
கங்கை புத்தக நிலையம், 'என்னைச் செதுக்கிய எண்ணங்கள்' நுாலிலிருந்து, கடந்த, மே 29, 1988ல், பாரதீய வித்யா பவனில், டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் நுால் வெளியீட்டு விழாவை, வானதி பதிப்பகம் நடத்தியது.
இதில், வானதி திருநாவுக்கரசு, 'கல்கி' ராஜேந்திரன், பாலசந்தர், சிவசங்கரி, அமுதசுரபி ஆசிரியர் விக்கிரமன் உட்பட, பலர் கலந்து கொண்டனர்.
'கல்கி' ராஜேந்திரன் பேசும்போது, 'உதயமூர்த்தியின் கருத்துக்கள் எல்லாம் பொது மக்களிடையே பரவ வேண்டுமானால், நான், பாலசந்தரை ஒன்று கேட்டுக் கொள்வேன். அவரை, சினிமாவில் நடிக்க வையுங்கள்...' என்றார்.
ஒரே சிரிப்பு!
தன் வழுக்கை தலையின் முன்புறத்தை தடவிக் கொண்டார், உதயமூர்த்தி.
அடுத்து பேச எழுந்தார், பாலசந்தர்.
'என் படத்தில், உதயமூர்த்தி நடிக்கிறார்...' என, ஒரு குண்டை துாக்கிப் போட்டு விட்டு, மேலும் கீழும் பார்த்தார்.
ஒரே சஸ்பென்ஸ்!
'இதோ பாருங்கள்... உதயமூர்த்தியே நாற்காலியின் முனைக்கு வந்து விட்டார். இதற்கு சில மாதங்களுக்கு முன் தான், எம்.எஸ்.உதயமூர்த்தி, 'நம்பு தம்பி... நம்மால் முடியும்' என்ற தலைப்பில், ஒரு கட்டுரை தொடரை, 'ஆனந்த விகடன்' இதழில் எழுதி வந்தார்.
'அதை, 'உன்னால் முடியும் தம்பி' என்ற தலைப்பாக, நான் பயன்படுத்திக் கொள்ள இருப்பதாக, உதயமூர்த்திக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அடுத்து, உன்னால் முடியும் தம்பி படத்தின் கதாநாயகனின் பெயர், உதயமூர்த்தி...' என்று சொல்லி நிறுத்தினார், பாலசந்தர்.
அரங்கமே கை தட்டியது.
'மேலும், உன்னால் முடியும் தம்பி படத்தில், உதயமூர்த்தியாக நடித்தார், கமலஹாசன். படம், பெரும் வெற்றி பெற்றது. அந்த படத்தில், கமலின் தந்தையாக, ஜெமினிகணேசன், மகனை, உரத்த குரலில், உதயமூர்த்தி என, அழைப்பார்...' என்றார், பாலசந்தர்.
அதைக் கேட்டு புல்லரித்துப் போனார், உதயமூர்த்தி. இதுபற்றி ஒரு சம்பவத்தையும் நினைவு கூர்ந்துள்ளார்:
'உன்னால் முடியும் தம்பி' படத்தை, திரையிடும் முன், ஒரு பிரபல அரசியல் தலைவருக்கு, 'ப்ரிவியூ' தியேட்டரில் படம் போட்டு காட்டினார், பாலசந்தர்.
படம் முடிந்ததும், அவரிடம், 'படம் எப்படி இருக்கிறது...' என, பாலசந்தர் கேட்டார்.
படத்தின் கதை அமைப்பையோ, இயக்கத்தையோ, நடிப்பையோ பற்றி விமர்சிப்பார் என, எதிர்பார்த்த பாலசந்தரிடம், 'உதயமூர்த்திக்கு பாராட்டு விழா எடுத்திருக்கிறீர்கள்...' என்று சொன்னாராம், அந்த தலைவர்.
பகுத்தறிவு பதிப்பகம், டாக்டர் கு.வணங்காமுடி எழுதிய, 'புரட்சி பேச்சாளர் பெரியார்' நுாலிலிருந்து: சென்னையில் நடந்த நபிகள் நாயகம் விழாவிற்கு, பேச அழைக்கப் பட்டிருந்தார்,ஈ.வெ.ரா., நபிகளை கடவுளாக கருதும் முகமதியர்கள், கூட்டத்தில் குவிந்திருந்தனர். நபிகள் நாயகத்தை பற்றி கற்றுணர்ந்தவர்களும், அதில் இருந்தனர்.
இன்றைய அரசியல்வாதிகளாக இருந்தால், நபிகள் நாயகத்தை முடிந்தளவுக்கு உயர்த்தி, அதே சமயம் ஹிந்து மதத்தை மட்டம் தட்டி, மதச்சார்பின்மைக்கு தங்களை வாரிசாக காட்டிக் கொள்வர். ஆனால், ஈ.வெ.ரா., பேச்சை கேளுங்கள்...
'நபி அவர்களை, நான் ஒரு மகான் என்றோ, அமானுஷ்ய சக்தி படைத்தவர் என்றோ கருதவில்லை. என்னை பொறுத்தவரை, அவர்களை, ஒரு மனிதத் தன்மை படைத்த சிறந்த மனிதராகத்தான் கருதுகிறேன். அதற்கு மேற்பட்டதாக சொல்லப்படும் நிலையில் கருதவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்...' என்றார்.
கடவுள் என்று எவரையும் ஏற்றுக்கொள்ளாத, ஈ.வெ.ரா., துணிவுடன், 'நபிகளையும், மனிதத் தன்மை படைத்த சிறந்த மனிதரே...' என்று கூறியது, அவரது பெருந்தன்மையை காட்டுகிறது.
நடுத்தெரு நாராயணன்

