
சற்று அசந்தாலும் போதும்; தலைகீழாக மாறிவிடும். விவரம் தெரியாமல், நற்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது. அது பலவிதமான பிரச்னைகளுக்கு வழிவகுத்து விடும். பொறுமையும், எச்சரிக்கையும் அவசரத்தேவை; அவசியத்தேவை.
இதை விளக்கும், 19ம் நுாற்றாண்டின் பிற்பகுதி வரலாறு:
வேலுார் அருகில் வாழ்ந்தவர், அச்சுததாசர்; தெய்வ பக்தியும், நல்லொழுக்கங்களும் நிறைந்தவர். அக்கால வழக்கப்படி, அச்சுததாசருக்கு மனைவியாக வந்து வாய்த்த பெண், பருவமடைவதற்கு முன்பே திருமணம் நடந்தது. மாமனாரின் வேண்டுகோளுக்கு இணங்கி, அவர் வீட்டிலேயே தங்க துவங்கினார், அச்சுததாசர்.
கற்றுக் கொள்வதில் ஆர்வம் இருந்ததால், பொத்தரை எனும் ஊரில், யோகப் பயிற்சியில் தலைசிறந்தவரான, வெங்கம்மையார் எனும் பெண்மணியிடம், பயிற்சி அளிக்கும்படி வேண்டினார்.
தினமும், 7 கி.மீ., நடந்து போய் யோகப்பயிற்சி கற்று வந்த அச்சுததாசர், வீடு திரும்பியவுடன் பயிற்சியும் செய்தார்.
அதன் விளைவாக, அமர்ந்த நிலையில் அப்படியே, 6 அடி உயரம் மேலே எழுந்து, அந்தரத்தில் இருக்கவும்; பிறகு கீழிறங்கவும் ஆன சக்தியை பெற்றார்.
அச்சுததாசரின் மனைவி பக்குவம் அடைந்த நிலையில், அதற்கான சடங்கு முடிந்து, தம்பதியர் இல்வாழ்வை துவங்க நல்ல நாள் குறிக்கப்பட்டது. அன்றும், வழக்கம்போல் யோகா செய்யும் அறைக்குப் போய், உள்ளே தாழிட்டு, பயிற்சியில் ஈடுபட்டார்.
சற்று நேரத்தில் சடங்குகளும், ஏற்பாடுகளும் முடிந்த பின், அச்சுததாசர் யோகப்பயிற்சி செய்யும் அறைக்கதவைத் தள்ளிப் பார்த்தனர்; திறக்க முடியவில்லை. தட்டிப் பார்த்தும், பதில் இல்லை; கதவை உடைத்துத் திறக்க முயன்றனர்.
அந்த ஆரவாரத்தால், அறையினுள்ளே யோகப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த, அச்சுததாசர், மனக்குழப்பம் அடைந்தார். யோக நெறி தவறியது. அந்தரத்தில் இருந்தவர், 'பொத்'தென்று விழுந்தார். வெளியேற வேண்டிய காற்று, வயிற்றுக்குக் கீழாக இறங்கி பருத்தது; வலி தாங்காமல் துடித்தார்.
கதவை உடைத்து புகுந்த உறவினர்கள், அச்சுததாசரின் நிலை கண்டு திடுக்கிட்டனர்.
அவர்களிடம், 'பொத்தரைக்கு ஆளனுப்பி, அம்மையாரை வரவழையுங்கள். தாமதம் செய்தால் பிழைக்க மாட்டேன்...' என்றார், அச்சுததாசர்.
யோக குரு வெங்கம்மையார் வரவழைக்கப்பட்டார். அவரிடம் நடந்தவற்றை சொன்னார், அச்சுததாசர்.
அறையிலிருந்த அனைவரையும் வெளியேற்றிய அம்மையார், 'மீண்டும் மேலே எழுந்து கீழே இறங்கு...' என, வழிகாட்டி உதவினார். அவ்வாறே செய்ததும், அவரைப் படுத்திக் கொண்டிருந்த வாயு அனைத்தும் வெளியேறியது; அவருக்கு இருந்த துயரமும் விலகியது.
இவர் தான், பின்னாளில் அச்சுதானந்த அடிகள் எனும் பெயரில், பேரும் புகழும் பெற்றவர்; ஏராளமான தமிழ் கீர்த்தனைகளை எழுதியவர்.
ஆன்மிக தகவல்கள்!
தெய்வ படங்களில், குத்து விளக்குகளில், 'சீரியல் பல்பு'களால் அலங்காரம் செய்யக்கூடாது.
பி. என். பரசுராமன்

