PUBLISHED ON : மார் 27, 2022

தேவலர் எனும் பிரம்மசாரி, வேதங்களிலும் ஞான நுால்களிலும் கரை கண்டவர்; துாய்மையான குணங்களும், நல்ல மனமும் கொண்டவர். அவர், தன் மகளுக்கு திருமணம் செய்யத் தீர்மானித்தார்.
அதை அறிந்த மகள், 'அப்பா... குருடரும், குருடு இல்லாதவருமான ஒருவருக்கு என்னைக் கல்யாணம் செய்து கொடுங்கள். இதுதான் என் விருப்பம்...' என்றாள்.
'என்னம்மா இது, பைத்தியம் போலப் பேசுகிறாயே. நடக்கக் கூடியதா இது...' என, கேட்டார்.
'அப்பா... எனக்குப் பைத்தியம் பிடிக்கவில்லை. உங்களுக்குத் தகுந்தவராகவும், நான் சொன்னதற்கு ஏற்றாற்போலவும் மாப்பிள்ளை பாருங்கள்...' என, தீர்மானமாகச் சொல்லி விட்டாள், மகள்.
மகள் தீர்மானத்தை ஏற்ற தேவலர், சீடர்களை அனுப்பினார்.
சீடர்களும் பல ஆசிரமங்களுக்கும் போய்த் தகவல் கூறினர்.
தேவலர் பெருமையை அறிந்த, மணமாகாத முனிவர்கள் பலரும் வந்து குவிந்தனர். வந்தவர்கள் அனைவரையும் பார்த்த சுவர்ச்சலை, 'இந்தச் சபையில், குருடும், குருடு இல்லாதவருமான ஒருவர் இருந்தால், அவர் தான் என்னைத் திருமணம் செய்து கொள்ளத் தகுந்தவர்...' என்றாள்.
சபையில் இருந்தோர் அனைவரும் அதைக்கேட்டு, 'அறிவில்லாதவள் இவள்.போகாத ஊருக்கு வழி தேடுகிறாள்.இவளுக்காகப் போய், தேவலர் நம்மை வரவழைத்தாரே...' என்று ஏசி விட்டுத் திரும்பினர்.
சில நாட்கள் ஆனது. சுவேதகேது என்பவர், சுவர்ச்சலையை மணம் முடிக்க வந்தார்.
அவரை மகள் முன் நிறுத்தி, 'அம்மா... உத்தாலக மகரிஷியின் பிள்ளையும், வேதங்களில் கரை கண்டவருமான, சுவேதகேது உன்னை மணக்க வந்திருக்கிறார்...' என்றார், தேவலர்.
வந்தவரைப் பார்த்தாள், சுவர்ச்சலை.
'பெண்ணே... உன் நிபந்தனை தெரிந்துதான் வந்திருக்கிறேன். எந்தக் கண்ணால் உலகம் பார்க்கிறதோ, பார்த்து செயல் செய்கிறதோ, பார்த்தவுடன் மனம் நினைக்கிறதோ, புத்தி உண்மையை அறிகிறதோ, அப்படிப்பட்ட, 'ஆத்ம ஞானக்கண்' எனக்கில்லை.
'ஆத்ம ஞானக்கண் இல்லாதவன், பிறவிக்குருடன் என்று சொல்லப்படுகிறான். அந்த ஞானக்கண் இல்லாத நான், குருடன். அதே சமயம், சாதாரணமான உலகப் பார்வையுடன், தினமும் நான் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து வருகிறேன்; பற்றுதல் இல்லாமல் செய்கிறேன்.
'காரியமான உலகையும், அதற்குக் காரணமான பரமாத்மாவையும் நினைப்பதன் மூலம், நான் சாந்தமாய் இருக்கிறேன். உன் வாக்குப்படி, உனக்கு நான் கணவனாகிறேன். உன் பதில் என்ன...' என்று, கேட்டார், சுவேதகேது.
சுவேதகேதுவை மணவாளனாக ஏற்றாள், சுவர்ச்சலை.
ஆழமான ஞானத்தைச் சொல்லும் இக்கதை, பெண்ணின் விருப்பம், அவளுடைய புத்தி கூர்மை, பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் தந்தை என, பலவிதமான தகவல்களையும் சொல்கிறது.
பி. என். பரசுராமன்
ஆன்மிக தகவல்கள்!
கோவில் குளங்களில் உப்பை கரைத்தால், பாவம் அனைத்தும் கரைந்து போகும்.
