தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்

அன்புடன் அந்தரங்கம்

அன்புடன் அந்தரங்கம்


PUBLISHED ON : ஜன 30, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 30, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மா —

நான் ஒரு பெண்; வயது 27. பன்னாட்டு நிறுவனம் ஒன்றில், 'சிஸ்டம் அனலிஸ்ட்'டாக பணிபுரிகிறேன். சமீரா ரெட்டி போல உயரமாய் இருப்பேன். ரெட் ஒயின் சூப்பும் பழக்கம் உண்டு. புகைக்கும் ஆண் நண்பர்கள் உடனிருக்கும் போது, அவர்களின் சிகரட்களை வாங்கி, புகைத்து பார்த்தது உண்டு. திருமணத்திற்கு முன், பாதுகாப்பான செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்பது என் கொள்கை. என் அப்பா ரிட்டையர்டு ஐ.ஏ.எஸ்., ஆபிசர்; அம்மா ஆர்க்கிடெக்ட். நான் வீட்டுக்கு ஒரே மகள். வீட்டிற்கு நான் எந்த பணமும் கொடுப்பதில்லை. சம்பளம் வாங்கி தாம் தூம் என்று செலவு செய்வேன். எங்களுடைய நிறுவனத்தில், சம வயது இளைஞன் ஒருவன், சாப்ட்வேர் ரைட்டராக பணிபுரிகிறான். நான்கு வருடங்களுக்கு முன், எங்களுக்குள் எப்படியோ காதலாகி விட்டது. நாங்கள் சுற்றாத இடமில்லை. நேரடி தாம்பத்யம் தவிர, அனைத்தும் எங்களிடையே உண்டு. அவனுடைய பெற்றோர் தென் மாவட்ட கிராமத்தைச் சேர்ந்தவர்கள். மூன்று தங்கைகள், மூன்று தம்பிகள் உள்ள பெரிய குடும்பம்.அடிக்கடி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி, என்னை வற்புறுத்த ஆரம்பித்தான் கிராமத்து காதலன். நானும், அவனை ஏமாற்றும் எண்ணத்தில் இல்லை. 'அடுத்த ஆறு மாதத்திற்குள் நம் காதலை என் பெற்றோரிடம் தெரிவிக்கிறேன். அவர்கள் மறுக்க மாட்டார்கள். அவர்கள் சம்மதித்தால், ஊரைக் கூட்டி திருமணம்; சம்மதிக்கா விட்டால், பதிவுத் திருமணம்...' என, அவனிடம் வாக்குரைத்தேன். இடையில், பெற்றோரை பார்க்கப் போன போது, அப்பா ஒரு மிலிட்டரி டாக்டர் வரனை காட்டினார். ஆள் ஹிருத்திக் ரோஷன் மாதிரி இருந்தான். பெரும் பணக்காரன்; தூரத்து சொந்தம். அவனுடன் போனில் பேசச் சொல்லினர் பெற்றோர்; பேசினேன். ஆணாதிக்கம் இல்லாதவனாக தெரிந்தான்.

காதலை தெரிவிக்க போன நான், மனம் மாறி, அப்பா காட்டிய வரனை மணந்து கொள்ள சம்மதித்தேன். அடுத்த ஒரு மாதத்தில், காதலனுக்கு தெரியாமலேயே எனக்கும், மிலிட்டரி டாக்டருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தது. இரண்டு மாத அவகாசத்தில் திருமண தேதி குறிக்கப்பட்டது. திருமண அழைப்பிதழை எடுத்துக் கொண்டு ஊர் திரும்பினேன். என் காதலனுக்குத் தான், முதல் இன்விடேஷனை கொடுத்தேன்; அழுதான். அவனுக்கு பின்வரும் இழப்பீட்டு யோசனையை சொன்னேன்...

