PUBLISHED ON : ஜூலை 02, 2023

பா - கே
நண்பர் வீட்டு திருமணம் ஒன்றுக்கு, கோவை செல்ல வேண்டியிருந்தது. நான்கு பேர் பயணிக்கும் இடம் தான் கிடைத்தது.
நானும், லென்ஸ் மாமாவும் சென்றோம். எங்களுக்கு எதிரில், நடுத்தர வயதுள்ள ஒருவரும், ஆன்மிக ஈடுபாடு உள்ளவர் போல் தோற்றமளித்த, 'சீனியர் சிட்டிசன்' ஒருவரும் அமர்ந்திருந்தனர். ஆன்மிக அன்பர் கையில், ஏதோ பக்தி புத்தகம்.
இந்த சூழ்நிலையை பார்த்த லென்ஸ் மாமா, தனக்கு இந்த இடம் தோதுபடாது என்று நினைத்தாரோ என்னவோ, வேறு இடம் கேட்டு, டி.டி.ஆரை பின் தொடர்ந்து, நச்சரித்துக் கொண்டிருந்தார்.
நான், அப்பர் பர்த்தில் ஏறி, கையில் கொண்டு சென்ற புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன்.
என்னை நோட்டமிட்ட, ஆன்மிக அன்பர், என்னைப் பற்றி விசாரித்து, பேச்சு கொடுத்தார்.
பேச்சு எங்கெங்கோ சென்று, 'பகவத் கீதை படித்திருக்கிறாயா?' என்று கேட்டார், அன்பர்.
முழுதாக படிக்கா விட்டாலும், ஓரளவு படித்திருந்ததால், மையமாக தலையசைத்தேன்.
'உத்தவ கீதை பற்றி தெரியுமா?' என்றார்.
'இதென்னடா சோதனை...' என்று, அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவருக்கு என்ன புரிந்ததோ... 'சரி சரி... நானே சொல்றேன்...' என்று கூற துவங்கினார்:
அர்ச்சுனன் கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொன்னார், பகவான் கண்ணன். அதுக்கு பேரு, பகவத்கீதை. அதே மாதிரி, உத்தவன் கேட்ட கேள்விக்கும் அவர் பதில் சொல்லியிருக்கிறார். அதுக்கு பேரு, உத்தவ கீதை.
சின்ன வயசுலேர்ந்தே, கண்ணனுக்கு தேரோட்டிக்கிட்டு இருந்தவன் தான், உத்தவன்.
குருஷேத்திர போர் முடிந்தது. அதர்மத்தை அழிச்சு, தர்மத்தை நிலைநாட்டி, தருமருக்கு முடிசூட்டினார், கண்ணபிரான். அதன்பின், துவாரகைக்கு திரும்பினார்.
தான் வந்த காரியம் முடிஞ்சுது. அதனால, இளமையிலிருந்தே தனக்கு தேரோட்டியாக இருந்து வந்த உத்தவனை கூப்பிட்டு, 'உனக்கு வேணும்ங்கிறதை கேள்...' என்றார்.
அவன், தனக்குன்னு எதையும் கேட்கவில்லை; தன் நீண்டநாள் சந்தேகத்தை கேட்டான்.
'பரந்தாமா, ராசசூய யாகத்துக்கு, தருமனை கூப்பிட்டு, தன் அரண்மனையில விருந்து வச்சான், துரியோதனன். அதுக்கப்புறம், சூதாட்டத்துக்கு கூப்பிட்டான். தருமன் தோல்வியடையற மாதிரி பண்ணிபுட்டான்.
'நீங்க தான் முக்காலமும் உணர்ந்தவராச்சே, சூதாட்டத்துல, தருமர் ஜெயிக்கிறது மாதிரி பண்ணியிருக்கப் புடாதா... பகடைக் காயை உருட்டறப்போ, நீங்க எதிர்பார்த்தது விழற மாதிரி பண்ணியிருக்கலாமே.
'சரி, அதுதான் இல்ல. வேடிக்கை பார்த்துக்கிட்டிருந்த பீமன், அர்ச்சுனன், நகுலன் சகாதேவன் இவர்களை பணயம் வச்சு ஆடறப்பவாவது, காப்பாத்தி இருக்கலாம். அதையும் நீங்க செய்யல.
'பாவம், அந்த அபலைப் பெண். ஒன்றும் அறியாத உன் சகோதரி, திரவுபதி. 'அவள் அதிர்ஷ்டக்காரி. அவளை பணயம் வச்சு ஆடு. ஜெயிச்சுட்டா, இழந்த நாடு, நகரங்களையெல்லாம் திருப்பி குடுத்துடுறேன்...'ங்கிறான் துரியோதனன்.
'அந்த சமயத்துலேயாவது, பாண்டவர்களுக்கு வெற்றி கிடைக்கிற மாதிரி பண்ணியிருக்கக் கூடாதா?
