PUBLISHED ON : மார் 27, 2022

விஜய் சேதுபதியின், கதை இலாகா!
சந்தானம், யோகி பாபு போன்ற சில நடிகர்கள், காமெடி இலாகா வைத்திருப்பதை போன்று, விஜய் சேதுபதி, தனக்கான கதைகளை கேட்டு தேர்வு செய்வதற்கு ஒரு கதை இலாகாவை உருவாக்கி இருக்கிறார். சமீபத்தில், தமிழில் நடித்து வெளியான படங்கள் அடுத்தடுத்து அதிர்ச்சி தோல்வியை கொடுத்தன. இனிமேல் தோல்விகள், தன்னை தொடர விடக் கூடாது என்பதற்காகவே, தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி பட இயக்குனர்கள், தன்னிடத்தில் சொல்லும் கதைகளை, தான் மட்டுமின்றி, தன் கதை இலாகாவை சேர்ந்தவர்களையும் உடன் வைத்து கேட்கிறார்.
— சினிமா பொன்னையா
'ஷாக்' கொடுக்கும், ராஷ்மிகா மந்தனா!
தெலுங்கில், 'நம்பர் ஒன்'னாக இருக்கும், ராஷ்மிகா மந்தனா, ஹிந்தியில் காலுான்றியதை அடுத்து, புதிய தெலுங்கு படங்களில் நடிக்க, 5 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறார். அதேசமயம், சில நட்பு வட்டார தயாரிப்பாளர்கள், நட்புக்காக சில காட்சிகளில் நடிக்குமாறு கேட்டால், 'இரண்டு காட்சி என்றாலும், 1 கோடி ரூபாய் வேண்டும்...' என்று, அடித்துச் சொல்கிறார்.
அதைக்கேட்டு அதிர்ச்சியடையும் அவர்கள், 'குட்டை பாவாடை அணிந்து, குத்துப்பாட்டுக்கு ஆடுவதாக இருந்தால் இது ஓ.கே., ரெண்டு காட்சிகளில், 'டீசன்ட்' ஆக வந்து தலைக்காட்டவே இப்படியா?' என்று எதிர் கேள்வி கேட்க, 'காற்றுள்ள போது தானே துாற்றிக் கொள்ள முடியும்...' என்று, நெஞ்சை நிமிர்த்தி, பதில் கொடுக்கிறார்.
— எலீசா
கவர்ச்சிக்கு மாறிய, ஐஸ்வர்யா ராஜேஷ்!
தமிழில், குடும்ப நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும், ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது, ஆந்திர சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கிறார். ஆனால், 'நடித்தால், 'சிங்கிள் ஹீரோயின்' கதைகளில் மட்டுமே நடிப்பேன்...' என்று கறாராக கூறி வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷை இரண்டாவது நாயகியாக நடிக்க யாராவது வற்புறுத்தினால், 'மெயின் ஹீரோயினாக நடிக்க வைத்தால், 'இன்ச் பை இன்ச்' ஆக கவர்ச்சி காட்டி நடிப்பேன். ஆனால், இரண்டாவது நாயகி என்று சொன்னால், குடும்ப குத்து விளக்கு ஆகிவிடுவேன். எது, 'பெஸ்ட்' என்று நீங்களே முடிவு செய்யுங்கள்...' என்று, 'சொடக்கு' போடுகிறார்.
இதனால், இரண்டாவது நாயகியாக ஐஸ்வர்யாவை ஒப்பந்தம் பண்ண வருபவர்கள் கூட, 'ஹீரோயின்' ஆக நடிக்க வைப்பதற்கு, 'அட்வான்சை' திணித்துச் செல்கின்றனர்.
— எலீசா
மீண்டும், பாபிசிம்ஹா!
ஜிகர்தண்டா படத்தில், வில்லனாக நடித்த, பாபிசிம்ஹாவுக்கு, ரஜினியே போன் செய்து அவரது நடிப்பை பாராட்டினார். அதன்பிறகு, 'ஹீரோ, வில்லன்' என, இரட்டை வேடம் கொடுத்ததால், மார்க்கெட்டில் பின்தங்கியிருந்தவர், விக்ரமுடன், மகான் படத்தில், அதிரடி வில்லனாக நடித்து, மிரட்டியதை அடுத்து, மீண்டும் பரபரப்பு வளையத்திற்குள் வந்திருக்கிறார்.
இதன்பிறகு, பல மெகா நடிகர்களின் பட வாய்ப்புகள், பாபி சிம்ஹாவை நோக்கி படையெடுத்துள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள, 'எத்தனை கொடூரமான வில்லனாக கூட நடித்து, மற்ற வில்லன் நடிகர்களை மிரட்ட தயாராக இருக்கிறேன். அப்படிப்பட்ட வேடங்களில் என்னை நடிக்க வையுங்கள்...' என்று, இயக்குனர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
— சி.பொ.,
தனுஷுக்கு அதிர்ச்சி கொடுத்த, இயக்குனர்கள்!
தொடர்ந்து, 'ஹிட்' படங்களாக கொடுத்து வந்த, தனுஷ் நடிப்பில் வெளியான, ஜகமே தந்திரம் மற்றும் மாறன் ஆகிய இரண்டு படங்களும் அவருக்கு அதிர்ச்சி தோல்வியாக அமைந்து விட்டது. இதன் காரணமாக, தன் மார்க்கெட் இறங்கு முகத்தை சந்தித்து விடுமோ என்று கலவரத்தில் இருக்கும் தனுஷ், 'கதை விஷயத்தில், இன்னும் கூடுதல் கவனம் செலுத்தப் போகிறேன். அதோடு இனிமேல், ஒரே நேரத்தில், பல படங்களில் நடிப்பது என்ற பாணியை மாற்றி, ஒரு படத்தில் நடித்த பிறகு, அடுத்த படம் என்ற அஜித், விஜயின் பாணிக்கு மாறப் போகிறோன்...' என்கிறார்.
— சினிமா பொன்னையா
சினி துளிகள்!
* தமிழ், தெலுங்கை தொடர்ந்து, பாலிவுட்டிலும், 'என்ட்ரி' கொடுத்துள்ள, சமந்தா, அடுத்தபடியாக, ஹாலிவுட்டில், கால் பதிக்க போகிறார். எழுத்தாளர் டைமரி முராரி எழுதியுள்ள, அரேஞ்ச்மென்ட்ஸ் ஆப் லவ் என்ற ஆங்கில படத்தில் நடிக்கப் போகிறார்.
* பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, கொல்லிமலையில், 1,500 அடி உயரமுள்ள ஆகாய கங்கை என்ற அருவி அருகே நடைபெறுகிறது.
அவ்ளோதான்!
