பூட்டினர். அறையின் கதவில் நம்பர் பூட்டு பொருத்தினர்.

'இந்த கதவில் உள்ள பூட்டின் மூன்று எண்களை ஒன்று சேர்த்தால், பூட்டை நீங்கள் திறந்து வெளியே வரலாம். பூட்டை திறந்து, யார் முதலில் வெளியில் வருகிறாரோ, அவர் தான் நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவர்...' என்று, சொல்லி விட்டனர்.

இரண்டு பேர் தீவிரமாக யோசித்தனர். இந்த நம்பரா, அந்த நம்பரா என்றெல்லாம் சிந்தித்து நேரத்தை கடத்தினர். மூன்றாவது போட்டியாளர், கதவை ஓங்கி தட்டினார். கதவு திறந்து கொண்டது. கதவை பூட்டாமலே, போட்டி வைத்திருக்கின்றனர். தைரியமுடன் திறந்து வெளியே வந்தவருக்கு, பிரதமர் பதவி தானாக வந்தது.

கதவு பூட்டப்பட்டிருக்கிறதா என்பதை கூட சரி பார்க்காமல், பிரச்னையை பற்றியே சிந்தித்தவர்களை விட, பிரச்னையை நேரடியாக சந்தித்தவர் வெற்றியடைந்தார்.

இதைப் போலதான், இல்லாத பிரச்னைகளை பற்றி அதிக நேரம் சிந்தித்து, மனம் கலங்குவதை விட, அதை சந்திக்க எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். அப்போது தான், வெற்றி கூட எளிதில் நம் வசமாகி விடும். தொடர்கதையாகும் தோல்விகளை துரத்த இயலும்.

- எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us