PUBLISHED ON : ஜன 30, 2011

- ஆர்.சீனிவாசன்
வாழ்க்கையில் பிரகாசிக்க, ஊனம் ஒரு தடையில்லை என்பதை பலர் நிரூபித்துள்ளனர். அந்த வரிசையில், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார் சென்னை பெருங்குடியை சேர்ந்த மாற்றுத் திறனாளி பெண் சுவேதா. இவரின் தந்தை கணேசன், இந்து மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர். தாய் டெய்சி, பெருங்குடி பஞ்சாயத்து பள்ளி ஆசிரியை. சுவேதா, தற்போது, அரசு கவின் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவி. சிறுவயதில் இருந்தே இவருக்கு காதும் கேட்காது, பேசவும் முடியாது. அவரின் பள்ளிப் பருவம் தேனாம்பேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் காது கேளாதோர் பள்ளியில்தான். படிப்பில் சிறந்து விளங்கியதால், இரண்டாம் வகுப்பில் இருந்து நான்காம் வகுப்பிற்கு, 'டபுள் புரொமோஷன்' கிடைத்தது. பிளஸ் 2 வில், 75 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார். ஓவியம் வரைவதில் தீவிர காதல் கொண்ட சுவேதாவின் ஆர்வத்தை புரிந்து கொண்ட பெற்றோர், மூன்றாம் வகுப்பில் இருந்தே அவரை ஓவிய வகுப்பிற்கு அனுப்பினர். பின், திருவான்மியூரில் மாற்று திறனாளிகளுக்கு கலை பயிற்சி அளிக்கும் கூடத்தில் சேர்க்கப்பட்டார். பென்சில் (லைன்), வாட்டர் கலர், கேன்வாஸ் பெயின்ட், ஆயில் பெயின்ட் ஆகியவற்றில் சிறந்து விளங்கினார். அவரின் ஓவியங்கள், கைதேர்ந்த ஓவியக் கலைஞர்களே அதிசயிக்கும் வகையில், காட்சியளிக்கின்றன. காட்டன் பஞ்சில் ஓவியம் வரைவது அவரது ஸ்பெஷாலிட்டி. மனிதர்களை பார்த்து தத்ரூபமாக வரைவதிலும் கில்லாடி.
சென்னை நகரில், 'தூரிகை மொழி' என்ற பெயரில், ஓவியக் கண்காட்சிகளை சுவேதா நிகழ்த்தியுள்ளார். நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்த ஓவியப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றுள்ளார். 2007ம் ஆண்டு பெற்ற யுவகலா பாரதி விருது, அவருக்கு கிடைத்த முதல் அங்கீகாரம். இந்திய ஜனாதிபதியிடம் சிறந்த படைப்பாற்றலுக்கான தேசிய விருதும் கடந்த ஆண்டு பெற்றுள்ளார்.
'பொதுவாக மாற்று திறனாளிகளுக்கு ஏதேனும் ஒரு சிறப்பு அம்சம் காணப்படும். அந்த வகையில் சுவேதாவிடம் ஓவியத் திறமை சிறந்து வெளிப்படுகிறது. ஓவிய வகுப்புகளில் கவனம் சிதறாமல், மிக நுணுக்கமாக வரைபவர். சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் ஓவியர்களை போல, சிறு சிறு விஷயங்களில் கூட கவனித்து வரைகிறார். என் வாழ்நாளில் சுவேதாவை போல ஒரு மாணவியை நான் பார்த்ததில்லை. அவரிடம் அபார திறமை உள்ளது. அவருக்கு தேசிய விருது கிடைத்ததில் ஆச்சரியம் இல்லை...' என்கிறார் சுவேதாவின் ஆசான் ராமசுரேஷ். 'மகள் ஒரு மாற்று திறனாளி என தெரிந்ததும், அவளுக்கு எதில் ஈடுபாடு உள்ளது என்பதை கண்டறிந்து, அதில் பயிற்சி கொடுத்தோம். அதற்கு பிரதிபலனாக, தேசிய விருதை பெற்று, எங்களுக்கு பெருமை சேர்த்து விட்டாள். மற்ற மாற்று திறனாளிகளுக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறாள் எங்கள் மகள் ...' என புளகாங்கீத மடைகின்றனர். சுவேதாவின் பெற்றோர். சுவேதா ஓவியம் வரைய ஆரம்பித்தால் இரவு, பகல், உணவு, தண்ணீர் என எதையும் பார்க்க மாட்டார். தொடர்ந்து பல மணிநேரம் அவரின் கைகள் தூரிகை பிடிக்கும். மாதக் கணக்கில் தொடர்ந்து ஓவியங்களை வரைந்து சாதனை படைத்துள்ளார். அவரின் கை வண்ணத்தில் உருவான ஓவியங்கள், பல்வேறு தனியார் நிறுவனங்களின் வரவேற்பறைகளை அலங்கரிக்கின்றன. இவருக்காக வீட்டிலேயே ஓவியக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, வார விடுமுறை நாட்களில் மாணவ, மாணவியருக்கு ஓவியம் கற்று தருகிறார். மாற்று திறனாளிகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கிறார். மனதில் தோன்றும் கற்பனைகளையும், எண்ணங்களையும் வார்த்தையால் பேச இவரால் முடியாவிட்டாலும், அவற்றை வண்ணத்தால் குழைத்து, தூரிகையால் பேசுகிறார் இந்த சாதனைப் பெண். ***
