தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஆக 01, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 01, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா - கே

மதுரையில் வசிக்கும், பிரபலமான மருத்துவர், அவர். சமீபத்தில், 'கான்பிரன்ஸ்' ஒன்றில் கலந்து கொள்வதற்காக, சென்னை வந்திருந்தார். ஆசிரியருக்கு மிகவும் தெரிந்தவர். எப்போது சென்னை வந்தாலும், ஆசிரியரை சந்திக்காமல் போக மாட்டார்.

சர்க்கரை குறைவாக, நுரை பொங்க, கொதிக்க, கொதிக்க நான் கலந்து தரும் காபியை விரும்பி அருந்துவார்.

வழக்கம்போல் அன்றும், ஆசிரியரை சந்திக்க வந்தவரை வரவேற்று, அமர வைத்து, காபி கலந்து கொடுத்தேன். அப்போது, பரபரவென்று உள்ளே வந்த லென்ஸ் மாமா, 'மணி... ரொம்ப, 'டயர்டா' இருக்குபா... எனக்கும் ஒரு கப் காபி கொடு...' என்றார்.

டாக்டர் அருகில், நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்தவர், 'எப்போ சென்னை வந்தீங்க, டாக்டர். ஊரில் எல்லாரும் சவுக்கியமா...' என்று சம்பிரதாய கேள்வி கேட்டார்.

'நானும், ஊரும், மக்களும், 'கொரோனா' பயத்திலிருந்து விடுபட்டு, நலமா இருக்கோம், மாமா...' என்றார், டாக்டர்.

'உமக்கும், நான் மாமாவா...' என்றவர் தொடர்ந்து, 'சரி... டாக்டர், சமீபத்தில், தந்தையர் தினம் வந்ததே... வழக்கமா அந்த தினத்தில், முதியோர் இல்லத்தில் இருக்கும், உங்க தந்தை வயதொத்த பெரியவர்களுக்கு விருந்து அளிப்பீரே... இந்த வருஷமும் செய்தீர்களா?' என்றார், மாமா.

இங்கு ஒரு சின்ன இடைசெருகல்... டாக்டருக்கு, அவர் அப்பா என்றால் கொள்ளை பிரியம். அவர் இறந்து பல ஆண்டுகள் ஆனாலும், எப்போது, அப்பா பற்றி பேச்சு எடுத்தாலும், கண் கலங்குவார்; மணிக்கணக்கில் தன் அப்பா பற்றி, சிலாகித்து பேசுவார்.

'கம்மிங் பேக் டு த பாயின்ட்...'

இது, தெரிந்து தான் அவரை சீண்டினார், மாமா.

சொல்ல வேண்டுமா... உடனே ஆரம்பித்தார், டாக்டர்:

நகரமும் இல்லாத, கிராமமும் இல்லாத ஊர், அது. அவ்வூரிலிருந்த, அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக இருந்தார், என் அப்பா. மாணவர்களை, தன் குழந்தைகளாக நினைத்தார்.

இறந்தவர்கள் பேயாக அலைவர் என்ற மூடநம்பிக்கையை, மாணவர் மனதிலிருந்து மாற்ற, சுடுகாட்டிற்கு, சுற்றுலாவாக அழைத்துச் சென்ற ஒரே ஆசிரியர், இவராகதான் இருப்பார்.

சுடுகாட்டில் சிதறிக் கிடக்கும் எலும்புகளை காட்டி, வாழ்வின் தத்துவம் சொல்வார். 'வாழும்போது நீ எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும், இறந்தால் இப்படித்தான் எலும்புகளாக மயானத்தில் சிதறிக் கிடப்பாய். அதனால், வாழ்க்கையில் எல்லாரிடமும் அன்பு செலுத்தி, பிறருக்கு உதவி செய்ய வேண்டும்...' என்பார்.

நீர் மின் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, மின்சாரம் உற்பத்தியாவதை சொல்லித் தருவார். அஞ்சல் அலுவலகம் அழைத்துச் சென்று, அதன் நடைமுறைகளை விளக்குவார். மாணவர்களுக்கு, மகாபாரதம், பைபிள் மற்றும் குரானிலிருந்து தினமும் நீதிக்கதைகள் சொல்வார்.

நீச்சல் குளம் இல்லாத ஊர் என்பதால், மாணவர்களின் இடுப்பில் கயிறு கட்டி, குளத்தில் நீச்சல் கற்றுத் தந்தவர்.

ஏழை மாணவர்களுக்கு, படிப்பிற்கு உதவி செய்வார். மாணவர்கள் சுகவீனம் அடைந்தால், அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, 'இவன் என் மகன்' என்று சொல்லி, சிகிச்சை அளிக்க செய்வார்.

'வாத்தியாரே, உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?' என்று, மருத்துவ அதிகாரி கேட்டால், 'எனக்கு, 100 குழந்தைகள்...' என்று சிரித்துக் கொண்டே சொல்வார்.

