தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அப்பாவுக்கு கைபேசி!

அப்பாவுக்கு கைபேசி!

அப்பாவுக்கு கைபேசி!


PUBLISHED ON : ஜூன் 17, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 17, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அவன் நண்பர்கள் சிலர், தங்கள் அப்பாவை ஒரு ரோல் மாடலாக கருதுவர். ஒரு சிலர், அப்பா என்றால் தங்களுக்கு உயிர் என்பர். எங்க அப்பா எனக்காக எதையும் செய்வார் என்பவர்களும், நான் அப்பாவின் செல்லம் என பீத்திக் கொள்பவர்களும் அதில் அடங்கும். எங்க அப்பாவுக்கும், எனக்கும் எப்பவுமே ஏழர நாட்டு சனி என்று கூறி, ஒருவன் காலரை துாக்கி விட்டுக் கொண்டான். அப்பாவை, ஹிட்லராக பார்ப்பவர்களும் அந்த லிஸ்டில் அடங்கும்.

இது எதுவுமே அவனுக்கு ஆச்சரியமாகவோ, பெரிதாகவோ தெரியவில்லை. காரணம், அவன் அப்பா இவை எல்லாவற்றுக்கும் மேல். 'அப்பா' இந்த சொல்லில் யாரும் பார்க்காத ஒரு மந்திரத்தை அவன் பார்த்தான். தான் மட்டும் இவ்வுலகில் ஒரு பாக்கியசாலி என, தன் அப்பாவை நினைத்து, பெருமைபட்டுக் கொள்வான். அப்பாவின் நிழலில் பயணித்த அவனுக்கு வெயிலின் சூடு தெரிந்ததில்லை.

படிப்பதில் அவன் ரொம்ப சராசரி; குறைந்த மார்க்குடன் கையெழுத்துக்காக தேர்வு பேப்பருடன் அப்பாவிடம் வருவான், 'கவலைப்படாதே செல்லம்... உன்னால் முடியும்; முயற்சி செய்...' என்பார்.

ஒருமுறை தேர்வில், 'ஜீரோ' வாங்கி விட்டான்; அப்பாவிடம் சொல்ல அச்சம். அதே நேரத்தில் அப்பா எதுவும் சொல்ல மாட்டார் என்ற தைரியத்தில், அப்பாவின் கையெழுத்தை போட்டு ஆசிரியரிடம் கொடுத்து விட்டான்.

'நாளை... உன் அப்பாவுடன் வா...' என்றார் ஆசிரியர்; அவனுக்கு வியர்த்தது. எதுவும் அப்பாவிடம் சொல்லாமல், மறுநாள் ஆசிரியரிடம் அழைத்துச் சென்றான். அப்பாவிடம் பேப்பரை காண்பித்தார், ஆசிரியர். அப்பா எதுவும் சொல்லாமல், அமைதியாக பேப்பரை பார்த்தார். பின், ஆசிரியரிடம், 'அவன் மார்க் எடுக்க மாட்டான்னு எனக்கு தெரியும்; ஒரு வாரமா உடம்பு சரியில்லாமல் இருந்தான். தேர்வு எழுத வேண்டாம்ன்னு எவ்வளவோ சொல்லியும், கேட்காம வந்தான். பசங்க மார்க் எடுக்க வேணாம் சார்... நல்லவங்களா இருந்தா போதும்... இவன் நல்ல பையன்; எனக்கு இது போதும்...' அவனது முதுகை தட்டிக் கொடுத்து, சென்று விட்டார், அப்பா.

நுாறு அடி அடித்தால் கூட அப்படி வலிக்காது; அப்பாவின் செயல் அவனுக்கு அப்படி ஒரு வலியை கொடுத்தது. அன்று இரவு கண்களில் நீர் வழிய, அப்பாவை கட்டிப்பிடித்து, 'ஓ'வென அழுதான். அப்பா மெல்ல கட்டி அணைத்து, உச்சி முகர்ந்தார். 'நீ நல்ல புள்ள ராசா... தப்பு செய்ய வழி இல்ல, எங்க உன்ன அந்த வாத்தியார் அடிச்சிடுவாரோன்னு பயத்தில் செஞ்சிருப்ப... எனக்கு தெரியும், பயப்படாதே... அப்பா இருக்கேன்...' என்றார்.

