தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : மே 15, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 15, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா - கே

'ஒரே விஷயம், இரு வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறதே...' என்று புலம்பியவாறு வந்தமர்ந்தார், 'திண்ணை' நாராயணன்.

'ஓய், நாணா... என்ன விஷயம், என்ன இரு வேறு விளைவு... விளக்கமாக சொல்லும்...' என்றார், லென்ஸ் மாமா.

'முதலில், உனக்கு ஒரு உண்மை கதையை கூறுகிறேன். அப்புறமா இதற்கு விளக்கம் கூறுகிறேன்...' என்று சொல்ல ஆரம்பித்தார்:

பெண்மணி ஒருவரை, லண்டன் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு எல்லாவிதமான பரிசோதனைகள் செய்தும், என்ன வியாதி என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

ஐந்து நாட்கள் ஓடி விட்டன. ஆறாவது நாள், அவளிடம் சில வித்தியாசமான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தன.

அவளுடைய தலைமுடி உதிரத் துவங்கியது.

நாளுக்கு நாள் நிலைமை மோசமானது.

மருத்துவர்கள் குழம்பினர்.

அந்த பெண்மணிக்கு துணையாக இருந்த நர்ஸ் ஒருவருக்கு ஏதோ உள்ளுணர்வு தோன்ற, 'இந்த பெண், தாலியம் எனும் ரசாயன பொருளால் பாதிக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறேன்...' என்று மருத்துவர்களிடம் தெரிவித்தார்.

நர்சின் சந்தேகத்தை அங்கிருந்த டாக்டர்கள் அலட்சியப்படுத்தவில்லை. அந்த வகையிலேயே அவளை சோதித்தனர்.

சந்தேகம் ஊர்ஜிதமானது.

தாலியம் அவளை தாக்கியிருந்தது.

மருத்துவர்களுக்கு வியப்பு.

நர்சை அழைத்தனர்.

'அது எப்படி இவ்வளவு சரியாக உன்னால் சந்தேகப்பட முடிந்தது...'

'துப்பறியும் நாவலாசிரியை, அகதா கிறிஸ்டி தான் காரணம். நான், அகதா கிறிஸ்டியின் ரசிகை...' என்றார், அந்த நர்ஸ்.

'சரி... அதற்கும், இதற்கும் என்ன சம்பந்தம்?'

'அகதா கிறிஸ்டியின், 'வெளிறிய குதிரை' என்று ஒரு நாவல். அதில், தாலியம் என்ற நச்சுப் பொருளை பயன்படுத்தி, பலரை கொலை செய்கிறான், வில்லன். அது எந்தவித பரிசோதனையிலும் வெளிப்படாத ஒரு விஷம். அதில் பாதிக்கப்பட்ட ஒருவரின் உடல்நிலையை விபரமாக எழுதியிருந்தார், அகதா கிறிஸ்டி. அதைப் படித்த ஞாபகம் வந்தது. அது, இதே மாதிரி இருந்தது. ஆகவே, அந்த சந்தேகத்தை உங்களிடம் சொன்னேன்...' என்றார்.

மருத்துவர்கள், அந்த நர்சை பாராட்டினர்.

ஒரு நாவல், ஒரு நோயாளியை காப்பாற்றியிருக்கிறது. ஆனால், அதே நாவல், சிலரது உயிரையும் போக்கியிருக்கிறது.

லண்டன் நகரத்தின் எல்லைபுறத்தில் ஒரு தொழிற்சாலை. அதில் வேலை செய்த தொழிலாளர்கள் சிலர், ஒரே மாதிரியான நோயால் இறந்து போயினர். அது என்ன நோய் என்று யாருக்கும் புரியவில்லை.

மருத்துவர்களாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. மர்மம் நீடித்தது. எனவே, நிர்வாகம் காவல்துறைக்கு தெரியப்படுத்தியது.

அவர்கள், ஒரு துப்பறியும் நிபுணரிடம் கூறினர்.

அந்த நிபுணர், ஒரு சாதாரண தொழிலாளி மாதிரி தொழிற்சாலைக்குள் நடமாடிக் கொண்டிருந்தார். அங்கே இருந்த சிற்றுண்டி சாலையில், ஒருநாள் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது, அடுத்திருந்த மேஜையை சுற்றி ஐந்து தொழிலாளர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

துப்பறியும் நிபுணர் காதுகளை தீட்டியபடி, அதே நேரம் நிதானமாக தேநீர் குடிப்பது போல் பாசாங்கு செய்து கொண்டிருந்தார். அவர்கள் பேச்சு, மர்ம மரணங்கள் குறித்து வலம் வந்தது.

'டாக்டர்களாலே கூட அது என்ன வியாதின்னே கண்டுபிடிக்க முடியலையாமே...'

'ஏதாவது விஷமாய் இருக்குமோ...'

'பிரேத பரிசோதனை எல்லாம் பண்ணிப் பார்த்துட்டாங்க. விஷம் இருக்கிறதா தெரியலையாம்...'

'ஒருவேளை, பரிசோதனையில் தெரியாத விஷம் ஏதேனும் இருக்குமோ...'

