தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஆக 22, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 22, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு



அன்று வந்த தபால்களை பிரித்த போது, 'அந்துமணி - பர்சனல்' என குறிப்பிட்டு, ஒரு கடிதம் இருந்தது, பிரித்துப் படித்தேன். அதில்:

ஹலோ அந்துமணி சார். நான், உங்கள் தீவிர வாசகி. விடுதியில் தங்கி, பணிபுரியும் பெண். எங்கள் விடுதியில் நடந்த ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

'நானும் ரவுடி தான்...' என, வடிவேலு ஒரு படத்தில் அலப்பறை கொடுப்பது போல், மூன்று பேர் கொண்ட எங்கள் அணியும், விடுதியில் கொஞ்சம் குறும்புத்தனம் செய்வதுண்டு.

மூவர் அணிக்கு, நான் தான் தலைவி. ஒருநாள், 'அக்கா, நம்ம பக்கத்து அறையில தங்கியிருக்கற அர்ச்சனா, சரியான அழுத்தக்காரியா இருக்கா. இவளை கொஞ்சம், 'லுாஸ் மோஷன்' போக வைக்கணும்...' என்றாள், தோழியரில் ஒருத்தி.

'ஒரு ஐடியா செய்து, அவளை நம் வழிக்கு கொண்டு வருவோம்.

'தனக்கு, 'பாய் பிரண்ட்' இல்லன்னு ரொம்ப கவலைப்படுறால்ல... அவளுக்கு ஒரு காதல் கடிதம் எழுதுவோம். அதைப் படிச்சுட்டு அவ, 'ரியாக் ஷன்' எப்படி இருக்குன்னு நோட்டம் விடுவோம். நல்லவள்னா, அந்த கடிதத்தை பற்றி நம்மகிட்ட பேசுவா. கள்ளத்தனம் பிடிச்சவள்னா, அது யார் என ரகசியமாக ஆராய்வாள்.

'அதுக்கேத்த மாதிரி நாம, அடுத்த கடிதத்தை தயார் செய்யலாம். கொஞ்சம் அலைகழிப்போம்...' என்று, அவளை வர்ணித்து, மூன்று பக்கத்திற்கு இலக்கிய தரத்தில், காதல் கடிதம் ஒன்றை நான் சொல்ல, இன்னொரு தோழி எழுதினாள். அதை, அர்ச்சனாவின், 'ஹாண்ட்பேகில்' வைத்து விடவும் கூறினேன்.

மறுநாளில் இருந்து, மூவரும் அவளை கண்காணிக்க ஆரம்பித்தோம். 30 வயதாகியும் சரியான வரன் அமையாததால், அவள் முகம் எப்போதும் பொலிவிழந்து காணப்படும். ஆனால், கடிதம் வந்த மறுநாளில் இருந்து, மந்தகாச புன்னகையுடன், படு உற்சாகமாக வலம் வர ஆரம்பித்தாள்.

மாலை நேரத்தில், நாங்கள் சேர்ந்து வெளியே எங்கேயாவது செல்லும் போது, தன்னை யாரும் பார்க்கின்றனரா என்று, நோட்டம் விட ஆரம்பித்தாள், அர்ச்சனா.

எங்களுக்கோ அடக்க முடியாத சிரிப்பு. ஆனாலும், எவ்வளவு நாள் தான் மறைப்பாள் பார்ப்போம், என்றிருந்தோம்.

இது நடந்து, மூன்று வாரங்கள் கடந்த நிலையில், மீண்டும் அவள் முகத்தில் சோர்வும், குழப்பமும் தென்பட்டது.

ஒருநாள், எங்கள் மூவர் அணியில் உள்ள ஒருத்தியிடம், கடிதம் பற்றி சொல்லி, 'அவன் யார் என கண்டுபிடிக்க முடியவில்லை...' என்றிருக்கிறாள்.

உடனே, 'அக்கா இங்க வாயேன்... யாரோ ஒருத்தன் நம்ம அர்ச்சனாவுக்கு, 'லவ் லெட்டர்' எழுதியிருக்கானாம்...' என்று கூவ, மற்ற தோழியரும், 'என்ன லவ் லெட்டரா...' என்று கேட்டு, ஆவலுடன் அங்கு கூடி விட்டனர்.

அவர்கள் முன், காதல் கடிதம் கடை விரிக்கப்பட, அதை எடுத்து படித்தனர்.

'வாவ்... யாரிடி இவன்... என்னமா உருகி கடிதம் எழுதியிருக்கான். இதற்காகவே நீ, அவனை காதலிக்கலாம்...' என்றாள், ஒருத்தி.

'அவன் யார்ன்னு தெரிஞ்சால் தானே காதலிப்பதற்கு?' என்றாள், அர்ச்சனா.