இது, அவனுக்கு முதல் முறையல்ல; இதுபோல் பல நிகழ்வுகள் நடந்துள்ளன. ஒருமுறை அப்பா, அவனுக்கு புதிய கைக் கடிகாரம் ஒன்று வாங்கித் தந்தார். பள்ளி சென்று நண்பர்கள் அனைவரிடமும் பீத்தி, வீடு திரும்பும்போது, கையில் கடிகாரம் இல்லை. காணாமல் போனதை சிறிது பயம் கலந்து தான் அப்பாவிடம் சொன்னான். அவர், 'அம்மாவிடம் சொல்லாதே...' என்று மட்டும் சொல்லி, அவனை, கடிகார கடைக்கு அழைத்துச் சென்று, புதிதாய் அதே மாதிரி வேறு ஒரு கடிகாரம் வாங்கி தந்து, 'தெரியாமல் தொலைத்திருப்பாய்... இதை பத்திரமாய் பார்த்துக் கொள்...' என்றார்.

இப்படி யதார்த்தத்தை மீறி, அப்பா அவனுக்கு கொடுத்த சலுகைகள் எண்ணிலடங்காது.

ஆயிரம் ஆசிரியர்களின் பிரம்புகள் செய்யாத அற்புதத்தை, அப்பாவின் அன்பு ஏற்படுத்தியது. ஏறாத கடின படிப்பு, மிக சுலபமானதாக மாறியது. நல்ல மாணவர்கள் நண்பர்களாக மாறினர். பள்ளி, கல்லுாரி முடித்து, நல்ல வேலைக்கு வந்தாகி விட்டது. எதை செய்தாலும் அப்பாவின் மனதுக்கு அது பிடிக்க வேண்டும் என, பயந்து பயந்து செய்ய ஆரம்பித்ததால், சிறு தவறையும் நண்பர்களின் கம்பெனிக்காக விளையாட்டாகக் கூட செய்ய அவன் மனசு இடம் தரவில்லை.

குழந்தையில் பார்த்த அதே அப்பாதான் இன்னமும்! அதே பாசம், அதே குறும்பு, அதே நட்பு. நண்பர்கள் வீட்டில் பார்த்துள்ளான்... வயதாக ஆக அப்பாக்கள் மாறுவர். சில வீடுகளில் அப்பாவும் - பையனும் பேசக்கூட மாட்டார்கள். பல வீடுகளில் மிலிட்டரி வாழ்க்கையே தொடரும். ஆனால், 60 வயதை தாண்டியும் அப்பாவும் மாறவில்லை; அவனும் மாறவில்லை.

இவர்கள் உறவை பார்த்து பொறாமைப் படாதவர்களே இல்லை. அதுவும் வயதானோர், தினம் யாராவது ஒருவர், அவன் அப்பாவிடம், 'இப்படி ஒரு பிள்ளை எனக்கில்லையே...' என சொல்லாமல் இருந்ததில்லை. அதுவும் பக்கத்து வீட்டு பென்ஷன் தாத்தாவுக்கு இதை விட்டால் வேறு வேலையே இல்லை. 'பென்ஷன்' தாத்தாவின் வார்த்தையில் ஒரு ஏக்கமும், விரக்தியும் வெளிப்படையாக தெரியும். இருந்தும், அப்பா அதை பெரிதுபடுத்தாமல், அவரிடம் நன்றாக பழகுவார். ஒருநாள், அப்பாவின் கைபேசி கீழே விழுந்து உடைந்து விட்டது. இப்படி நடப்பது முதல் முறையல்ல. அடிக்கடி கைபேசியை கீழே தவற விடுவது அவரின் வழக்கம். எவ்வளவு சொன்னாலும் இந்த ஒரு விஷயத்தில் அப்பாவை திருத்த முடியவில்லை. அன்பாய் திட்டி, வாங்கி கொடுத்து விடுவான்.

இன்றும் அப்படி போனை உடைத்து விடவே, ''அப்பா, நல்லா விசாரிச்சு, நல்ல போனா வாங்கித் தர்றேன். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க; இனிமேல் கீழே போட்டிங்கன்னா அவ்வளவு தான்,'' என்று அவன் செல்லமாக மிரட்ட, அவன் அப்பா சிரித்தார்.

