PUBLISHED ON : செப் 12, 2021

பா - கே
குப்பண்ணா வீட்டு மொட்டை மாடியில் நான், லென்ஸ் மாமா, திண்ணை நாராயணன், அன்வர் பாய், நாராயணனின் நண்பரும், சமூக ஆர்வலருமான ஒருவரும் கூடியிருந்தோம்.
சமீபத்தில் ஊட்டிக்கு சென்று வந்திருந்தார், சமூக ஆர்வலர். அவர், நீலகிரி மாவட்ட ஆட்சியரான இன்னொசென்ட் திவ்யா, 'சரக்கு வாங்க வருபவர்கள், கட்டாயம், 'கொரோனா' தடுப்பூசி போட்டதற்கு அத்தாட்சியை காண்பிக்க வேண்டும்...' என்று, அதிரடி உத்தரவு போட்டிருப்பது பற்றி சிலாகித்து பேசினார்.
'ஊட்டி போயிட்டு வந்தீரே... ஏதாவது விசேஷம் உண்டா?' என்றேன், நான்.
'படுகர் இன மக்களுக்கு, 'கொரோனா' தடுப்பூசி போடுவதற்காக சென்ற மருத்துவ குழுவினரோடு நானும் சென்றிருந்தேன், மணி. அப்போது, அவர்களிடமிருந்து சில வினோத நம்பிக்கைகள் இருப்பதை அறிந்தேன். சொல்லவா...' என்றார்.
'கரும்பு தின்ன கூலியா... சொல்லுங்களேன்...' என்றேன்.
சொல்ல ஆரம்பித்தார்:
* அவர்களுக்கு, கண் திருஷ்டியில் மிகுந்த நம்பிக்கையுண்டு. முச்சந்தியில் மண்ணெடுத்து வந்து, தலையை சுற்றி, பின், வீதியில் போடுவர்
* ஒற்றைப் படையில் மிளகாய் வற்றல், உப்பு, நவதானியங்கள், துடைப்ப குச்சி மற்றும் சுண்ணாம்பு ஆகியவற்றை எடுத்து, தலையை மூன்று முறை வலமாகவும், மூன்று முறை இடமாகவும் சுற்றி, எரியும் அடுப்பில் போடுவர். பிறகு, அந்த சாம்பலை எடுத்து நெற்றியில் பூசிக் கொள்வர்.
எரியும் நெருப்பில் மிளகாய் வற்றலை போடும்போது, திருஷ்டி பட்டவரை தவிர மற்றவர்களுக்கு, தொண்டை கமறுமாம்
* திருமணத்தின்போது, மணப்பெண்ணுக்கு அலங்காரம்
செய்யும் இடத்தில் யாராவது தும்மினால், மணப் பெண்ணுக்கு கெடுதல் நேரும்
என்று கருதுவர்
* மணப்பெண்ணின் கழுத்தில், தாலி கட்டும் முன், தாலியை கையில் பிடித்து, சுற்றியிருப்பவர்களிடம் காண்பித்து, 'தாலி கட்டட்டுமா...' என, மணமகன் கேட்க வேண்டும். சுற்றி இருப்பவர்கள், 'கட்டு' என கூறணும். இதுபோல், மூன்று முறை நடக்கும். அதன் பின்னரே, மணமகள் கழுத்தில் தாலி கட்டுவார்.
வருங்கால மனைவியின் கொண்டையில் சிக்காமல், சரியாக கழுத்தில் தாலியை கட்ட வேண்டும். மீறி சிக்கினால், ஏற்கனவே நிர்ணயம் செய்து வைத்துள்ள அபராத தொகையை செலுத்த வேண்டும் மணமகன்
* முன்பு, திருமண நாளன்று, தாலி கட்டும் வழக்கமில்லை. பெண் கருவுற்ற ஏழாவது மாதத்தில் தான் கட்டுவர். அதேபோல், வெள்ளியால் ஆன தாலியை மட்டுமே கட்டினர். இப்போது, தங்க தாலிகளும் இடம்பெறுகிறது. திருமணங்கள் கோவில்களில் நடப்பதிலிருந்து, மண்டபங்களிலும் சகஜமாய் நடக்கின்றன
* பொதுவாக குழந்தைகளுக்கு, முதன் முதலாக கீழ் வரிசையில் தான் பல் முளைக்கும். அதற்கு மாறாக, குழந்தைக்கு முதலில் மேல் வரிசையில் பல் முளைப்பதாக இருந்தால், குழந்தையைப் பார்க்க வரும் மாமா முறை உள்ளவர், அதன் முகத்தை பார்க்காமல், அன்பளிப்பு பணத்தை கதவிடுக்கு வழியாக போட்டுச் சென்று விட வேண்டும்.
- என்று முடித்தார்.