இன்னொரு தோழி, 'இது பொம்பள கையெழுத்து மாதிரி இருக்கே...' என்று, 'க்ளூ' கொடுக்க, இன்னொருத்தி சமாளிக்கும் விதமாக, 'இல்ல, இல்ல... கண்டிப்பா இது, ஆம்பள எழுதின கடிதம் தான்...' என்றாள், வேகமாக.

'விளையாட்டுக்கு நம் தோழிகள் கூட, இப்படி எழுதியிருக்கலாமே...' என்று, ஒருத்தி கூற, அர்ச்சனாவின் முகம் வாடியது.

அவளை மேலும் சீண்டும் விதமாக, 'அடடா... என்னமா வர்ணித்து கடிதம் எழுதியிருக்கான். அதை போய், விளையாட்டு கடிதம்ன்னு சொல்ற...' என்றேன், நான்.

அதற்கு ஒத்து பாடுவது போல், எங்கள் அணியில் ஒருத்தி, 'எனக்கும் அப்படித்தான் தோணுது. இவ போடுற, 'டீ - ஷர்ட்'டுல இருந்து, தலை அலங்காரம் வரை, வர்ணித்து எழுதியுள்ளான். ஏன்டி அச்சு, உனக்கு யார் மேலாவது சந்தேகம் இருக்கா?' என்றாள், அப்பாவியாக.

'தெரியலையே...' என்று, அவள் கூறியதும், 'அந்த கறிக்கடை பாய் உன்னை ஒரு மார்க்கமாக தான் பார்ப்பான். அவனாக இருக்குமோ அல்லது எதிர் கடையில் ஜூஸ் போடுறானே அவனா, மார்க்கெட்ல காய்கறி விற்பவனா இருக்குமோ, பழ வண்டிக்காரனா இருக்குமோ...' என்று, தினமும் கண்ணில் படுகிறவனை எல்லாம் வரிசைப்படுத்தி கேட்டனர்.

'நான் என்ன, அவ்வளவு கேவலமாக போய் விட்டேனா... சீ போங்கடி...' என்று சலித்துக் கொண்டாள், அர்ச்சனா.

'இந்த காலத்துல, எவன் கடிதம் எழுதறான். அதுவும் இலக்கண சுத்தமாகவும், இலக்கிய தரமாகவும்...' என்று, கேள்வி எழுப்பினாள், இடையில் புகுந்த இளமங்கை ஒருத்தி.

உடனே ஒருவரை ஒருவர் பார்த்தபடி, 'நம்ம கூட்டத்துல, இலக்கிய தரமா எழுதறதுன்னா, அது, லட்சுமி அக்கா தான்...' என்று இழுக்க, 'அடிப்பாவி, கடைசியில் நான் தானா சிக்கினேன்...' என்று, போலியாக பதறினேன்.

'எதுக்கு இந்த சந்தேகம். எல்லாரும் கொஞ்சம் எழுதிக் காட்டுங்க. கையெழுத்தை வைத்து, யார்ன்னு கண்டுபிடிக்கிறேன்...' என்றதும், கடிதம் எழுதியவள் மட்டும் பதற்றம் அடைந்தாள்.

'பொறு அச்சு. எதுக்கு அவசரப்படுற... அவன் இன்னொரு கடிதம் போடுவான் இல்ல, அதைப் பார்த்துட்டு முடிவு செய்வோம்...' என்றேன்.

'இன்னொரு கடிதம் போடுவான்னா சொல்றீங்க...' என்று சந்தேகம் எழுப்பினாள், அர்ச்சனா.

'நிச்சயம் போடுவான்...' என்று, நான் பதில் கூறியதும், 'ஆமா... அக்காவுக்கு கொஞ்சம் வேலை அதிகம். எனவே, அடுத்த கடிதம் வர லேட்டாகும்...' என்றாள், கடிதம் எழுதிய தோழி.

குழப்பமடைந்த அர்ச்சனா, 'அவன் எவனா இருந்தாலும், நேரில் வந்து சொல்லட்டும். அப்புறம் காதலிக்கிறதா இல்லையான்னு பார்ப்போம்...' என்று, அந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

அங்கிருந்த அனைவரும் கலைந்தபின், 'என்னக்கா... அடுத்த கடிதம் எப்போ?' என்று கேட்ட தோழியிடம், 'வேண்டாம்... கடிதத்தை படிச்சு, இல்லாத ஒருவனுக்காக ஏங்கிடப் போறா. அவ உணர்ச்சியோட விளையாட வேண்டாம்...' என்றேன், உறுதியாக.

- கடிதத்தை படித்து முடித்ததும், 'இப்படி எல்லாமா நடக்கும் பெண்கள் விடுதியிலே...' என, நினைத்துக் கொண்டேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us