PUBLISHED ON : ஜன 30, 2011

சீனர்களின் புத்தாண்டுக் கொண்டாட்டம் தூள் பறக்கிறது. இது, அவர்களுக்கு முயல் ஆண்டு. எலி, எருது, புலி, முயல், கடல் நாகம், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, சேவல், நாய், பன்றி பெயர்களைக் கொண்ட சந்திரமுறை புத்தாண்டை அவர்கள் காலம் காலமாகக் கொண்டாடி வருகின்றனர். வசந்த விழா என்றும் இது வழங்கப்படுகிறது. சீனர்களின் பழக்க வழக்கங்களையும், நம்பிக்கைகளையும் பிரதிபலிக்கும் புராதன ஆண்டுக் கணக்கு முறையாகவும் கருதப்படுகிறது.'விலங்குகள் உங்கள் இதயத்தில் உள்ளன...' என்பது சீனப் பழமொழி. அது, அவர்களின் நம்பிக்கையாக வேரூன்றி விட்டது. வருடங்களுக்கு விலங்குகளின் பெயர் சூட்டப்பட்டதற்கு அதுவே காரணம். பனிரெண்டு ஆண்டு சுழற்சிக்குப் பிறகு, வரும் பிப்ரவரி 3ம் தேதி, முயல் ஆண்டு துவங்குகிறது. இதற்குமுன் 1999ல் முயல் ஆண்டு வந்தது. ஜனவரியில் முடிவடையும் புலி ஆண்டைத் தொடர்ந்து, இப்போது பிறக்கும் முயல் ஆண்டு எப்படி இருக்கும் என்று அவ்வூர் ஜோதிடர்களின் கணிப்பு இதோ...முயல், அமைதியும், சாந்த குணமும் கொண்டது. சலசலப்பு இல்லாமல், காரியத்தில் கண்ணாக இருந்து சாதிக்கும் பண்புடையது. அதனால், முயல் ஆண்டில் பிறந்தவர்கள் அமைதி விரும்பிகள்; அதிகம் பேச மாட்டார்கள். அனைவராலும் விரும்பப்படுவர். மற்றவர்களின் துயரங்களில் பங்கேற்று ஆறுதல் கூறுவர். இவர்கள் கற்பனைத் திறனுள்ளவர்கள். சொந்தப் பாதையில் நடைபோட்டு வெற்றி பெறக் கூடியவர்கள். முயல்களின் உண்மையான குணங்களை, மற்றவர்களால் சுலபமாகப் புரிந்து கொள்ள முடியாது. அசுத்தம், அக்கப்போர், அடிதடி, வன்செயல்கள் முயலுக்குப் பிடிக்காதவை. அதே சமயம், விடுகதைகள், கலைகள், ரகசியங்கள் மிகவும் பிடித்தவை என்பதால், முயல் ஆண்டில் பிறப்பவர்களும் அப்படித்தான் இருப்பர்.ஆடும், பன்றியும், முயலும் நட்பானவை. அதனால், அந்த ஆண்டுகளில் பிறந்தவர்களுக்கு முயல் ஆண்டு அனுகூலமான பலன்களைத் தரும். சேவல், முயலுக்குப் பகையானது என்பதால், சேவல் ராசிக்காரர்களுக்கு முயல் ஆண்டில் நன்மைகள் குறைவாக இருக்கும்.இந்த 2011ல் முயல் ராசிக்காரர்களின் சமூக உறவும், நட்பும் சிறப்பாக அமையும். அவர்களின் காதல் தொடர்புகள் கைகூடி மகிழ்ச்சி நிலவும்; திருமணம் செய்து கொள்வர். புலி ஆண்டில் பிறந்தவர்கள், மேலும் பல அனுகூலங்களை எதிர்பார்க்கலாம்.முயலின் செல்வாக்கால், திறமைகளும், சொத்துகளும் அதிகரித்து ஒளிமயமாக இருக்கும். ஆக்கப்பூர்வமான அறிவாற்றலைப் பெறலாம். செயல்களுக்குரிய சிறப்பான அங்கீகாரம் கிடைக்கும். அதனால், திட்டமிட்டு, விவேகமாக செயல்பட
வேண்டும். உழைப்பால் உயரலாம்.நாய் ஆண்டில் பிறந்தவர்களுக்கு, இந்த முயல் ஆண்டு நல்ல வருடமாக அமையும்.கடல் நாகம், புலி ராசிக்காரர்கள் இந்த முயல் ஆண்டில் சாதகமான பலன்களை அனுபவிப்பர். அவர்களில் ஒரு சாராருக்கு இது அற்புதமான ஆண்டாக இருக்கும். சிலருக்கு சண்டை சச்சரவுகள் ஏற்படலாம்.சீனப் புத்தாண்டு, சீனா, ஹாங்காங், தைவான் ஆகியவற்றுடன் சீனர்கள் வாழும் எல்லா நாடுகளிலும் சிறப்பு விழாவாக, 15 நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது. இந்தோனேசியா, மக்காவ், மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வியட்னாம் ஆகியவை அவற்றில் அடங்கும். இவை இரண்டு நாள் புத்தாண்டு விடுமுறை வழங்குகின்றன.பதினைந்தாம் நாள் விளக்குத் திருவிழா கண்கொள்ளாக் காட்சியை தருகிறது. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அரசு விடுமுறை வழங்கப்படாவிட்டாலும், அங்கு வசிக்கும் சீனர்கள் கோலாகலமாக புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர்.கொரியர்கள், திபேத்தியர்கள், பூட்டானியர்கள், மங்கோலியர்கள், வியட்னாமியர்கள் மற்றும் ஜப்பானியர்களின் புத்தாண்டுக் கொண்டாட்டத்துடன், சீனப் புத்தாண்டு சடங்கு, சம்பிரதாயத்துடன் தொடர்புடையது என்று கூறப்படுகிறது.
'சிவப்பு தான் சீனர்களுக்குப் பிடித்த கலர்...' என்று பாடும் அளவுக்கு, சீன விழாக்களிலும், கொண்டாட்டங்களிலும், சிவப்பு வண்ணம் கொழிக்கிறது. புத்தாண்டு தொடக்க இரவில் குடும்பமாகச் சேர்ந்து அலங்காரச் சிவப்பு விளக்கு வெளிச்சத்தில் உணவருத்தி மகிழ்வர்.பதினைந்தாம் நாள் விளக்குத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. சிவப்புக் காகித உறைகளிலும், பைகளிலும் தான் அன்பளிப்புகள் வழங்கப் படுகின்றன.
சீனர்களின் ஆண்டுக் கணக்கு ஒரே மாதிரி அனுசரிக்கப் படவில்லை. அதனால், இந்த முயல் ஆண்டான கி.பி.2011, சீனக் கணக் கின்படி 4708, 4709 அல்லது 4648 ஆண்டு எனக் கூறப் படுகிறது. ***
