PUBLISHED ON : ஆக 27, 2023

செப்டம்பர் 2 - உலக தேங்காய் தினம்
தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலம், பல்வேறு நன்மைகளை உடலுக்கு அளிக்கிறது. அதில், கெட்ட கொழுப்பை குறைத்தல், மூளையின் செயல் ஆற்றலை ஊக்குவித்தல் போன்றவை முக்கியமானது.'தினசரி உணவில் தேங்காய் எண்ணெய் சேர்த்து, போதிய அளவு உடற்பயிற்சி செய்தால், உயர் ரத்த அழுத்தப் பிரச்னை வராது...' என்கின்றனர், பிரேசில் நாட்டின் பெடரல் யூனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள். கடந்த, 4,000 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது, தேங்காய் எண்ணெய். இது, பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு, நெய்யை போன்றே நம் உடலில் எளிதாக கிரகித்து பயன் தருகிறது. இதில் உள்ள, 'லாரிக்' அமிலம் உடலின் வளர்ச்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது.தேங்காய் எண்ணெயில், 'மோனோ லாரின்' எனப்படும் மிகச்சிறந்த கொழுப்பு உள்ளது. தனித்தன்மை வாய்ந்த இந்த சத்து, இயற்கையில் தாய்ப்பாலில் காணப்படுகிறது. தேங்காய் எண்ணெயை அதிகளவில் உணவில் சேர்த்து கொள்பவர்களுக்கு இதயநோய், புற்றுநோய், செரிமான பிரச்னைகள், புராஸ்டேட் பிரச்னைகள் வருவது குறைவு என, ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.தேங்காய் எண்ணெயில் வைட்டமின் ஈ, தாது உப்புக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் ஏராளமாக உள்ளன. இவை முடங்கிக் கிடக்கும் தைராய்டு சுரப்பிகளை துாண்டி, தைராய்டு பிரச்னைகளை சரி செய்கிறது. மேலும், இது தலை முடியை உறுதியாக்கி முடி கொட்டுவதை தடுக்கிறது. தோல் நோய்கள் வராமல் தடுத்து, சருமத்திற்கு பளபளப்பை தருகிறது.உலகிலுள்ள கிருமி நாசினிகளில் சிறந்தது, தேங்காய் எண்ணெய். இதை உடல் முழுதும் தேய்க்க, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.குளிர் மற்றும் பனி காலத்தில், உடலில் தேய்த்து வர, குளிர் தாக்கம் தெரியாமல் இருக்கும். பனி கால தோல் வெடிப்புகள் மறையும். காலை அல்லது இரவில், தேங்காய் எண்ணெயில் வாய் கொப்பளித்து வர, பல் ஈறுகளில் பிரச்னை வராது என்கின்றனர்.தேங்காய் எண்ணெயில் ஏராளமான, நடுத்தர சங்கிலி கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது, குடல் இயக்கங்களை துாண்டவும், மலத்தை மென்மையாக்கவும் உதவுகிறது. எனவே, காலை மற்றும் இரவில் ஒரு தேக்கரண்டி, தேங்காய் எண்ணெய் குடிக்க, மலச்சிக்கல் வராது. உடலிலுள்ள நச்சுகள் வெளியேறும்.தேங்காய் எண்ணெயுடன், ஓமவல்லி இலை சாற்றை கலந்து, காது குடையும் பட்சில் முக்கி குடைந்தால், காது வலி மறையும். தேங்காய் எண்ணெயுடன் கற்பூரத்தை சேர்த்து காய்ச்சி, பொறுக்கும் சூட்டில் குழந்தைகளின் நெஞ்சில் தடவி வர, சளி கரையும்.தேங்காய் எண்ணெயுடன், சந்தன எண்ணெயை கலந்து, அலர்ஜியால் உடலில் தோன்றும் கொப்புளங்கள் மீது பூசி வர, அவை மறைந்து விடும்; தோல் சொர சொரப்பு நீங்கவும் பயன்படுத்தலாம்.கண்களை சுற்றி தேங்காய் எண்ணெய் தேய்த்து, மசாஜ் செய்து வந்தால், கரு வளையம் தோன்றாது. தேங்காய் எண்ணெயுடன், தேயிலை மர எண்ணெய் கலந்து, முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மீது தேய்த்து மசாஜ் செய்து வர, அவை மறையும்.முகத்தில் தேங்காய் எண்ணெயை மிதமாக பூசி, 10 நிமிடங்கள் கழித்து துடைத்தால், எப்படிப்பட்ட, 'மேக் அப்'பையும் கலைத்து விடலாம்.
ஆர். ஞானம்
