தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நகைச்சுவை மன்னன் எஸ்.வி. சேகரின் டிராமாயணம் - 13

நகைச்சுவை மன்னன் எஸ்.வி. சேகரின் டிராமாயணம் - 13

நகைச்சுவை மன்னன் எஸ்.வி. சேகரின் டிராமாயணம் - 13


PUBLISHED ON : ஆக 01, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 01, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாய் வீடான நாடகத்தில் இருந்து சினிமாவிற்கு சென்ற பின், நாடகத்தை கை கழுவியவர்களுக்கு மத்தியில், 90 படங்களில் கதாநாயகனாக நடித்த போதும், நாடகம் தான் எஸ்.வி.சேகருக்கு முக்கியமாகப்பட்டது.

முதல் முறையாக அவருக்கு, வறுமையின் நிறம் சிவப்பு படத்தில், பிரதான வேடத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார், பாலசந்தர்.

முதல் முறையாக சினிமாவில், அதுவும் கமலஹாசன், ஸ்ரீதேவி போன்ற புகழ்பெற்ற நட்சத்திரங்களுடன், இயக்குனர் சிகரம் பாலசந்தரின் டைரக் ஷனில் என்ற போது, கிடைக்கும் காட்சிகளுக்காக, ஸ்டூடியோவிலேயே எத்தனை நாள், எவ்வளவு நேரம் என்றாலும் காத்து கிடக்க அறிமுக நடிகர்கள், தயாராக இருப்பர்.

ஆனால், இயக்குனர் பாலசந்தரிடம், 'சார்... எனக்கு மாலை, 6:00 மணிக்கு, பெரும்பாலான நாட்களில் நாடகம் போட வேண்டியிருக்கும். அதனால், என் சம்பந்தப்பட்ட காட்சிகளை, மாலை, 5:00 மணிக்குள் எடுத்து விடுங்கள்...' என்று, சொல்லி விட்டார். அதே போலத்தான் அந்தப் படத்திலும் நடந்தது.

'யப்பா, சேகர் நாடகம் போட போகணும். முதல்ல அந்த காட்சியை தயார் பண்ணு...' என்று, அவருக்காக, இயக்குனர் குரல் கொடுத்த நாட்கள் உண்டு.

வாய்ப்பு கிடைக்கிறதே என்பதற்காக, எல்லா கதாபாத்திரங்களையும் எஸ்.வி.சேகர் ஏற்பது கிடையாது. அவர் மனதிற்கு பிடித்திருக்க வேண்டும். தவிர, சினிமாவிலும் அவர், அவராகவே தான் இருந்தார். அவர் ஏற்று நடித்த படங்கள், 90 என்றால், மறுத்த படங்கள், 195.

ஜீன்ஸ் படத்தில், உலக அழகி ஐஸ்வர்யாராயின் அப்பாவாக நடிக்க வேண்டும் என்று, இயக்குனர் ஷங்கர் சொன்னபோது முதலில் மறுத்தார். எஸ்.வி.சேகர் வீட்டிற்கு, ஷங்கரே வந்து காட்சிகளை விவரித்து சொன்னார்.

கடைசியாக, 'நீங்கள், ஐஸ்வர்யாராய்க்கு அப்பா என்று நினைக்காதீர்கள். நடிகை லட்சுமிக்கு மகனாக நடிப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்...' என்றார். அந்த வார்த்தைஜாலம் அவருக்கு பிடித்திருந்தது. ஒத்துக்கொண்டு அந்தப் படத்தில் நடித்தார்.

இன்னொரு உலக அழகி, லாரா தத்தாவுக்கு அப்பாவாக, அரசாட்சி என்ற படத்தில் நடித்தார். உலகத்திலேயே வெளிநாட்டிற்கு போய், 'இன்டோரில் ஷூட்டிங்' நடத்திய படம், அதுவாகத்தான் இருக்கும்.

சினிமாக்காரர்களை பொறுத்தவரை, அவர்களுக்கு, 'அட்வான்சாக' கொடுத்த பணம், ஒரு வழிப்பாதை தான்; பெரும்பாலும் திரும்பி வராது. படம் எடுத்தாலும் சரி, எடுக்காவிட்டாலும் சரி, கொடுத்தது கொடுத்தது தான்.

ஆனால், எஸ்.வி.சேகரை ஒப்பந்தம் செய்து, அவருக்கு, 'அட்வான்ஸ்' கொடுத்தவர்கள் படம் எடுக்க முடியாமல் போய்விடும் சூழ்நிலையில், அவர்கள் கொடுத்த பணத்தை, தேடிச்சென்று, திருப்பிக் கொடுத்து விடுவார். இது, திரையுலகத்தினருக்கு மட்டுமல்ல, பணத்தை திரும்ப பெறுபவர்களுக்கும் ஆனந்த அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கிறது.

உழைத்த பணம் மட்டும் வந்தால் போதும் என, நினைப்பார். அவரை பொறுத்தவரை, யாரையும் சிரமப்படுத்த மாட்டார். யாருக்கும் வீண் செலவு வைக்கவும் மாட்டார். அதனால் தான், கதாநாயகனாக போட்டு இயக்குனர் ராமநாராயணன் எடுத்த முதல் படம் மற்றும் 100வது படத்திலும் அவர் தான், 'ஹீரோ!'

பொறுப்புகளில் இருந்து நழுவும் பழக்கமும் கிடையாது. 30 நாடுகளில் இருந்து வந்த, 120 திரைப்படங்கள் திரையிடும், ஏழாவது சென்னை உலகத்திரைப்பட விழாவிற்கு, துணைத் தலைவராக இருந்து, அரசிடமிருந்து, 25 லட்ச ரூபாய் பெற்றுக் கொடுத்து, பலரும் பாராட்டும்படி செயல்பட்டார்.

இதுபோல பல்வேறு திரைத்துறை சம்பந்தப்பட்ட பொறுப்புகள் கொடுக்கப்பட்ட போதும், அதை நேர்மையாக செய்து முடித்த திருப்தி, எஸ்.வி.சேகருக்கு எப்போதும் உண்டு. பிரம்மாண்டமானதாகவும், பிரமிப்பூட்டுவதாகவும் சினிமா இருந்தாலும், அவருக்கு நாடகம் தான் உயிர்.

பொருட்காட்சியில் நாடகம் நடத்துவதில்லை!

ஒரு கட்டத்தில், எங்கெல்லாம் அரசு பொருட்காட்சி நடக்கிறதோ, அங்கெல்லாம் நாடகம் போட்டனர். 'உங்கள் நாடகத்தால், உள்ளூர் நாடகக் குழுவை அழைப்பதில்லை. நாடகக் கலைஞர்களான நாங்கள் சிரமப்படுகிறோம்...' என்றனர். அவர்கள் நலன் கருதி, அன்று முதல் பொருட்காட்சி மற்றும் கோவில் விழாக்களில், அவர், நாடகம் போடுவதில்லை.

தொடரும்

எல். முருகராஜ்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us