PUBLISHED ON : டிச 04, 2016

டிச., 9 திருவண்ணாமலை ரதம்
கார்த்திகை என்றதும், நினைவில் வரக்கூடியது, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். 'அண்ணுதல்' என்றால், நெருங்குதல் என்றும், 'அண்ணா' என்றால், நெருங்கவே முடியாதது என்றும் பொருள். நெருப்பின் அருகே, யாராலும் நெருங்க முடியாது. இங்கு, நெருப்பின் அம்சமாக விளங்குகிறார் சிவபொருமான்.
ஒரு சமயம், பிரம்மனுக்கும், விஷ்ணுவுக்கும் தங்களில் யார் உயர்ந்த காரியங்களை செய்கின்றனர் என்பது பற்றி விவாதம் ஏற்பட, இருவரும் சிவனிடம் சென்று, அதற்கான விடை கேட்டனர். அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தார் சிவன். 'நான், நெருப்பாக மாறி, பாதாளத்துக்கும், வானத்துக்குமாக உயர்ந்து எரிவேன்; உங்களில் யார் ஒருவர், என் தலை உச்சியையும், மற்றவர் பாதத்தையும் முதலில், பார்த்து வருகிறாரோ, அவரே, உயர்ந்த செயல்களை புரிந்தவராவர்...' என்றார்.
போட்டிக்கு ஒப்புக் கொண்ட விஷ்ணு, வராகமாக (பன்றி) மாறி, பூமியை துளைத்து, சிவபாதம் தேடிச் சென்றார். பிரம்மாவோ அன்னப்பறவையாக மாறி, உச்சியை தேடி, மேலே பறந்தார். இருவராலும் அடி, முடியைக் காண இயலவில்லை.
பின், சிவன், தன்னை குளிர்வித்துக் கொண்டதும், அந்த நெருப்பே, உயர்ந்த மலையாக மாறி விட்டது. நெருப்பின் அருகே நெருங்க முடியாது என்பதால், அண்ணாமலை என்று பெயர் பெற்றது. மரியாதைக்காக, 'திரு' சேர்த்து, திருவண்ணாமலை ஆனது.
சிவன் நெருப்பாக நின்றது தான், திருக்கார்த்திகை விழாவாக கொண்டாடப்படுகிறது. அன்று, மலை உச்சியில் தீபம் ஏற்றி, இம்மலையை சிவனாக கருதி வழிபடுகின்றனர்.
மேலும், இம்மலையை, சிவலிங்கமாக கருதி, சித்தர்கள், முனிவர்கள் மற்றும் ஞானிகள் வழிபட்டுள்ளனர். உலகம் தோன்றிய காலத்திலிருந்தே, இம்மலை உள்ளது என்பர். கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன்மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் உள்ளது.
மலைக்கு, கிரி என்ற பெயரும் உண்டு. இதனால், மலை வலம் வருவதை, கிரிவலம் என்கின்றனர். இங்கே, கிரிவலம் செல்லும் போது, எங்காவது துவங்கி, எங்காவது முடிக்க கூடாது.
கோவில் முன் துவங்கி, மலையை சுற்றி, 14 கி.மீ., தூரம் நடந்தே செல்ல வேண்டும்; வாகனங்களில் செல்லக்கூடாது. கிரிவல பாதையில், எட்டு திசைகளிலும், இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயுலிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான லிங்கம் ஆகியவற்றை வணங்கி செல்ல வேண்டும்.
இடது பக்கமாகவே நடக்க வேண்டும்; காரணம், நாம் நடக்கும் போது, நம்முடன், சித்தர்களும் நடந்து வருவதாக ஐதீகம். அவர்கள் தான், நம் மனதில் நினைப்பதை, இறைவனிடம் கொண்டு சேர்ப்பர்.
எனவே, கண்டதையும் பேசியபடி நடக்காமல் 'நமசிவாய, அண்ணாமலைக்கு அரோகரா...' என்று, மனதிற்குள் சொல்லியபடியே நடக்க வேண்டும். மேலும், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், மலையை கைகூப்பி வணங்கி, வேறு எங்கும் பார்க்காமல், வானத்திலுள்ள நிலவை, பார்ப்பதன் மூலம், இரட்டிப்பு பலன் கிடைக்கும்.
கார்த்திகை விழாவில் நடக்கும் தேரோட்டம் முக்கியமானது. இந்நாளில், இங்கு சென்று, அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்மையையும் தரிசித்து, அருள் பெற்று வாருங்கள்.
தி.செல்லப்பா
