தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கண் திறந்து தியானம்!

கண் திறந்து தியானம்!

கண் திறந்து தியானம்!


PUBLISHED ON : ஜூலை 18, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 18, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தியானம் என்றாலே, கண் மூடி இருப்பது தான். ஆனால், கண் திறந்து, பாதத்தின் கட்டை விரலை தரையில் ஊன்றி, வலது கையை தலைக்கு மேலாக வைத்து, தியானம் செய்யும் அதிசயத்தைக் கண்டிருக்கிறீர்களா?

இந்த கடின தியானத்தை, ஒரு பெண் தெய்வம் செய்கிறார். தபசு அம்மன் எனப்படும், இவளைக் காண, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டை அமிர்தகலசநாதர் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

தியானம் என்பது, ஒரு தவம். மனதை அலைபாய விடாமல், அடக்கும் சக்தியையே தவம் என்கிறோம். சமஸ்கிருதத்தில் இதை, 'தபஸ்' என்பர். தமிழகத்தின் தென்பகுதியில் இதை தபசு என்பர். பேச்சு வழக்கில், 'தவசு' ஆகி விட்டது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதியம்மன், சென்னை மாங்காடு காமாட்சியம்மன் ஆகியோர், தவத்தில் இருப்பவர்கள். ஆனால், இவர்கள் தவம் செய்வதை நம் கண்களால் காண முடியாது. சாக்கோட்டை அமிர்தகலசநாதர் கோவிலில், அம்பாள் தவமிருப்பதை நாம் பார்த்து பரவசம் அடையலாம்.

அம்பாள் ஏன் தவமிருக்க வேண்டும்?

உழைப்பின் பெருமையை வலியுறுத்தவே, அவள் தவமிருக்கிறாள். எல்லா தொழில்களும் கஷ்டம் நிறைந்தவையே. அதிலும், விவசாயம் மிகக் கடினமானது. உலகுக்கே உணவளிக்கும் பணியை விவசாயி, ஒரு தவமாகச் செய்கிறான்.

நிலத்தை உழுது, பண்படுத்தி, விதை ஊன்றி, தண்ணீர் பாய்ச்சி வளரும் போது, இயற்கை மற்றும் மிருகங்கள், பூச்சிகளிடமிருந்து பாதுகாத்து, தான் பயிர் செய்த விதை முதிர்ந்த நிலைக்கு வரும் வரை, கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றி பாதுகாக்கிறான். மனம் ஒன்றிய இந்த உழைப்பே தவம்.

எல்லாவற்றையும் இவன் பார்த்துக் கொள்வான். ஆனால், மழையையும், வெயிலையும் போதுமான அளவு தருவது, கடவுள். இதனால் தான், விளைச்சல் பொருட்களை, கடவுளுக்கு காணிக்கை ஆக்குகிறான். சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவில், விளைபொருட்களை அம்பாளுக்கு காணிக்கையாக்கும் வழக்கம், இன்றும் உள்ளது.

ஒவ்வொரு பெண்ணும், தினமும் தவம் செய்கிறாள். சமையலின் போது, அவளது கவனம் சற்று சிதறினால் கூட, உப்பு, காரம் அதிகமாகியோ, குறைந்தோ உணவின் சுவை கெட்டு விடும். எனவே, மிக கவனமாக, எதையும் மறந்து விடாமல் சேர்க்க வேண்டியதை சேர்த்து, குறைக்க வேண்டியதை குறைத்து, சமையல் செய்வதும் ஒரு தவம்.

சுப நிகழ்ச்சிகளில் சமையல் செய்யும் ஆண்களும், இதற்கு விதிவிலக்கல்ல. இதனால் தான் அவர்களை, 'தபசுப்பிள்ளை' என்பர்.

சாக்கோட்டை அமிர்தகலசநாதர் கோவிலிலுள்ள அமிர்தவல்லி அம்பாள், உலக உயிர்கள் நீண்ட ஆயுள் வாழ வேண்டும் என்பதற்காக, சிவனை எண்ணி தவமிருக்கிறாள். கண் மூடி தவமிருப்பதற்கு பதிலாக, கண் திறந்து, தன் குழந்தைகளான பக்தர்களை பாதுகாத்தபடியே தவமிருப்பது அதிசயத்திலும் அதிசயம்.

கொடிய நோய்கள் பரவும் இக்காலத்தில், இவளை வணங்கினால், நன்மை செய்வாள்.

கும்பகோணம் - நீடாமங்கலம் சாலையில், 5 கி.மீ., துாரத்தில் இந்தக் கோவில் உள்ளது.

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us