
அரிதாரம் பூசும், இன்னொரு இசையமைப்பாளர்!
விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் போன்ற இசையமைப்பாளர்கள், 'ஹீரோ'வாக நடித்து வரும் நிலையில், யுவன் சங்கர் ராஜா, அனிருத் போன்ற இசையமைப்பாளர்களையும், 'ஹீரோ'வாக நடிக்க வைக்க, சில இயக்குனர்கள் துரத்தி வருகின்றனர். இவர்களில், அனிருத் இன்னும் பிடி கொடுக்காத நிலையில், யுவன் சங்கர்ராஜா, 'ஹீரோ'வாக அவதரிக்க தயாராகி விட்டார். விரைவில், அதற்கான அறிவிப்பு வெளிவரும் என்கின்றனர்.
— சினிமா பொன்னையா
ஹன்சிகாவின், 'சைடு பிசினஸ்!'
சினிமா மார்க்கெட், 'டல்' அடிப்பதால், 'யு டியூப்' சேனல் துவங்கிய, ஹன்சிகா, தற்போது, இன்னொரு புதிய, 'சைடு பிசினசை'யும் ஆரம்பித்திருக்கிறார். பிறந்த நாள், திருமணம் என, வீடுகளில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளுக்கு, பலுான்கள் மூலம் விதவிதமான அலங்காரம் செய்து கொடுக்கும், 'தி பலுான் ஸ்டைலிஸ்ட்' -என்றொரு நிறுவனத்தை துவங்கியிருக்கிறார். இதன் மூலம் தானும் சம்பாதிப்பதோடு, கைவினைக் கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கிறார். அவளுக்கு எவள் ஈடு; அவளுக்கு அவளே ஜோடு!
- எலீசா
வில் வித்தை பயிலும், பிரபாஸ்!
பாகுபலி நாயகனான பிரபாஸ், அடுத்தபடியாக, ஆதி புருஷ் என்றொரு, '3டி' படத்தில் நடிக்கிறார். ராமாயண கதையில் உருவாகும் இந்த படத்தில், ராமராக நடிக்கும் அவர், வில் வித்தை காட்சிகளிலும் நடிக்கப் போகிறார். அதனால், ஐதராபாத்திலுள்ள பிரபாஸின் இல்லத்திலேயே பயிற்சிக் கூடம் உருவாக்கப்பட்டு, அவருக்கு, முறையான பயிற்சி கொடுக்கப் போகின்றனர், சில வில்வித்தை கலைஞர்கள்.
— சி.பொ.,
சினிமா, 'சென்டிமென்டை' வெறுக்கும், வித்யாபாலன்!
'சினிமாவில் ஒரு படம் தோல்வியடைந்தாலோ அல்லது கிடப்பில் போடப்பட்டாலோ, அதற்கு வேறு காரணம் இருந்தாலும், அந்த படத்தின் கதாநாயகி, ராசி இல்லாதவர் என்று தான் நினைக்கின்றனர். கதாநாயகனை ஏன் சொல்வதில்லை. என்னை கூட, அந்த ராசி, 'சென்டிமென்டை' வைத்து தான், தென்னிந்திய சினிமா ஓரங்கட்டியது. அப்படிப்பட்ட நான், அதன்பிறகு, ஹிந்தியில் நடித்து, ராசியான நடிகையாகி விட்டேன். முன்பு, என்னை ராசியில்லாத நடிகை என்று சொன்னவர்கள், இப்போது, அதற்கு என்ன பதில் சொல்லப் போகின்றனர்...' என்று, கேள்வி எழுப்புகிறார்.கண்டதை எள்ளுக்காய் பிறந்தது போல் சொல்ல வேண்டும்!
- எலீசா
மாளவிகா மோகனுடன், வாலாட்டும், நடிகை!
விஜயுடன், மாஸ்டர் படத்தில் நடித்துள்ள, மாளவிகா மோகனன், அதன்பிறகு சில படங்களில் பேசி வந்த போதும், இன்னமும் ஒப்பந்தமாகவில்லை. ஆனால், பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்துள்ள, 'பிக்பாஸ்' லாஸ்லியாவோ, அதையடுத்து, இரண்டு படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர், மாளவிகா பட வேட்டை நடத்தி வரும் கம்பெனிகளுக்கும், 'விசிட்' அடித்து, 'ஷாக்' கொடுக்கிறார். இதனால், 'விஜய் பட நாயகி என்ற மட்டு மரியாதை இல்லாமல், எங்கிட்டேயே வாலாட்டுவதா...' என்று, லாஸ்லியாவுக்கு சரியான, 'அட்டாக்' கொடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார், மாளவிகா மோகனன்.
- சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
* உலக நடிகருடன் நடிக்க ஒப்பந்தமான பிறகு, அகர்வால் நடிகையை மேல்தட்டு நடிகர்கள் யாருமே சீண்டாததால், இரண்டாம், மூன்றாம் தட்டு, 'ஹீரோ'களுக்கு நுால் விட்டார். வாய்ப்பு கொடுக்க முன் வந்தவர்களோ, அம்மணியின் மார்க்கெட்டை கருத்தில் கொண்டு, 'டெய்லி பேட்டா ரேஞ்சு'க்குத்தான் படக்கூலி கொடுக்க பேச்சு நடத்தினர். இதனால், கொதித்துப் போன நடிகை, 'என் அருமை பெருமை தெரியாதவர்கள் நீங்கள். அதனால் தான், புதுமுக நடிகையிடம் பேசுவது போல் பேசுகிறீர்கள்...' என்று எகிறியவர், 'உங்க, 'டீலே' வேண்டாம்...' என்று, தேடிச் சென்ற படங்களை உதறித் தள்ளினார். விளைவு, இப்போது, புதிய பட விஷயமாக, அகர்வாலை யாருமே தொடர்பு கொள்ளவில்லை. இதனால், தான் எகிறி பேசிய தயாரிப்பாளர்களை, வலிய தேடிச்சென்று வாய்ப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், அவர்களோ, அம்மணியை ஒரு புழு பூச்சி அளவுக்கு கூட மரியாதை கொடுக்காமல் கடந்து போய் விட்டனர்.
அலுவலக தோழியர் இருவர் பேசிக் கொண்டது:
இத கேட்டியாடி... 'அக்கவுன்ட் செக் ஷனில்' கொஞ்ச நாள் இருந்தாலே, மும்பை பைங்கிளி காஜல், 'அது சரியில்லை... இது சரியில்லை...' என, புலம்பிட்டு திரிஞ்சா. அப்புறம், சம்பளம் பத்தலை, சேர்த்துக் கொடுக்க சொல்லி, நச்சரிச்சா... முதலாளி, கண்டுக்கவே இல்லை. 'இனிமே இங்கு வேலை செய்ய மாட்டேன்'னு சொல்லிட்டு போனா... வேறு எங்கும் வேலை கிடைக்காததால், திரும்பவும் வந்து முதலாளிட்ட கெஞ்ச, அவர், 'வேலை தர முடியாது'ன்னு துரத்தியடிச்சுட்டார். இப்ப, தன் சொந்த மாநிலத்துக்கே போயிட்டாளாம்!
சினி துளிகள்!
* மும்பையிலேயே முகாமிட்டுள்ள, காஜல் அகர்வால், ஹிந்தி படங்களில் நடிப்பதற்கும் முயற்சித்து வருவதாக, செய்தி வெளியிட்டுள்ளார்.
அவ்ளோதான்!

