PUBLISHED ON : ஜூலை 25, 2021

பா - கே
லென்ஸ் மாமா வீடு-
மாமி, வெளியூர் சென்றதால், என்னை பேச்சுத் துணைக்கு வரச்சொல்லவே, அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன்.
'டிவி'யில் படம் ஓடிக் கொண்டிருந்தது. 10 நிமிடத்திற்கு ஒருமுறை விளம்பரங்கள் வர, கடுப்பானார், மாமா. ஒரு கெட்ட வார்த்தையை உதிர்த்து, சகட்டுமேனிக்கு விளம்பர படங்களை அக்குவேறு ஆணி வேறாக பிய்த்து உதற ஆரம்பித்தார்:
விளம்பரம் - இது, நம்மை எப்படியெல்லாம் ஆட்டி வைக்கிறது பார், மணி.
அரை மணி நேரம் தலையில் எண்ணை ஊறினாலும், உள்ளே இறங்காது என்று பகுத்தறிவு பேசிய நம்மை, அரை நிமிடம் கூட ஊறாத, 'ஷாம்பு' ஆனது, 'புரோ வைட்டமின் பி'ஐ தலைக்கு தரும் என்று, நம்ப வைக்கிறது. நாம் காலங்காலமாக பயன்படுத்தி வந்த, சீயக்காய், 'ஷாம்பு'வாக வந்தால் தான், தலையில் வேலை செய்யும் என, நம்ப வைத்ததும், விளம்பரம் தான்.
உப்பில் பல் தேய்த்தது தவறு என்று, நம்ப வைத்ததும், விளம்பரம் தான். இன்று, 'உங்க பேஸ்டில் உப்பு இருக்கா...' என்று, கேட்பதும், விளம்பரம் தான்.
வாங்கும்போதே, 30 சதவீதம் வரை நஷ்டத்துடன் நாம் வாங்கும் ஒரே பண்டம், தங்கம் தான். அதை சந்தோஷமாக, சிரித்தபடி வாங்க வைத்தது, 'வளையல் திருவிழா' விளம்பரம் தான்.
சரி... அதே, 30 சதவீதம் வரை நஷ்டத்துடன் விற்கும்போதும், சிரித்தபடி நம்மை விற்று, 'கனவுகளை நினைவாக்க' சொல்வதும், விளம்பரம் தான்.
மூன்று லட்சம் சதுர அடியில் அரண்மனை, உங்களுக்காக கட்டப்படுவதாக, நடிகை சினேகா சத்தியம் செய்வதும், அத்தனை பெரிய கட்டடத்தில் நீங்கள் காரில் வந்தாலும், உங்களுக்கு, 'பார்க்கிங்' கூட கிடைக்காது... எல்லாம் விளம்பரம் தான்.
ஆயிரம் ரூபாய் புடவையை, 3,000 ரூபாய்க்கு வாங்கி, வெளியே வரும்போது, ஒரு தொன்னை சர்க்கரை பொங்கல் தருகிறான் பாருங்கள், அவன் நல்லவன். 30 வினாடி விளம்பரத்தில் நடிக்க, கமலுக்கு, 3 கோடி தரும் அந்நிறுவனம், அதை யார் தலையில் கட்டுவர் என்று கேட்க தோன்றாமல், நம்மை மறக்க அடிப்பதும், விளம்பரம் தான்.
விற்கப்படும் வீடுகளுக்கு, மனைகளுக்கு, சாக்கடை வசதிகள் இருக்கிறதா, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி இருக்கிறதா என்று யோசிக்க விடாமல், 'சிங்கிளா டிசைட், டபுளா ஓ.கே.,' பண்ண, சொல்றாரு பாருங்க... அங்க நிக்குது விளம்பரம்.
அமிர்தா கல்லுாரி எல்லாருக்கும் வெளிநாட்டில் வேலை கொடுத்ததா... ராதிகாவை கேட்பீங்களா?
'பூஸ்ட், ஹார்லிக்ஸ்' சத்து பானங்கள், இதுவரை, உலகில் யாரையாவது வளர்த்து இருக்கிறது என்று கேட்டிருக்கிறீர்களா... ஆனால், இந்தியாவில் நடக்குதப்பா. கபில்தேவ், சச்சின், விராட் கோலி இப்படி எல்லாரும் சொல்றாங்களே!
நேற்று வரை, எண்ணை கெடுதல் என்றவன், 'இன்று, பூரி சாப்பிட்டால், 'கார்பரேட் மீட்டிங்'கில் பிரமாதமான தீர்வு சொல்வான்...' என சொல்வதும், விளம்பரம் தான்.
ஒரு எண்ணையில் வடை சுட்டால், உங்களுக்கு ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், சத்து குறைவு, நரம்பு தளர்ச்சி, ஞாபக மறதி இப்படி எல்லா பிரச்னையும் போகும் என்பது தெரியுமா... உள் மூலம், வெளி மூலம் உட்பட! அந்த எண்ணையில், 'ஏ' முதல், 'இசட்' வரை வைட்டமின் இருக்குப்பா என்று சொல்வதும், விளம்பரம் தான்.