'அப்பல்லாம் சும்மா இருந்துட்டு, அந்த பெண்ணை, துச்சாதனன் இழுத்து வந்து துகில் உரியற சமயத்துல காப்பாத்துனியே... இது நியாயமா, முறையா, அறமா?'ன்னு கேட்டான், உத்தவன்.
இதுக்கு, பரந்தாமன் என்ன சொல்றார்ன்னா...
'உத்தவா, தருமனை, துரியோதனன் சூதாட அழைக்கும்போது, என்ன சொன்னான்? நான் பணயம் வைக்கிறேன். எனக்கு பதிலா என் மாமன் சகுனி, பகடைக் காய்களை உருட்டுவான்னு சொன்னான்.
'உடனே, தருமன் என்ன சொல்லியிருக்கணும்? எனக்கு பதிலா என் மைத்துனன் கண்ணன், பகடை காய்களை உருட்டுவான்னு சொல்லியிருக்கலாமே; அப்படி சொல்லல.
'என்ன செஞ்சான் தெரியுமா, துரியோதனன் கூட சூதாட்டத்துக்கு சம்மதிச்சுட்டோம். கடவுளே, இது என் மைத்துனன் கண்ணபிரானுக்கு தெரியப்புடாதுன்னு வேண்டிக்கிட்டான். எனக்கு, மனசால தடை போட்டுட்டான், தருமன்.
'அதனால, என்னை கூப்பிடுவாங்கன்னு அரண்மனைக்கு வெளியிலேயே காத்துக்கிட்டிருந்தேன். பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன், திரவுபதி இவங்களை பணயம் வச்சு ஆடறப்பவாவது கூப்பிடுவாங்கன்னு பார்த்தேன். அப்பவும் அவங்க என்னை நினைக்கல.
'திரவுபதியின் கூந்தலைப் பிடிச்சு இழுக்கறான், துச்சாதனன். அப்ப கூட தருமன், தன் உடல் பலத்தால தடுக்க முயற்சி பண்ணினானே தவிர, என்னை நினைக்கல. துரியோதனன் சபைக்கு இழுத்துச் செல்லப்பட்ட திரவுபதி, அறநுால்களையும், அரச நீதிகளையும் சொல்லிக்கிட்டிருந்தாளே தவிர, என்னை நினைக்கல.
'துகில் உரியற நேரத்துல தான், 'ஹரி ஹரி கண்ணா பரந்தாமா'ன்னு கூப்பிட்டாள். அதனாலதான், அப்ப போய் நான் காப்பாத்தினேன்...' என்றான், பரந்தாமன்.
'அப்படின்னா, அழைச்சா தான் நீ போவியா... நீயாக போக மாட்டாயா?' என, கேட்டான், உத்தவன்.
'ஆமாம். அழைச்சா தான், நான் போவேன். மனிதர்கள் செய்யக் கூடிய செயல்களை எல்லாம் அவங்க அவங்க போக்கிலேயே விட்டுட்டு பார்த்துக்கிட்டிருப்பேன். நான் குறுக்கிட்டு ஒன்றுமே சொல்ல மாட்டேன்...' என்றான், பரந்தாமன்.
'மனுஷன் தவறு பண்ணினா திருத்த மாட்டாயா, சும்மா பார்த்துக்கிட்டு தான் இருப்பியா?' என, கேட்டான், உத்தவன்.
'நான் மனுஷனுடைய உள்ளத்துல இருக்கறப்போ, மனுஷன் தவறு செய்ய மாட்டான்...' என்றான், பரந்தாமன்.
யார் பகவானை நினைக்கிறாங்களோ, அவங்க உள்ளத்துலே எல்லாம் அவன் இருக்கிறான். அப்படி பகவான் இருக்கிறப்போ தவறு செய்ய அஞ்சுவான், மனிதன். இந்த உண்மையை உணர்த்துவது தான், உத்தவகீதை.
அவர் கூறி முடித்து, தான் கொண்டு வந்த தயிர் சாதத்தை சாப்பிடலானார்.
'லென்ஸ் மாமா, வேறு இடத்துக்கு சீக்கிரமா மாற்றிக் கொண்டு வந்தால் தேவலை...' என்று நினைத்தேன். போன காரியம் முடிந்தது என்பதற்கு அடையாளமாக, 'தம்ஸ் - அப்' காட்டியபடி வந்தார், லென்ஸ் மாமா.
ப
ஒரு ரயில்வே ஸ்டேஷன். அங்கே நின்னுக்கிட்டிருந்த ஒருத்தரைப் பார்த்து, 'சார்... உங்களுக்கு மது பழக்கம் உண்டா...' என்று, கேட்டான், வந்தவன்.
'சுத்தமா கிடையாது சார்...' என்றார், அங்கிருந்தவர்.
'சரி... அப்படின்னா, இந்த மது பாட்டிலை கொஞ்ச நேரம் வச்சுக்கங்க. நான் போய் டிக்கெட் வாங்கிக்கிட்டு வந்துடறேன்...' என்று, அதை கொடுத்துட்டு ரொம்ப நம்பிக்கையோட நடந்து போனான்.
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது!
