PUBLISHED ON : ஆக 27, 2023

பாரதிமணி எழுதிய, 'பல நேரங்களில் பல மனிதர்கள்' நுாலிலிருந்து:
இசை, நடன விமர்சகரான, பி.வி. சுப்ரமணியம் என்ற சுப்புடு என்றாலே, சென்னை சங்கீத உலகம், ஒரு சமயத்தில் அலறியது.
* ஸ்ரீவித்யாவின் நடனத்தை பார்த்த, சுப்புடு, 'உடம்பு சுற்றளவை குறைத்தால், உலகைச் சுற்றி வரலாம்...' என, எழுதினார்
* செம்மங்குடி சீனிவாசய்யருக்கும், சுப்புடுவுக்கும் உள்ள உறவு, ஊர் அறிந்தது
* 'ஸ்ரீஸ்வாதி திருநாள் மகாராஜாவை பற்றி, தோன்றியதையெல்லாம் எழுதினார், சுப்புடு...' என்ற, விமர்சனம் உண்டு
* வீணை பாலசந்தருக்கு, சாகும் வரை சுப்புடு மேல் பகை. இதனால் தானோ என்னவோ, 'இதயம் பேசுகிறது' மணியன், 'சுப்புடு வருகிறார்' என, போஸ்டர் ஒட்டி, பல சங்கீத வித்வான்களை பயமுறுத்தியதுண்டு.
இந்த சுப்புடுவுக்கு மற்றொரு முகமும் உண்டு. அது, டில்லியில் அவர் பணிபுரிந்ததை பற்றியது.
டில்லியில், நிதி அமைச்சகத்தில் குமாஸ்தாவாக சேர்ந்து, அண்டர் செகரட்டரியாக இருந்து ஓய்வு பெற்றார், சுப்புடு.
அலுவலகத்தில் அவர் வேலை செய்கிற நேரம் குறைவு. நினைத்த நேரத்தில் வருவதும், போவதும், அவருக்கு சாத்தியமாக இருந்தது.
அலுவலகத்தில், பி.வி.சுப்ரமணியம் என்ற பெயருக்கு இல்லாத மதிப்பும், மரியாதையும், வெளியில், 'சுப்புடு' என்ற நாலெழுத்துக்கு உண்டு. அவர் மேஜைக்கு எந்த கோப்பும் வராது. மேஜை எப்போதும் துடைத்து விட்டது மாதிரி இருக்கும்.
'நேற்று, நீங்க போன பிறகு, பூதலிங்கம் ஐ.சி.எஸ்., போன் பண்ணினார். காலையில், ஆல் இந்தியா ரேடியோ, டைரக்டர் ஜெனரல் டாக்டர் நாராயண மேனன் கூப்பிட்டார்...' என்று, சுப்புடுவின் அதிகாரி, ஒருவித பயத்துடனேயே தகவல் சொல்வார்.
அப்போதெல்லாம், ஆபீஸ் தொலைபேசி மட்டும் தான் தொடர்புக்கு வழி. உயர் அதிகாரிகளை தவிர, வீட்டில் மற்றவர்களுக்கு போன் கிடையாது.
'பெரிய இடத்து சம்பந்தம், நமக்கேன் வம்பு...' என்று, அவரிடமிருந்து ஒதுங்கி விடுவர், அதிகாரிகள். ஆபீசில், அவர் ஒரு கோவில் காளையாக பவனி வந்தார்.
ஆங்கிலத்தில் அவருக்கிருந்த பிடிப்பும், ஞானமும் அளவிட முடியாது. அதுவே, மற்றவர்கள் அவருக்கு காட்டும் மரியாதையாக மலர்ந்தது.
மேலதிகாரிகள், தங்கள் அமைச்சருக்கும், கேபினட்டுக்கும் அனுப்பும் முக்கிய ரிக்கார்டுகளை, நல்ல ஆங்கிலத்தில் உள்ளதா என்று கேட்டு, இவரை, பிழை திருத்த சொல்வர். அந்த அளவுக்கு அவருடைய, 'இங்கிலீஷ் டிராப்டிங்'கில், யாரும் கை வைக்க முடியாது. அந்த ஆளுமை தான் அவரை ஒரு சிறந்த விமர்சகராக ஆக்கியது.
வார்த்தை ஜாலத்தில் வல்லவர். தன்னைத்தானே நையாண்டி செய்து கொள்வதில் சமர்த்தர். அவரை சுற்றி எப்போதும் பத்து பேர் இருப்பர்.
'பைத்தியகாரனை சுற்றி பத்து பேர் இருப்பர். என்னைச் சுற்றியும் பத்து பேர்...' என்று, சிரிக்காமல் சொல்வார், சுப்புடு.
கடந்த, 1970களின் மத்தியில், சுப்புடு, ஓய்வுப் பெற்றபோது, அவரை மறு வேலைக்கு யாரும் அழைக்கவில்லை. பிறகு ஒரு அலுவலகத்தில், லைசன் அதிகாரியாக இருந்தார். ரொம்ப எதிர்பார்க்கப்பட்ட அவரால் எதுவும் செய்ய இயலவில்லை.
இப்படி, 18 மாதங்கள் கழித்து, இனி தாக்கு பிடிக்க முடியாது என உணர்ந்தார். அவரை வேலைக்கு சிபாரிசு செய்தவருக்கு, 'என்னிடம் கொடுத்த வேலைகளை என்னால் செய்ய முடியவில்லை. இனியும் நான் வேலையில் தொடர்ந்தால், நான் வெட்கமற்ற மனிதனாக இருப்பேன். நேரில் பார்த்து சொல்ல கவுரவம் தடுக்கிறது...' என, கடிதம் எழுதி, வேலையிலிருந்து விலகி விட்டார்.
