PUBLISHED ON : மே 02, 2021

காதல் வயப்பட்டால், இப்படித் தான் கிறுக்குத்தனமாக சிந்திக்க தோன்றும் போலிருக்கிறது. ஐரோப்பிய நாடான உக்ரைனைச் சேர்ந்த காதலர்கள், அலெக்சாண்டர் மற்றும் விக்டோரியா.
கடந்த சில ஆண்டுகளாக, தீவிரமாக காதலித்து வந்த இவர்கள், காதலர் தினத்தன்று, தங்கள் காதலின் வலிமையை நிரூபிக்க, வித்தியாசமான முயற்சியை துவக்கினர்.
அடுத்த மூன்று மாதங்களுக்கு, இருவரது கைகளும் (தலா, ஒரு கை மட்டும்) கைவிலங்கு போன்ற சங்கிலியால் இணைத்துக் கட்டப்பட்டிருக்கும். சாப்பிடுவது, துாங்குவது, ஏன் குளிப்பது, கழிப்பறைக்குச் செல்வது என, எல்லாவற்றையுமே, இருவரும் இணைந்து தான் மேற்கொள்ள வேண்டும்.
எந்த காரணத்தாலும், கைவிலங்கை அகற்றக் கூடாது. கைவிலங்கின் சாவி, பொதுவான ஒரு நபரிடம் கொடுக்கப்பட்டது.
'எங்கள் காதலின் சக்தி முன், இந்த கைவிலங்கு எல்லாம் துாசுக்கு சமம். மூன்று மாதங்களுக்கு கைவிலங்கை கழற்றாமல், எங்கள் காதலின் சக்தியை உலகிற்கு நிரூபித்துக் காட்டுகிறோம்...' என்கின்றனர், இருவரும்.
— ஜோல்னாபையன்
