PUBLISHED ON : செப் 27, 2020

தென் அமெரிக்க நாடான பெருவில் உள்ள சின்னஞ்சிறிய நகரம், டன்டாரா. இதன் மேயராக இருப்பவர், ஜெமி ரோலாண்டோ. 'கொரோனா' வைரஸ் பரவலை தடுப்பதற்காக, பெருவில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. மக்கள், வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டிருந்தது.
தீவிரமான மது பிரியர், ஜெமி. அவரால் குடிக்காமல் இருக்க முடியவில்லை. தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து, நள்ளிரவு நேரத்தில், ரகசியமான ஒரு இடத்துக்குச் சென்று, வயிறு முட்ட குடித்தார்.
போதை தலைக்கேறியதால், ஆட்டம், பாட்டமும் களை கட்டியது. அந்த இடம், 'கொரோனா' வைரசில் இறப்பவர்களின் உடலை அடக்கம் செய்வதற்காக, சவப் பெட்டிகள் தயார் செய்யும் இடம்.
சத்தம் அதிகமாக இருந்ததால், அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் வாகனத்தின், 'சைரன்' சத்தம் கேட்டதும் தான், மேயர் ஜெமிக்கும், அவரது நண்பர்களுக்கும் சுய நினைவு வந்தது.
போலீசிடம் இருந்து தப்பிக்க, அருகில் இருந்த சவப்பெட்டிக்குள், பிணம் போல் படுத்துக் கொண்டனர். சோதனை நடத்திய போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
சவப்பெட்டிக்குள் இருந்த மேயர் உள்ளிட்ட சிலரின் உடல்களில் அசைவு தென்பட்டதை அடுத்து, அவர்களை கைது செய்தனர். போதைக்கு ஆசைப்பட்டு, சவப்பெட்டிக்குள் செத்து விளையாடிய மேயர், இப்போது, 'கம்பி' எண்ணி வருகிறார்.
இதே நம்ம ஊராக இருந்திருந்தால், சோதனை நடத்த வந்த போலீசார் அனைவரும், கூண்டோடு, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டிருப்பர் தானே...
— ஜோல்னாபையன்