'எப்பேர்பட்ட விஷமாயிருந்தாலும், பிரேத பரிசோதனையில் தெரிந்து விடும்...'

இதுவரை, அமைதியாக இருந்த, ஐந்தாவது ஆள், 'ஒருவேளை தாலியம் கொடுத்து கொன்றிருக்கலாம். அதைக் கண்டுபிடிக்க முடியாதாம்...'

துப்பறியும் நிபுணர், இந்த ஐந்தாவது ஆளை மனதுக்குள் பதிய வைத்துக் கொண்டார். டாக்டரிடம் போய், 'இந்த மர்ம சாவுகளுக்கு, தாலியம் காரணமாயிருக்குமா என்று பாருங்களேன்...' என்றார்.

பார்த்தனர். உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. அந்த ஐந்தாவது நபரை பிடித்து விசாரித்தனர்.

அவன், 'நான் தான் குற்றவாளி...' என்று, ஒப்புக்கொண்டான்.

'நான் அகதா கிறிஸ்டியின், 'வெளிறிய குதிரை' நாவலை படித்தேன். தாலியம் பற்றி தெரிந்து கொண்டேன். அதை தேநீரில் கலந்து கொடுத்தேன்...' என, வாக்குமூலம் கொடுத்தான், அவன்.

'ஒரே நாவல், ஒரு பக்கம் ஒரு உயிரை காப்பாற்றியிருக்கிறது; இன்னொரு பக்கம் சில உயிர்களை போக்கியும் இருக்கிறது...' என, கூறி முடித்தார், 'திண்ணை' நாராயணன்.

'படுத்தாதீர் ஓய்... இந்த கதைக்கும், நீர் சொல்ல வந்ததற்கும் என்ன சம்பந்தம்...' என்று கேட்டார், லென்ஸ் மாமா.

'ஒரு பொருளைகையாளுகிறவர்களை பொறுத்தே விளைவுகளும் அமையும் என்று ஒப்புக்கொள்கிறீரா... சட்டமும் அப்படிதான் போலிருக்கு. 'ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டுங்க. பாதுகாப்பானது...' என்று ஒரு பக்கம் சட்டத்தின் மூலம் அறிவுறுத்துகின்றனர். மற்றொரு பக்கம், 'ஹெல்மெட்' அணிந்தபடி சாலையில் தனியாக போகிறவர்களின் பர்சையோ, செயினையோ பறிச்சுட்டு ஓடுறாங்க, திருட்டு பசங்க.

'இப்ப நான் அலுவலகத்துக்கு நடந்து வந்து கொண்டிருந்தபோது, ஒருவன் என் பர்சை, லாவகமாக அடிச்சுட்டு, வண்டியில் ஏறி பறந்துட்டான். 'ஹெல்மெட்' போட்டிருந்ததால், அவனை அடையாளம் தெரியல, வேகமா போனதால வண்டி நம்பரையும், 'நோட்' பண்ண முடியல. எவ்வளவு நல்ல சட்டமாக இருந்தாலும், அதை கையாளுபவர்கள் மோசமானவர்களாக இருந்தால், இப்படித்தான் ஏடாகூடமாகி விடும்...' என்றார், வருத்தமாக.

'பர்சுல எவ்வளவு பணம் வைத்திருந்தீர்கள்...' என்றேன், நான்.

'இருபது ரூபாயும், கொஞ்சம் சில்லரைகளும் அதில் இருந்தது...' என்றார், நாராயணன்.

'ப்பூ... இதற்கா இவ்வளவு, பில்ட் - அப்...' என்று அலுத்தபடி எழுந்து சென்றார், லென்ஸ் மாமா.



அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒருவர், மிகவும் பெருமையாக

சொன்னார்...

'சார்... நானும், என் மனைவியும் குடும்பத்தில் ஒருத்தரை ஒருத்தர் ரொம்ப, 'அட்ஜஸ்ட்' பண்ணி நடந்துக்குவோம். அதனால, எங்களுக்குள்ளே மன வேற்றுமையே வர்றதில்லை...' என்றார்.

'அது எப்படி?' என்றார், மற்றொருவர்.

'நேத்திக்கு, ஒரு புடவை வாங்கித் தரேன்னு சொல்லியிருந்தேன். கையில் பணம் இல்லை. அதனால, நான் என்ன பண்ணினேன்னா, ஒரு பேப்பர்ல, 'பட்டுப் புடவை'ன்னு எழுதி, அதை வீட்டிலே கொண்டு போய் கொடுத்துட்டேன். அதையே புடவையா நெனைச்சு என் மனைவி சந்தோஷப்பட்டாங்க... நானும் அதே மாதிரி, 'அட்ஜஸ்ட்' பண்ணிக்குவேன் சார்...' என்றார்.

'அது எப்படி?'

'இன்னிக்கு, வீட்டுலேர்ந்து டிபன் கேரியர் வந்தது, திறந்து பார்த்தேன். உள்ளே ஒண்ணுமே இல்லை. ஒரு சின்ன சீட்டிலே, 'சாப்பாடு'ன்னு எழுதியிருந்தது. அவ்வளவு தான்...' என்றார்.

எங்கோ, எதிலோ எப்போதோ படித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us