'முன்பு, பிலோ ஹிருதயநாத் என்ற எழுத்தாளர், பழங்குடி மக்களான படுகர் இனத்தவர் பற்றி எழுதிய புத்தகத்தில், இதுபோன்ற பல வித்தியாசமான பழக்க வழக்கங்களைக் குறிப்பிட்டுள்ளதைப் படித்துள்ளேன்.
'தங்களுடைய பாரம்பரியத்தை இன்றும் விட்டு விடாமல் கடைப்பிடித்து வருவது ஆச்சரியமாக இருக்கிறது...' என்றேன்.
அப்போது, குப்பண்ணாவின் மனைவி, சுடச்சுட சுண்டலும், சுக்கு காபியும் எடுத்து வர, சாப்பிட்டு கிளம்பினோம்.
ப
வாசகி ஒருவர் எழுதிய கடிதம்:
அட்லாண்டிக் கடலை கடந்த தமிழ்க்கப்பல் அன்னபூரணி பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா?
இலங்கையிலிருந்து, இங்கிலாந்து பாஸ்டன் துறைமுகம் வரை, அட்லாண்டிக் கடலை கடந்து, தமிழ்க்கப்பல் அன்னபூரணி சென்றுள்ளது.
அட்லாண்டிக் கடலை கடந்த, கடைசி பாய்மரக் கப்பல் இதுதான்.
கடந்த, 1938ல், இலங்கை, வல்வெட்டி துறையில் இருந்து, பாய்மர கப்பலில் வணிகம் செய்து வந்தனர், செட்டியார்கள்.
கொச்சின், ரங்கூன் (இப்போது இதன் பெயர் யாங்கூன்) முதல், அரபு நாடுகள் வரை, அவர்களின் பாய்மரக் கப்பல்கள் சென்று வந்தன.
வளவை மாரியம்மன் தீர்த்தத் திருவிழாவில் கலந்து கொண்ட, அன்னபூரணி எனும் கப்பலின் அழகில் மயங்கிய, வில்லியம் ராபின்சன் எனும் அமெரிக்கர், அந்த கப்பலை விலைக்கு வாங்கினார். அதை, இங்கிலாந்து, பாஸ்டன் துறைமுகத்துக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பு, ஐந்து தமிழ் மாலுமிகளிடம் வழங்கப்பட்டது.
கனகரத்தினம் தம்பிப்பிள்ளை தலைமையில் கிளம்பியது அக்கப்பல்.
பல தடைகளையும் தாண்டி, பாஸ்டன் துறைமுகத்துக்கு, மூன்று மாதத்தில் கப்பலை கொண்டு சென்று விட்டனர். சட்டை அணியாமல், திருநீறு மற்றும் குடுமியுடன் இருந்த இவர்கள் ஐவரும், பாஸ்டன் துறைமுகத்தில், பாய்மரக் கப்பலில் இருந்து இறங்கிய காட்சியை காண, அந்நகரமே கூடியது.
அதன்பின், அந்த ஐந்து
மாலுமிகளும், இங்கிலாந்திலேயே தங்கி விட்டதாக கூறுகின்றனர்.
தமிழர்களின் பெருமைக்கு இன்னொரு உதாரணம், இது.
— இவ்வாறு எழுதியுள்ளார்.
டாக்டரிடம் ஒருவன், 'துாங்கறது தப்பா டாக்டர்...' என்றான்.
'என்ன தம்பி, இப்படி கேட்டுட்டீங்க... துாக்கம் என்பது கடவுள் தந்த வரம். துாங்கறது தப்பே இல்லை...'
என்றார்.
'சரியா சொன்னீங்க டாக்டர்... எனக்கு, நல்லாவே துாக்கம் வருது. கடவுளுக்கு நன்றி. பிரச்னை என்னன்னா, நான் பஸ்சில் போறப்பல்லாம் துாக்கம் துாக்கமா
வருது. அதான் என்ன செய்யிறதுன்னு தெரியல... வழி காட்டுங்க டாக்டர்...' என்றான்.
'ராத்திரியிலயா, பகலிலா?' என்றார், டாக்டர்.
'ராத்திரியிலயும், பகலிலயும் பஸ்ல போறேன்; எப்ப போனாலும் துாக்கம் வருது டாக்டர்...' என்றான்.
'இதுல என்னங்க இருக்கு, ராத்திரியோ, பகலோ, துாக்கம் வந்தா, பஸ்ல ஹாய்யா துாங்க வேண்டியது தானே...' என்றார், டாக்டர்.
நல்ல முடிவை கேட்ட திருப்தியில், 'அப்படி நான் துாங்கிட்டா, பஸ்சை யாரு ஓட்டுறது டாக்டர்...' என, சந்தேகம் கேட்டான்.
- எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.