சிறிது நேரத்தில், 'பென்ஷன்' தாத்தா வந்தார், ''என்னய்யா... எவ்வளவு நேரமா போன் பண்றது... போன கூட எடுக்காம என்னதான் செய்யிறே...'' என்றார். அவர் பதில் சொல்ல யோசிப்பதற்குள்,

''என்னய்யா, காது கேட்குதா இல்லயா?'' என்று கேட்டார்.

மெதுவாக தலை உயர்த்தி, ''காதெல்லாம் நல்லா கேக்குது; பேசறதுக்கு போன் தான் இல்ல,'' என்றார்.

''ஏன் என்னாச்சு, நல்ல போன்தானே வச்சிருந்தே?''

'' நல்ல போன் தான்; ஆனா, கீழே விழுந்தா உடைஞ்சு போகுதே... நல்ல வேள, பையன் திட்டாம வேற போன் வாங்கித் தரேன்னு சொல்லிட்டான்.''

''உனக்கென்னய்யா, குடுத்து வச்ச ஆளு... தாங்கு தாங்குன்னு தாங்கற புள்ள. நீ எத்தனை போன வேணும்ன்னாலும் உடைக்கலாம்; எங்கள பாரு... புள்ள இருந்தும் அனாதையா தவிக்கிறோம்.''

ஒட்டுமொத்த வஞ்சிக்கப்பட்டோரின் கோபம், பொறாமை, ஏக்கம், எதிர்பார்ப்பு அனைத்தும், 'பென்ஷன்' தாத்தாவின் குரலில் பிரதிபலித்தது.

அதற்கு மேல் பேசுவது நல்லதல்ல என நினைத்து அமைதி காக்க, வந்த வேலை முடிந்த சந்தோஷத்தில், 'பென்ஷன்' தாத்தா கிளம்பி விட்டார். அன்று மாலை, தனக்கு நல்ல போன் வரும் என காத்திருந்த அப்பாவிற்கு, ஏமாற்றமே பதிலாக கிடைத்தது.

மறுநாள் மாலை, அலுவலகத்திலிருந்து மகன் வந்து விட்டான். 'கைபேசி பற்றி பேசலாமா வேண்டாமா, பேசினால் தப்பாக எடுத்துக் கொள்வானா...' என, ஒரே குழப்பம் அப்பாவிற்கு!

'மறந்திருப்பானா, அப்படி மறப்பவன் இல்லையே...' என்ற சந்தேகமும் எழுந்தது. ஆயிரம் விடை தெரியா குழப்பங்கள் மண்டையை குடைய, செய்வதறியாது படுத்துக் கொண்டார்.

விடிந்து, மகன் அலுவலகம் சென்ற சில நிமிடங்களில், 'பென்ஷன்' தாத்தா வந்தார். வந்த உடனேயே அவரது வேலையை ஆரம்பித்து விட்டார்... ''என்னய்யா, உன் புது போனை காட்டு,'' என்றார். அவரது கேள்வியின் நக்கலும், அதன் உள் அர்த்தமும் புரிந்து விட்டது.

''பையனுக்கு வேலை சுமை அதிகமா இருந்ததால, வாங்க மறந்திட்டானாம். ரெண்டு நாள்ல வாங்கி தருவதாக சொல்லியிருக்கான்,'' என்றார்.

''சும்மா இருய்யா... உன் பையனாவது மறக்கிறதாவது... வேற காரணம் இருக்கும்,'' என்றார்.

இது, நாரதர் கலகமில்லை; சகுனியின் சதித் திட்டம் என்பதை புரிந்து கொண்டாலும், பதில் பேச முடியவில்லை.

கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு, 'மகன் செத்தாலும் பரவாயில்லை; மருமகள் தாலி அறுக்க வேண்டும்...' என்று!

அப்படித்தான் இருந்தது, 'பென்ஷன்' தாத்தாவின் பேச்சு. தன் வீட்டிலிருக்கும் ஆயிரம் குறைகளை விட்டு, பக்கத்து வீட்டில் இல்லாத குறையை தேடுவதே அவரது தொழிலாகிப் போனது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. அவருக்கு ஒரு மகன்; திருமணத்திற்காக பெண் தேடும் திருமண வயதை தாண்டிய மகன்.