- என்று கூறி முடித்தார்.
கொஞ்சம் கூட சுய சிந்தனை அற்றவர்களாக நம்மை, இவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக மழுங்கடிப்பது நமக்கு தெரியவில்லை. அந்த மட்டில் அவர்களுக்கு வெற்றிதான்!
ப
'நீங்கள் இறந்த பின் யார் அழப் போகிறார்கள்?' என்ற தலைப்பில், ராபின்ஷர்மா எழுதிய இப்புத்தகத்தில், 'நீ பிறந்தபோது அழுதாய், உலகம் சிரித்தது. நீ இறக்கும்போது, பலர் அழுதால் தான், உன் ஆன்மா சாந்தியடையும்...' என ஆரம்பிக்கும். இதில் பல அற்புத கருத்துக்கள் உள்ளன.
வழக்கம் போல், உதவி ஆசிரியை தான் மொழி பெயர்த்து கூறினார்...
கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத நன்மைகள், ஒரு பைசா செலவில்லாமல் கிடைக்க வேண்டுமா?
இதோ இன்றே ஆரம்பியுங்கள்.
* உங்கள் துணியை நீங்களே முதலில் துவைக்க பழகுங்கள். அதுவே, நீங்கள், உங்கள் குழந்தைகளுக்கு சொல்லாமல் சொல்லும், முதல் பாடம்
* காலையில் எழுந்தவுடன் குளித்து, இறைவனை வணங்குங்கள். உங்கள் மனைவிக்கு சொல்லாமல் சொல்லும், இரண்டாவது பாடம்
*முடிந்தால் சமையலறையில் முடிந்த உதவிகளை செய்யுங்கள். நம் வீடு, நாம் செய்வோம். நாம் சொல்லாமல் சொல்லும், மூன்றாவது பாடம்
* காபி குடித்தவுடன், முடிந்தால் டம்ளரை கழுவி வைக்கவும். இல்லையென்றால் குழாயடியில் வைக்கவும். இது, நமக்குள்ளே ஒரு கட்டுப்பாட்டை வைத்துக்கொள்ள உதவும். இது, நான்காவது பாடம்
* எங்கெல்லாம் உதவி செய்ய முடியுமோ உதவுங்கள். முதலில் மற்றவர்களுக்கு உதவும் பழக்கம் நமக்கு வரவேண்டும்; தானாகவே குழந்தைகளுக்கும் வரும். முக்கியமான ஐந்தாவது பாடம் இது
* காலையில், காபி அல்லது எது சாப்பிட்டாலும் குறை கூறாதீர். வேண்டுமென்றால், நல்ல முறையில் கூறுங்கள். கோபமும், அதட்டலும், நமக்கு ரத்த அழுத்தம் தரும். இது, ஆறாவது பாடம்
* உண்ணும் முன், பெரியவர்கள், குழந்தைகள் இருந்தால், சாப்பிட்டு விட்டீர்களா என்று கேளுங்கள். இது, ஏழாவது பாடம்
* நடந்து செல்ல முடியும் இடங்களுக்கு நடந்து செல்லுங்கள். பண மிச்சம், இது கஞ்சத்தனம் இல்லை. நம் கால்கள் நடக்க கற்றுக்கொண்டால், இறக்கும் வரை யாரையும் நம்பி இராமல் வாழலாம். இது, வாழ்க்கையின் எட்டாவது பாடம்
* அடுத்தது, 'டிவி!' அது அலறிக் கொண்டிருந்தாலும், நீங்கள் ஒரு நல்ல புத்தகத்தை எடுத்து படியுங்கள். குழந்தைகளும் படிக்க ஆரம்பிப்பர். மின் கட்டணம் கண்டிப்பாக குறையும். இது, ஒன்பதாவது பாடம். மேலும் சில...
* உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும், உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லித் தருகிறார். எனவே, நீங்கள் சந்திக்கும் எல்லாரிடமும் கருணையுடன் இருங்கள்
* அடிக்கடி கவலைப்படாதீர்கள். தேவை எனில், கவலைப்படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம், 30 நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் கவலைகள் குறித்து சிந்தியுங்கள்
*தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள். அது நல்ல ஆரோக்கியத்தையும், நண்பர்களையும் பெற்றுத் தரும்
* நிறைய நல்ல புத்தகங்களை படியுங்கள்
*உங்கள் பிரச்னைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு
* உங்கள் குழந்தைகளை, உங்களுக்கு கிடைத்த மிகச்சிறந்த பரிசாக நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தரக்கூடிய சிறந்த பரிசு, அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரம் தான்
* தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும், உற்சாகத்தையும் தரும்
* புது மனிதர்களிடம் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த பல சிந்தனைகளும், நல்ல நட்பும் கிடைக்கலாம்
* எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்
* நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும், எளிமையான மனிதராயிருங்கள். ஆணவம் ஆயுளைக் குறைக்கும்.
