PUBLISHED ON : ஆக 06, 2017

உலக சாதனை நிகழ்த்தும் ஸ்வீடன் பட இயக்குனர்!
ஏற்கனவே, 240 மணி நேரம், அதாவது, பத்து நாட்கள் ஓடக்கூடிய, மாடர்ன் டைம்ஸ் பார் எவர் என்ற படம் வெளியாகியுள்ள நிலையில், தற்போது, அந்த சாதனையை முறியடிக்கும் வகையில், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த, ஆண்ட்ரூ வெப்பர்க் என்ற இயக்குனர், 720 மணி நேரம் ஓடக்கூடிய, ஆம்பியன்ஸ் என்ற படத்தை இயக்கி வருகிறார். 2020ல் வெளியாகும் இப்படத்தின், 72 நிமிடங்கள் கொண்ட டீசர், 2014ல் வெளியானது. அடுத்தபடியாக, 2018ல், 72 மணி நேரம் ஓடக்கூடய, ட்ரெய்லரை வெளியிட திட்டமிட்டுள்ள, ஆண்ட்ரூ வெப்பர்க், 'இதுவே என் கடைசி படம்...' என்றும் தெரிவித்துள்ளார்.
— சினிமா பொன்னையா
அம்மா நடிகையான கவர்ச்சி நடிகை சோனா!
பல படங்களில், படு கவர்ச்சி வேடங்களில் நடித்தவர், சோனா. இயக்குனர் வெங்கட்பிரபு, தன்னை, பண மோசடி செய்ததாகவும், பாடகர், எஸ்.பி.பி.சரண் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் கூறி, சர்ச்சை செய்து வந்ததால், சினிமாவில் யாரும் அவரை, கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில், தற்போது, நான் யாரென்று நீ சொல் என்ற படத்தில், கதாநாயகிக்கு, அம்மாவாக நடித்துள்ள சோனா, தொடர்ந்து அம்மா வேடங்களில் நடிக்க, முயற்சி எடுத்து வருகிறார்.காலம் செய்த கோலத்துக்கு யாரை வெறுப்பது!
— எலீசா.
மூன்று மொழி நடிகையான அக் ஷரா ஹாசன்!
இந்தியில், அமிதாப்பச்சன் - தனுஷ் இணைந்து நடித்த, ஷமிதாப் என்ற படத்தில் அறிமுகமானவர், கமலின் இளைய மகள், அக் ஷரா ஹாசன். அதையடுத்து, தற்போது, தமிழில் அஜித்துடன், விவேகம் படத்தில் நடித்து வருபவர், அடுத்தபடியாக, கன்னடத்தில், நடிகர் ரவிச்சந்திரனின் மகன் விக்ரம் ரவிச்சந்திரன் அறிமுகமாகும் படத்தில், ஒப்பந்தமாகியுள்ளார். இதன்மூலம், அடுத்தடுத்து, ஒரே நேரத்தில், இரண்டு மொழி சினிமாக்களில் அறிமுகமாகிறார். ஆகாச வல்லிடி அதிர இடித்தது!
— எலீசா
இந்திக்கு செல்லும் ஜெயம்ரவி படம்!
தமிழில், ஜெயம்ரவி நடித்த, தனி ஒருவன் படம், பின், ராம்சரண்தேஜா நடிப்பில், தெலுங்கில், ரீ - மேக் செய்யப்பட்டது; தற்போது, இந்தியிலும் உருவாகும் இப்படத்தை, சபீர்கான் இயக்குகிறார். ஜெயம்ரவி நடித்த வேடங்களில், சித்தார்த் மல்ஹோத்ராவும், அரவிந்த்சாமி நடித்த வேடத்தில், அர்ஜுன் கபூரும் நடிக்கின்றனர்.
— சி.பொ.,
அண்டாவுக்கு குரல் கொடுத்த விஜயசேதுபதி!
திமிரு படத்தில், வில்லியாக நடித்த ஸ்ரேயா ரெட்டி, தற்போது, அண்டாவக் காணோம் என்ற படத்திலும், அதிரடி வேடத்தில் நடிக்கிறார். மேலும், இப்படத்தில், ஒரு அண்டாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது போல் உள்ளதால், 'அந்த அண்டாவுக்கு பெரிய நடிகர் யாராவது, 'டப்பிங்' கொடுத்தால், நன்றாக இருக்கும்...' என்று விஜயசேதுபதியிடம் கேட்டுள்ளனர்; மறு பேச்சில்லாமல், அண்டா பேசுவது போன்று, 'டப்பிங்' பேசியுள்ளார்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
பாணா காத்தாடி நடிகைக்கு, திருமண தேதி உறுதி செய்யப்பட்டுவிட்டதால், 'நடிகர்களுடன், அதிக நெருக்கம் காட்டி நடிக்க வேண்டாம்...' என்று, அவரது வருங்கால கணவர் தரப்பில், ஆர்டர் போடப்பட்டுள்ளது; அத்துடன், அவர்கள் சார்பில், நடிகைக்கு உதவியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், படப்பிடிப்பில், அக்கம், பக்கம் திரும்ப முடியாமல், நெளிகிறார், நடிகை.
சுள்ளான் நடிகருடன், இரண்டு படங்களில் தொடர்ச்சியாக நடித்த பால் நடிகையை, நடிகருடன் இணைத்து, கிசுகிசுக்கள் ஏராளமாக வெளி வந்தன. ஆனால், அதைப்பற்றி நடிகர் கவலைப்படாத போதும், அவரது வீட்டு அம்மணி டென்ஷனாகி விட்டார். அதனால், மூன்றாவது முறையாகவும், பால் நடிகையுடன், சுள்ளான் நடிகர் நடிக்க தயாரான போது, அதற்கு தடை போட்டதுடன், நடிகரை எச்சரித்துள்ளார், வீட்டு அம்மணி.
சினி துளிகள்!
* கவுதம்மேனன் இயக்கத்தில், தனுஷ் நடித்து வந்த, என்னை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பு முடிவடைந்தது.
* மகாநதி படத்தில், நிருபராக நடித்து வருகிறார் சமந்தா.
* சில சமயங்களில் என்ற படத்தை இயக்கியுள்ள பிரியதர்ஷன், அடுத்து உதயநிதியை வைத்து, ஒரு படம் இயக்குகிறார்.
அவ்ளோதான்!
