PUBLISHED ON : செப் 13, 2020

கணவன் - மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவது வழக்கமானது தான். அதற்காக, வீட்டுக்குள்ளேயே பாகம் பிரிப்பதெல்லாம் கொஞ்சம் ஓவரான விஷயம் இல்லையா... இப்படிப்பட்ட சம்பவம், சீனாவில் நடந்துள்ளது.
இங்குள்ள டியான்சின் நகரில் வசிக்கும் சென் என்பவருக்கு திருமணமாகி, 30 ஆண்டுகளாகிறது.
சென், சுயநலக்காரர். தனக்குத் தேவையான பொருட்களை மட்டுமே வாங்குவார். மனைவிக்கு, உணவு உட்பட எதுவுமே வாங்கி கொடுப்பது இல்லை. வீட்டையே இரண்டாக பிரித்து, அதில் ஒரு பகுதியில், இவர் வசிக்கிறார். மற்றொரு பகுதியில், அவரது மனைவி வசிக்கிறார். துாக்கம், சாப்பாடு உள்ளிட்ட எல்லா விஷயங்களுமே தனித் தனி தான்.
இன்று நேற்றல்ல; 30 ஆண்டுகளாக, இப்படித் தான் நடக்கிறது, இவர்களின் இல்லற வாழ்க்கை. சமீபத்தில், சமூக வலைதளங்களில் இதுகுறித்த தகவல் வெளியானதும், சென் மனைவியிடம், பத்திரிகையாளர்கள் இது பற்றி கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், 'என் கணவர், எச்சில் கையில் கூட காகம் விரட்ட மாட்டார். உடம்பு முழுவதும் சுயநலம். துவக்கத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தேன். அதற்கு பின், இந்த வாழ்க்கை பழகி விட்டது. இந்த வாழ்க்கையும் ஒரு மாதிரி ஜாலியாகத் தான் இருக்கிறது...' என, அப்பாவியாக சிரிக்கிறார், அந்த பெண்.
- ஜோல்னாபையன்