'இருவரும் மோதிரம் மாற்றி காந்தர்வ மணம் செய்து கொள்வோம். போலி ஹனிமூன் டிரிப் மேற்கொண்டு, ஒரு வாரம் அலுக்க அலுக்க தாம்பத்யம் நுகர்வோம். குழந்தை பெற்றுக் கொள்வது மட்டும் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளும் மிலிட்டரி டாக்டர் மூலம்தான். திருமணத்திற்கு பின்னும் நம் தொடர்பு தொடரும். என் மரணம் வரை எனக்கு இரு கணவன்கள். ஒரு காந்தர்வ கணவன்; ஒரு தாலி கட்டிய கணவன். எதாவது ஒரு கட்டத்தில், நீ திருமணம் செய்து, என்னை விட்டு விலக விரும்பினால், தாராளமாக நீ விலகலாம். காந்தர்வ மணம், ஹனிமூன் ட்ரிப் வேண்டாம் என்றால், ஐந்து லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு தருகிறேன்; வாங்கிக் கொள். இப்பணம் நீ காதல் தோல்வியால் தற்கொலை செய்யாமலிருக்க அல்லது நீ என்னை எதிர்காலத்தில் பிளாக்-மெயில் பண்ணா திருக்க. சொன்ன இரு யோசனைகளில் உனக்கு எது பிடித்திருந்தாலும், எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் தயாரித்து, கையெழுத்து இட்டுக் கொள்வோம்...' என்றேன். என் காதலன், பேயறைந்தது போல் ஆனான். 'நீயெல்லாம் ஒரு தமிழ் பெண்ணா?' என காறி துப்பினான். ஒரு வாரமாக நானும், அவனும் இது குறித்து தொடர்ந்து சண்டை போட்டு வருகிறோம். உங்களது ஆலோசனை பகுதியை தொடர்ந்து இல்லாவிட்டாலும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வாசித்து வருகிறேன். என் காதலனிடம் நான் சமர்ப்பித்த இரு இழப்பீட்டு யோசனைகளின் சாதக பாதகங்களை அலசி, ஒரு தீர்வு சொல்லுங்கள்.

நாட்டில் எத்தனை ஆண்கள், தான் விரும்பும் இரட்டை வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ்ந்து

வருகின்றனர். அந்த ஆண்களில் நடிகர்களும், பலஅரசியல்வாதிகளும் அடக்கம். சமுதாயம், ஆண்களுக்கு வழங்கும் சலுகையை, பெண்கள் நாங்களும் அனுபவித்து விட்டு போவதில் என்ன தப்பு? தீர்வு, பிராக்டிகலாக இருக்கட்டும்.

— இப்படிக்கு, இதயம் சொல்வதை அப்படியே பின்பற்றும் அல்ட்ரா மாடர்ன் யுவதி.

அன்புள்ள மகளுக்கு —

உன் கடிதம் கிடைத்தது. பன்னாட்டு நிறுவனங்கள் தரும் ஏராளமான சம்பளம்... ஒரு நாளைய 24 மணி நேரமும், ஆண்களுடன் பழகக் கூடிய பணிச்சூழல்... பேமிலி கமிட்மென்ட்ஸ் சிறிதும் இல்லாத குடும்பச் சூழல்... செயற்கைக்கோள் அலைவரிசை, 'டிவி'கள் உருவாக்கும் காக்டெய்ல் கலாசாரம்... கிரிமினல் ஆண்களை ஈயடிச்சான் காப்பியடிக்கும் துணிகர மனோபாவம் போன்றவை உன்னை இப்படி சிந்திக்க வைத்திருக்கின்றன.

உன் இரு இழப்பீட்டு யோசனைகளை எடை போட்டு பார்ப்போம் மகளே...

காந்தர்வக் கணவனுடன் ஒரு மினி ஹனிமூன் ட்ரிப் போய், தாம்பத்யம் துய்க்கலாம் என்றிருக்கிறாய். குழந்தை பெற்றுக் கொள்வது மட்டும் மிலிட்டரி டாக்டர் மூலமாக என நொண்டி சமாதானமும் கூறிஇருக்கிறாய். திட்டமிட்டப்படி செயல்படுவது மிக சிரமம். திட்டமிட்டு கொலை செய்யும் கொலையாளி, ஓரிரு அலிபிகளை தவறவிட்டு, போலீசில் மாட்டிக் கொள்கிறான். வருஷக் கணக்கில் திட்டமிட்டு கொள்ளைடியக்கும் புரொபஷனல் திருடன், ஓரிரு தடயங்களை தவற விட்டு, போலீசில் மாட்டிக் கொள்கிறான். பாதுகாப்பான தாம்பத்யம் போரடித்து, எதாவது ஒரு தடவை, பாதுகாப்பற்ற தாம்பத்யம் மேற்கொண்டு, கிராமத்து காதலன் மூலம் நீ கர்ப்பம் தரிக்க வாய்ப்பிருக்கிறது. தவிர, இந்த போலி ஹனிமூன் ட்ரிப்புக்கு பிறகு உன் காதலன், உன் மீதும், உன் உடல் மீதும் அதிக உரிமை கொண்டவன் ஆகி விடுவான். உங்கள் ஹனிமூன் ட்ரிப் ஆதாரங்களை எடுத்து வைத்து, உன் கிராமத்து காதலன் உன் முறைப்படியான திருமணத்தை தடுத்து நிறுத்துவான்.

