PUBLISHED ON : ஆக 06, 2017

ஆரோக்கியம் வேண்டினால் ஆதித்தனை வழிபடு என்பர் பெரியோர். அதைப் பின்பற்றி, ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் பெற்ற வரலாறு இது:
சேர மன்னர்களுள் ஒருவர், ராஜவர்மன். குடிமக்களை எல்லாம் தன் குழந்தைகள் போன்று கவனித்து, ராஜ பரிபாலனம் செய்து வந்தார். அரசரின் மனைவி மானினியோ, அழகும், நற்குணமும் கொண்டவள்.
வாசம் மிகுந்த மலரை நாடி, வண்டுகள் வருவதை போல, ராஜவர்மனுடைய சுற்றத்தார் பலர், ராஜவர்மனை சுற்றி சூழ்ந்திருந்தனர். அவர்களை அரசரும், அரசியும் அன்போடு பாதுகாத்து வந்தனர்.
ஒருநாள், தன் கணவரின் தலைக்கு, எண்ணெய் தேய்த்து விட்டாள், மானினி. அப்போது, அரசரின் தலையில், நரைமுடி ஒன்று தெரிய, 'அடடே... நம் கணவருக்கு வயதாகி விட்டதே...' என்று எண்ணி, வருந்தி, கண் கலங்கினாள். அவளின் கண்ணீர் துளி, அரசரின் மேனி மீது படவே, 'எதற்காக கண் கலங்குகிறாய்?' என்று கேட்டார், மன்னர்.
அவள் விஷயத்தை சொன்னதும்,'தேவி... இதுவரை நாம் துய்த்து வந்த ஆசைகளை துறக்க வேண்டிய காலம் நெருங்கி விட்டதை, நமக்கு உணர்த்தும் தூதன் தான், நரை முடி. அதனால், நம் மகனுக்கு முடி சூட்டி, தவம் செய்து, இறைவனை அடைய கானகத்திற்கு செல்வோம்...' என்றார் மன்னர்.
விஷயத்தை கேள்விப்பட்ட மன்னரின் சுற்றத்தார் மன வேதனையடைந்து, காட்டிற்கு சென்று, கதிரவனை குறித்து, கடுந்தவம் மேற்கொண்டனர்; அவர்கள் தவத்தில் மகிழ்ந்த ஆதவன், அவர்களுக்கு காட்சி கொடுத்தார். அவர்கள், அவரை வணங்கி, 'பகலவனே... எங்கள் ராஜவர்மன், பதினாயிரம் ஆண்டுகள் இளமை கெடாமல் வாழ வேண்டும்...' என்று வரம்கேட்டனர்.
அவர்களின் நல்ல எண்ணம் புரிந்து, 'உங்கள் விருப்பப்படியே ஆகட்டும்...' என, வரம் தந்தார், சூரிய பகவான்.
தாங்கள் வரம் பெற்ற விஷயத்தை மானினியிடம் கூறினர். அதை அவள் ராஜவர்மனிடம் கூறியதும், 'என்ன பைத்தியக் காரத்தனம் இது... என்னை சுற்றியிருப்போர் அனைவரும் இறக்க, நான் மட்டும் பதினாயிரம் ஆண்டுகள் உயிரோடு வாழ்ந்து என்ன பயன்...' என்றவர், 'நாம் வனத்திற்கு சென்று தவம் செய்து, வேறு விதமாக வரம் பெற்று வரலாம்...' என்று கூறி, மானினியுடன் கானகம் சென்றார், மன்னர்.
இருவரும் கதிரவனை நோக்கி கடுந்தவம் செய்தனர். சூரிய பகவான் தரிசனம் தந்தார். அவர் திருவடிகளில் விழுந்து வணங்கிய அரசர், தான் வாழும் காலம் வரை, தன் குடிமக்களும், சுற்றமும் வாழ வேண்டும் என்பதை, வரமாக பெற்று திரும்பினார்.
மன்னர், அவர் மனைவி, உறவினர் மற்றும் குடிமக்கள் போன்றோரின் தெய்வபக்தி, எப்படி காரியம் சாதித்து கொடுத்தது பார்த்தீர்களா?
நல்ல எண்ணமும், தெய்வ பக்தியும் இருந்தால், எதையும் சாதிக்கலாம்!
- பி.என்.பரசுராமன்
தெரிந்ததும் தெரியாததும்!
சாம்பிராணி தூபம் ஏன் காண்பிக்க வேண்டும்?
வாசனையுள்ள இடத்தில் வாசம் செய்கிறாள், மகாலட்சுமி. அவ்விடத்தில் தான், செல்வ வளம் பெருகும். அதனால், தினசரியோ அல்லது வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளிலோ வீட்டில் சாம்பிராணி தூபம் காண்பித்து, தெய்வத்தை பிரார்த்திக்க வேண்டும்.