அப்பா - மகன் இரண்டு பேருக்கும் பாசத்தை பகிர்ந்து கொள்வதை விட, கைமாத்தாய் ஒருவர் மற்றொருவருக்கு கொடுக்கும் பணத்திற்கு கணக்கு பார்ப்பதே பெரிய தொழிலாய் இருந்தது. இரண்டு இட்லி வேண்டும் என்றாலும் பணம் கொடுத்தால் தான் வாங்கி வருவான் அவரது மகன்.

இதன் காரணமாக தான், 'பென்ஷன்' தாத்தாவிற்கு எங்காவது, அப்பாவும் - மகனும் சந்தோஷமாக இருந்தால் பிடிக்காது. அதைக் கெடுக்க தன்னால் ஆனதை செய்வார். இங்கும் செய்ய ஆரம்பித்துள்ளார்.

மகனிடம், தனக்கு ஒரு கைபேசி வாங்கித் தரச்சொல்லி இரண்டு, மூன்று நாட்கள் ஓடி விட்டன. இதுவரை பதில் ஏதும் இல்லை. இவருக்கு அது ஒன்றும் அவ்வளவு முக்கியமும் இல்லை. ஆனால், 'பென்ஷன்' தாத்தா அதை முக்கியமாக்கி விட்டார்.

மாலை, வீட்டுக்கு வந்த பென்ஷன் தாத்தா, ''என்னய்யா, பையன் கைபேசி வாங்கித் தந்தானா?'' என்று கேட்டார்.

''சீக்கிரமா வந்துடும்ன்னு சொல்லியிருக்கான்,'' சமாளித்தார்.

''சும்மா சொல்லாதய்யா... நீ இன்னும் படணும், பட்டாத்தான் உனக்கெல்லாம் புத்தி வரும். நமக்குதான் அவங்கபுள்ள, அவங்களுக்கு நாம சுமை. உன் பையன் நாகரிகமானவன்; பக்குவமா ஏமாத்துறான். என் பையனுக்கு இந்த இங்கிதம் தெரியாது. பட்டுன்னு சொல்லிடுவான். உனக்கு போன் வேணும்ன்னா சொல்லு... நான் கூட வரேன்; பணத்தை பற்றி கவலைப்படாதே. இந்த வயசிலே நாமதான் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியா இருக்கணும். பணமெல்லாம் நீ திருப்பி தர வேண்டாம்யா,'' வெற்றிகரமாக தன் வேலையை முடித்துச் சென்றார், தாத்தா.

பாலில் விஷம் கலந்தது போல் பக்குவமாக, தாத்தாவின் விஷ அம்பு அவரின் மூளையை தாக்கி வேலை செய்ய ஆரம்பித்தது.

கண்ணாடி முன் நின்று, இரண்டு, மூன்று முறை என்னென்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என, ஒத்திகை பார்த்து விட்டார்.

கதவு திறந்து மகன் வருவது தெரிந்தது. தன் அருகில் வந்ததும், 'தம்பி... நீ, எனக்கு எதுவும் வாங்கித் தரவேணாம்; நீ சந்தோஷமா இருந்தா போதும். நாளைக்கு நான் கடைக்கு போய் எனக்கு தேவையான போனை நானே வாங்கிக்கிறேன்...' என்று சொல்ல வாயைத் திறந்தார். அப்போது. ''சாரிப்பா... இரண்டு நாள் தாமதம் ஆயிடுச்சு; என் பிரண்ட்சுக எல்லார் கிட்டயும் விசாரிச்சு, மார்க்கெட் நிலவரம் பார்த்து, இந்த மொபைல் போன வாங்கியிருக்கேன். இது ரொம்ப நல்ல போன். பேட்டரி சார்ஜ் இரண்டு நாள் தாங்கும். நல்ல கேமரா, நீங்க எத்தனை படம் வேண்டுமானாலும் சேமிச்சு வெச்சு பார்க்கலாம். பாதுகாப்பா எல்லாம் செஞ்சுட்டேன். இனி, கீழே போட்டாலும் உடையாது. இந்தாங்கப்பா...'' என்றான்.

கண்கள் கலங்க, மகனை கட்டிப்பிடித்துக் கொண்டார். பெத்த மகனை நம்பாமல், பிறர் சொல்லுக்கு கட்டுப்பட்டதை எண்ணி வருந்தினார். மகனின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டு அழ ஆசை. முடியாமல், மகனின் கைகளை பிடித்துக் கொண்டார்.

கோவி.சேகர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us