மிக மிக நல்லவனாய் இருக்கும் உன் காதலனை, உன் யோசனைகள் மிக மிக கெட்டவனாக்கக் கூடும். போலி ஹனிமூன் ட்ரிப் புகைப்படங்களை, வீடியோ கிளிப்பிங்ஸ்களை நெட்டில், எம்.எம்.எஸ்.,சில் அனுப்பி, உன்னை அவன் நிர்மூலப்படுத்த வாய்ப்பிருக்கிறது. போலி ஹனிமூன் ட்ரிப் போய் வந்த பிறகு, உன் கல்யாணத்தை நிறுத்தச் சொல்வான். நிர்தாட்சண்யமாக மாட்டேன் என்பாய். உன்னை கொலை செய்யவும் துணிவான். அகால மரணம் தேவையா?ஐந்து லட்சம் ரூபாய் நஷ்டஈடு கொடுத்து, ருசி காட்டி விட்டாய் என்றால், பின்னாளில் தொடர்ந்து பிளாக்-மெயில் செய்வான். கோடிக்கணக்கில் பணம் கறக்க பார்ப்பான். ஒரு கட்டத்தில், அவனது தொல்லைகள் பொறுக்காது, அவனை வாடகைக் கொலையாளி வைத்து கொல்வாய் அல்லது கொல்லப் பார்ப்பாய். 30 வயதுக்குள் ஆயுள் தண்டனை அல்லது தூக்குத் தண்டனை கைதி ஆவாய்.மூன்றாவது கோணம் பார்ப்போம்... நீ இரட்டைக் கணவருடன் வாழ்வதை பார்த்து, மூன்றாவது ஆண் யாராவது காட்சி அமைப்புக்குள் பிரவேசிக்கலாம். அவன், பணத்திற்காக உன்னை பிளாக்-மெயில் பண்ணுவான் அல்லது உன்னுடல் கேட்பான். அவனை அமைதிப்படுத்த, நீ வாடகைக் கொலையாளி அமர்த்த வேண்டி வரும் அல்லது அவனுக்கு இணங்கிப் போக வேண்டிவரும். இரண்டு மூன்றாகி, மூன்று முப்பது ஆவதற்கா? உன் யோசனைகள், கொலை, கொள்ளை, பிளாக்-மெயில், தற்கொலை போன்ற இருட்டு பூதங்களை உருவாக்கக் கூடியவை. எதையும், உணர்வால் யோசித்தால் ஆபத்து; அறிவால் யோசித்தலே ஆக்கம். நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா மகளே...

கிராமத்து காதலன், மிலிட்டரி டாக்டர் இருவரையும் மனத் தராசில் வைத்து எடை போடு. கிராமத்துக் காதலன் தேவை என்றால், மிலிட்டரி டாக்டருடனான திருமணத்தை தயவு தாட்சண்யமில்லாமல் ரத்து செய். பெற்றோருக்கு காதலை தெரிவித்து, கிராமத்து காதலனை முறைப்படி மணந்து கொள். பெற்றோர் மறுத்தால் பதிவுத் திருமணம். மிலிட்டரி டாக்டரை மணக்க விரும்பினால், கிராமத்து காதலனை கத்தரித்து விடு; நோ மினி ஹனிமூன். அழும் குழந்தைக்கு தாய் பால் புகட்டாமல், குழந்தை கையில் ஆயிரம் ரூபாய் லஞ்சம் திணிக்க முடி

யுமா? அப்படி இருக்கிறது நீ கிராமத்து காதலனுக்கு ஐந்து லட்சம் ரூபாய் கொடுக்க விரும்புவது.ஆர்.டி.எஸ்., மருந்து 20 கிலோவை மடியில் கட்டிக் கொண்டு, ஒரு நாள் முழுக்க திரிவது போன்றது திருமணத்திற்கு முந்தைய பாதுகாப்பற்ற உறவு. தற்செயலாய் வெடிக்க, லட்சம் சதவீதம் வாய்ப்புண்டு. வாழ்க்கையை எப்படியும் வாழலாம்... என்னைச் சுற்றியுள்ள நட்பும், உறவும், சமூகமும் எப்படி போனால் எனக்கென்ன என்ற மனோபாவம் உள்ள பெண்கள்தான் உன் கொள்கைகயை ஆதரிப்பர்.உன் தற்போதைய குணாதிசயம் தற்காலிகமானது. நீயே இருவரில் ஒருவனை மணம் புரிந்து, முறையாக குடும்பம் நடத்தி, குழந்தை பெற்றாயானால், முழுக்க மாறி விடுவாய். கணவனை தவிர, பிற ஆண்களை பார்க்க விரும்பாது சேணம் பூட்டிய குதிரை ஆகிவிடுவாய்.

கடைசியாக ஒரே வார்த்தை... மிலிட்டரி டாக்டரை திருமணம் செய்து, வாழ்க்கையில் செட்டிலாகி விடு. அதுதான் உன்னைப் பொறுத்தவரையில் சாலச் சிறந்தது.

- என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us