கிராமங்களில், 'செவ்வாய் கிழமை கொழுக்கட்டை' என்ற ஒரு வழக்கம், கோவில்களில் உண்டு. அக்கொழுக்கட்டைகளை பெண்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். ஆனால், அந்த கொழுக்கட்டையை அம்மாவிற்கு தெரியாமல் எடுத்து, அவர் பிள்ளைகளுக்கு கொடுப்பார்.

மூடநம்பிக்கை கூடாது என்பதில் கவனமாக இருப்பார். ஆனால், சிறந்த சிவ பக்தர். ராம பக்தரும் கூட. இவர் பாடாத சிவபுராணம் இல்லை.

'திருப்பதி போய் மொட்டை போடப் போகிறேன்...' என்று சொல்லி, அருகிலுள்ள சலுானில் மொட்டை அடிப்பார். திருப்பதி செல்லும் செலவை, தொண்டு நிறுவனத்திற்கு மணியார்டர் செய்வார்.

இறந்தவர் உடலை எரிக்கவோ, புதைக்கவோ உதவி செய்வார். 'ஏழைக்கு செய்யும் உதவியே, கடவுளுக்கு செய்யும் தொண்டு...' என்று கூறுவார்.

எந்த செயல் செய்தாலும், லாபமா - நஷ்டமா என்று பார்க்காமல், பாவமா - புண்ணியமா என்று தான் பார்க்க வேண்டுமென்று சொல்லித் தருவார்.

தாழ்த்தப்பட்ட மக்களை, 'ஹரிஜன்' என்று, காந்திஜி அழைத்தார் என்றால், இவர், 'கடவுள்' என்று அழைக்க வேண்டும் என்று கூறி, அப்படியே அழைப்பார்.

அந்த காலத்தில், மனிதர்கள் தான் மலத்தை அள்ளுவர். உயிரை காக்கும் மருத்துவரை, கடவுள் என்று அழைப்பது போல, மனித மலத்தை அள்ளுபவரை, கடவுள் என்று தான் அழைக்க வேண்டும் என்று, விளக்கம் சொல்வார்.

- இப்படி டாக்டர் சொல்லி முடித்ததும், 'மிகப்பெரிய துணிச்சல்காரரும், முற்போக்குவாதியாக இருந்திருக்கிறார் உங்கள் அப்பா...' என்று பாராட்டினார், லென்ஸ் மாமா.

அதற்குள், ஆசிரியரிடமிருந்து அழைப்பு வரவே, அவரை சந்திக்க சென்றார், டாக்டர்.



சிக்மண்ட் பிராய்டு என்ற உளவியல் நிபுணர் எழுதிய புத்தகம் ஒன்றில், மனிதர்களின் இயல்பு பற்றி கூறியிருந்த தகவல் இது:

* ஏழாண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் நட்பு, வாழ்நாள் முழுதும் நீடிக்கும்

* அடிக்கடி ஒருவர் நினைவு வந்து கொண்டிருந்தால், அதே நேரம் அவரும் உங்களை நினைத்துக் கொண்டிருப்பார்

* எல்லாவற்றுக்கும் எரிச்சல் படுகிறீர்கள் என்றால், யாரையோ, 'மிஸ்' பண்றீங்க என்று அர்த்தம்

* குழுவாக அமர்ந்திருக்கையில், யாராவது ஜோக் சொன்னால், வாய்விட்டு சிரித்தபடி யாரை பார்க்கிறீர்களோ, அவர்தான் உங்களுக்கு ரொம்ப பிடித்தமானவர்

* நாளொன்றுக்கு நான்கைந்து பாடல்களையாவது கேட்பவர்களுக்கு, நினைவாற்றல் கூடும்; நோய் எதிர்ப்பு சக்தி வளரும்; மன அழுத்தத்துக்கான வாய்ப்பு, 80 சதவீதம் குறையும்

* உங்கள் மனதை யாராவது காயப்படுத்தியிருந்தால், அவரை மன்னிப்பதற்கு உங்கள் மூளை சராசரியாக, 6 முதல் 8 மாதங்கள் அவகாசம் எடுத்துக் கொள்ளும்

* சர்ச்சைக்குரிய விஷயங்களில் கருத்து சொல்லாமல் விடுபவர்கள், பயந்தவர்கள் இல்லை; புத்திசாலிகள்

* இது, கொஞ்சம் கஷ்டமான விஷயம்... யார் அதிகம் உபதேசம் செய்கின்றனரோ, அவர்கள் அதிகமான பிரச்னைகளில் இருக்கின்றனர் என்று அர்த்தம்

* ஒருவர் அதிகமாக விரல் நகம் கடிப்பவராக இருந்தால், அவர் பதற்ற நிலையில் உள்ளவர் என்றும், ஆரம்ப உளவியல் பிரச்னைக்கு உள்ளாகப் போகிறார் என்றும் அர்த்தம்

* ஒருவர் அதிகமாக எதிர்மறையாக பேசுபவராக இருந்தால், அவர் வாழ்க்கையில் பல்வேறுபட்ட ஆசைகள் நிறைவேறாமல் வாழ்ந்து இருப்பார்.

இதில் ஒன்றிரண்டாவது, உங்கள் இயல்போடு ஒத்துப்போகிறதா?

எனக்கு எழுதுங்களேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us