PUBLISHED ON : மே 16, 2021

ரோஜா படத்தின் மருத்துவமனை காட்சியில், நாயகி மதுபாலாவிடம், வெள்ளைப் பனியாரம் கேட்டு அனைவரையும் ரசிக்கவும், சிரிக்கவும் வைத்த சட்டநாதபுரம் வெங்கட்ராமன் தான், நம் கட்டுரை நாயகன், எஸ்.வி.சேகரின் அப்பா.
தஞ்சை, சட்டநாதபுரத்தை பூர்வீகமாகவும், வைத்தீஸ்வரன் கோவில் வைத்தீஸ்வரனை குல தெய்வமாகவும் கொண்ட இவர், சில காலம் ராணுவத்தில் இருந்தார். வாழ்க்கையில் எப்போதும் ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும், நேர்மையையும் தவறாமல் கடைப்பிடித்தார்; குடும்பத்தினரையும் கடைப்பிடிக்க வைத்தார்.
தொழில் நிமித்தம், 1948ல், குடும்பத்தோடு சென்னைக்கு இடம் பெயர்ந்தார், எஸ்.வி.வெங்கட்ராமன். 'வாஹினி பிலிம் லேபில்' மாதம், 50 ரூபாய் சம்பளத்தில் நாடக நடிகராக வேலைக்கு சேர்ந்தார்.
பெரும்பாலான நாடகங்களில் பெண் வேஷமிட்டு நடித்திருக்கிறார். அந்தக் காலத்து, அவ்வை சண்முகியாக வலம் வந்தார். சோவின் ஆரம்ப கால நாடகங்களை இயக்கியவர்.
திரைப்படக் கல்லுாரியில், 'விசிட்டிங் புரபசர்' என்று, கலை தொடர்பாக பல்வேறு வேலைகளை செய்தார். திரைகடலோடி திரவியம் தேட, இலங்கைக்கு சென்றார். அங்கு, 'பிலிம் லேப்'பை உருவாக்கி, அங்குள்ளவர்களுக்கு, 'பிரின்டிங்' உள்ளிட்ட வித்தைகளை கற்றுக் கொடுத்தார். இவரால் உருவாக்கப்பட்ட கலைஞர்கள் பலர்.
இலங்கைக்கு சென்றிருந்த சிவாஜி, அங்கிருந்த பிரபல நடிகர் காமினி பொன்சேகாவிடம் பேசிக் கொண்டிருந்தார். கலைத்துறைப் பக்கம் பேச்சு திரும்பியது. வெங்கட்ராமன் பற்றி வியந்து பேசினர். பேச்சின் முடிவில் அவரை நேரில் சந்தித்து, பாராட்டி விட்டு வந்தார், சிவாஜி.
அம்மா, அலமேலு வெங்கட்ராமன், அன்பின் சொரூபம். பிள்ளைகள், தங்கள் கோரிக்கைகளை அவர் மூலமாகத்தான் நிறைவேற்றிக் கொள்வர். கண்டிப்பான அப்பாவின், சந்தோஷமான சம்மதத்துடன், பிள்ளைகளுக்காக ஒவ்வொரு காரியத்தையும் செய்து கொடுப்பதில் ஒரு ராஜதந்திரி, அம்மா.
இவர்களை எல்லாம் ஜாதி, மத துவேஷம் இன்றி வளர்த்தவர். 'அன்பு தான் என்றும் வெல்லும்...' என்று சொல்லிக் கொடுத்தவர்.
சைக்கிள் தான் வெங்கட்ராமனுக்கு பிரியமான வாகனம். ரொம்ப நாட்களாக சைக்கிள் தான் ஓட்டிக் கொண்டிருந்தார்.
தயிர்ச்சாதம் இருந்தால் போதும். பல பாடங்களை வார்த்தையாலும், தன் வாழ்க்கையாலும் எஸ்.வி.சேகருக்கு சொல்லிக் கொடுத்து சென்றுள்ளார்.
கலைத்துறையின் பல்வேறு பரிணாமங்களில் அவர் ஜொலித்தாலும், ஒரு கலைஞனாக தான் பட்ட கஷ்டம், பிள்ளைகள் படக்கூடாது. நன்றாக படிக்க வைத்து அதற்கேற்ற வேலை பார்க்க வைக்க வேண்டும் என்று விரும்பினார்.
அதிலும், மூத்த மகன் என்பது, முன்னத்தி ஏர் போல. அது சரியாகச் சென்றால், பின்னால் வருபவை எல்லாம் சரியாக வரும் என்பதால், எஸ்.வி.சேகரை ரொம்பவே செதுக்க விரும்பினார். ஆனால்,
எஸ்.வி.சேகருக்கு, சினிமா கேமராமேனாக வர விருப்பம் இருந்தது.
கடைசியில், யார் விருப்பம் தான் நிறைவேறியது?
இவரை பற்றி அவர்
வசனங்களை சொல்லும் பாணியில் மட்டுமல்ல, சும்மா இருக்கும்போது நம் கவனத்தை கவர்ந்து விடுவார், எஸ்.வி.சேகர். அதற்கான, 'ஸ்டேஜ் பிரஸன்ஸ்' அமோகமாக இருக்கிறது. இவரின் குரலும், நடிப்பும், அப்பாவித்தனமான முகமும், நாடகத்திற்கு ரொம்ப பொருத்தமாக இருக்கிறது.
'ஒன்மோர் எக்சார்ஸிஸ்ட்' என்ற பேய்க் கதையை கூட, ஹாஸ்ய கதையாக்க இவரால் மட்டுமே முடியும். நாளைக்கு வியாழக்கிழமை என்றால் கூட, சிரிக்கும் அளவிற்கு ரசிகர்களை தயார்படுத்தி வைத்துள்ளார்.
— எழுத்தாளர் சுஜாதா.
— தொடரும்
எல். முருகராஜ்
