
அறியாமை இருள் விரட்டுங்கள்!
கரும்பலகைகளில் வெளிச்சம் விதைத்து
அறியாமை இருள் விரட்டி
சூரியப் பிரதிகளை உருவாக்கும்
'ஆ' சீரியர்களே...
அறிவு மாளிகைக்கு
அஸ்திவாரம் அமைத்து
திறம்படக் கட்டி
திறப்பு விழா நடத்தி
விளக்கேற்றி வைக்கும்
வெள்ளை மனக் கோட்டங்களே...
நீங்கள்
முள்காட்டை செப்பனிட்டு
முல்லை மலர் வளர்க்கிறீர்கள்
சிப்பிகளில் மட்டுமல்ல
நத்தைகளிலும் முத்து விளைவிக்கிறீர்கள்
கூழாங்கற்களை வைரங்களாய்
வடித்தெடுக்கிறீர்கள்!
நீங்கள்
வியர்வை வெப்பத்தில் புழுங்கி
வேதனை துளிகளை விழுங்கி
சாக்பீசில் முகங் கழுவி
சரித்திரம் படைக்கிறீர்கள்!
நீங்கள்
நெற்றிக்கண் திறந்து
நெருப்பை உமிழ நேரினும்
கொதித்து வரும் தீயினிலும்
குளிர்ச்சி உறைந்திருக்கும்
புயலாய் சீறுகிற போதிலும்
புன்னகை மறைந்திருக்கும்!
நீங்கள் திட்டுவதால்
நாங்கள் தீட்டப்படுகிறோம்
உளிபடாமல், துளிச்சிதறல் இல்லாமல்
எதிர்கால இந்தியாவை
சிரத்தையாய் செதுக்கும் சிற்பிகளே...
உங்களை
சிரம் தாழ்த்தி வாழ்த்தி
வணங்கி மகிழ்வதில்
பெருமிதம் கொள்கிறோம்!
— சுப்புராஜ், திருமுல்லைவாயில்.