PUBLISHED ON : ஆக 13, 2023

துாக்கு தண்டனை நிறைவேற்றபடும்போது, அவர்களிடம், 'உங்கள் இறுதி விருப்பம் என்ன...' என்று கேட்பதுண்டு.
இந்திய விடுதலை போரில் பங்கு கொண்டு, துாக்கு மேடையில் நின்றவர்களில் பலர் தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.
கயத்தாறில், புளிய மரத்தில், கட்டபொம்மனை துாக்கிலிட அழைத்து வந்தபோது, துாக்கு கயிற்றின் கீழேயுள்ள மேஜையின் மீறி ஏறி, கட்டபொம்மன் சொன்ன வார்த்தைகள் இவை:
போர் முனையில் பகைவருடன் போரிட்டு மகிழ்ந்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். அந்நியர் ஆதிக்கத்திலிருந்து என் தாய் நாடு விடுதலை பெற வேண்டுமென்பதை தவிர, எனக்கு வேறு ஆசை எதுவும் இல்லை.
அழகு முத்துக்கோன் கூறிய இறுதி வார்த்தைகள்:
இன்று நாங்கள் சிந்தப்போகும் ஒவ்வொரு துளி ரத்தத்திலிருந்தும், ஆயிரமாயிரம் விடுதலை வீரர்கள் தோன்றுவர். அவர்கள் ஒன்று திரண்டு, அந்நிய ஆதிக்கத்தை விரட்டியடிக்கப் போவது சத்தியம்.
மங்கல் பாண்டே: சிப்பாய் கலகம் என வர்ணிக்கப்பட்ட, முதல் விடுதலை போரில், புரட்சி கொடியை உயர்த்தியவர். துாக்கு மேடையில் இறுதியாக ஏறிய போது கூறியது:
அன்னை பாரத தேவியே, தாய்க்கு மகன் செய்ய வேண்டிய கடமையை செய்து விட்டேன். நான் உன் அடைக்கலம், உன் பாதம் வந்தடைகிறேன்.
ஆஷ்துரையை சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதனின் சட்டை பையிலிருந்த வாசகம்:
பாரத அன்னைக்கு எளிய காணிக்கையாக, என் உயிரை அர்ப்பணிக்கிறேன். இதற்கு நானே பொறுப்பு.
லாகூர் சதி வழக்கில், துாக்கு தண்டனை பெற்ற, 19 வயது இளைஞர், கர்த்தார் சிங் இறுதியாக கூறியது:
ஓ... என் இந்திய தாயே, உன் அடிமை விலங்கை உடைத்தெறிய எங்களால் முடியாமல் போய் விட்டது. கதர் இயக்க வீரர்கள் ஒருவர் உயிரோடு இருந்தாலும், உன் அடிமை தலையை அறுத்தெறிந்து விடுவர். அதுமட்டுமல்ல, உலகில் எங்கு அடிமைத்தனம் இருந்தாலும், அதை இறுதி வரை எதிர்த்து போராடுவர்.
அல்லுாரி சீத்தாராமராஜு, சுதந்திர போராட்ட வீரர்:
என்னை சுட்டுக் கொன்று விட்டால், இந்த விடுதலை போராட்டம் நின்று விடுமென்று கனவு காணாதே. ஒவ்வொரு கிராமத்திலும், பல சீத்தாராம ராஜுக்கள் உருவாகி செயல்படுவர். உங்களை இந்த மண்ணை விட்டு விரட்டும் வரை போராட்டம் ஓயாது. வந்தே மாதரம்.
பகத்சிங்குக்கு, துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்தபோது, முகத்தை மறைக்க கறுப்பு துணி கொண்டு வந்தனர்.
என் தாய்திரு நாட்டை பார்த்துக்கொண்டே உயிர் விட விரும்புகிறேன். என் முகத்தை மறைக்காதே. 'சுகதேவ், ராஜகுரு வருகிறேன். இன்குலாப் ஜிந்தாபாத்...' என்று கூறி உயிர் துறந்தார்.
