PUBLISHED ON : ஜன 18, 2015

ஆங்கில பத்திரிகையான, டைம் இதழ் சமீபத்தில், 100 பிரபலங்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டது. போப் ஆண்டவர், ஒபாமாவுடன் நான்கு இந்தியர்களின் விவரங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. நரேந்திர மோடி, அரவிந்த் கெஜ்ரிவால், அருந்ததிராய், அருணாசலம் முருகானந்தன் தான் அந்த நால்வர். மேலே இருக்கும் மூவரையும் தெரியும். ஆனால், யார் இந்த அருணாசலம்?
கோவையைச் சேர்ந்த இவர், சாதனை படைக்க எப்போதும் துடித்துக் கொண்டிருப்பவர். குறைந்த விலையில் நாப்கின் தயாரிக்க முடிவு செய்தார். இந்த ஆராய்ச்சிக்கு பெண்களை பயன்படுத்த முடியாது என்பதால், புட்பால் பிளாடருக்குள், ஆட்டு ரத்தம் நிரப்பி, பல முறை ஆராய்ச்சி செய்தார். கணவரின் செயல் கண்டு வெறுப்படைந்த மனைவி, அவரை விட்டு பிரிந்து போனார். ஊராரும், அவரை பைத்தியம் என்று ஏளனம் செய்தனர். ஆனால், அவர் எதையும் கண்டு கொள்ளாமல் தன் ஆராய்ச்சியை தொடர்ந்தார். நான்கரை ஆண்டுகளுக்கு பின், விலை குறைந்த, சுகாதாரமுடைய நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தார். இதையடுத்து, பொருளாதார ரீதியாக, முன்னேறினார். ஏழைகளும் பயன்படுத்தக்கூடிய விலை குறைந்த நாப்கின் தயாரித்த இவரை, உலகிற்கு அறிமுகப்படுத்தி, பெருமைப் படுத்தியுள்ளது, 'டைம்' பத்திரிகை!
— ஜோல்னாபையன்.
