
சுக பிரசவம் நடக்க இயலாத நிலையில், பெண்களுக்கு, 'சிசேரியன்' என்னும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறக்க செய்வர். இன்றைய மருத்துவ அறிவியல் தான் இதற்கு வழிகாட்டியது என்று, பெருமைப்பட முடியாது. ஏனெனில், புராண காலத்திலேயே, இப்படி ஒரு வெற்றிகரமான சிகிச்சையை நிகழ்த்தியிருக்கிறாள், திருச்சி மாவட்டம், துறையூர், அங்காள பரமேஸ்வரி. இவளை, பெரியநாயகி என்றும் அழைப்பர்.
வரும், 2020ம் ஆண்டுக்குரிய எண்: 4. இதற்குரிய கிரகம், ராகு. ராகுவுக்குரிய தெய்வம், துர்க்கை. துர்க்கையின் அம்சமாக கருதப்படுபவள், அங்காள பரமேஸ்வரி. இந்த புத்தாண்டில் இவளை வணங்கி வரலாம்.
துறையூர் பகுதியை, வல்லாள ராஜா ஆண்டு வந்தார். தானியங்களை பறவைகள் தின்றுவிடும் என்பதற்காக, வயலுக்கு மேல் வலை கட்டி, அவற்றை வர விடாமல் தடுக்குமளவு கருமி, அவர். புண்ணியமே செய்யாததால், குழந்தை பாக்கியம் இல்லை.
ராஜாவுக்கு அம்பிகையின் அம்சமான பேச்சியம்மனின் நினைவு வந்தது.
'அம்மா... எனக்கு, குழந்தையில்லை. நாடாள, குழந்தை வேண்டும்...' என, வேண்டினார்.
அந்த கஞ்சரையும் நல்வழிப்படுத்த எண்ணிய பேச்சியம்மன், சோதிக்க ஆரம்பித்தாள்.
கர்ப்பமானாள், ராணி; ஆனால், 15 மாதமாகியும் குழந்தை பிறக்கவில்லை. ராஜாவும், ராணியும் கலங்கி, பேச்சியம்மனை தேடி ஓடினர்.
முதியவள் வடிவில் வந்த அம்மன், ராணியை தன் மடியில் வைத்து, வயிற்றைக் கிழித்து, குழந்தையை தொப்புள் கொடியுடன் வெளியே எடுத்தாள். அங்காள பரமேஸ்வரி என்ற பெயரில், அங்கு தங்கினாள்.
பெருமாளை தான், சயன நிலையில் பார்க்க முடியும். இங்கு, சயன நிலையில் அம்பிகை இருப்பது விசேஷம். உயரம், எட்டே முக்கால் அடி. சன்னிதி வாசலில், சாந்தமாக, மடியில் குழந்தையை வைத்த நிலையில் இருக்கிறாள், பேச்சியம்மன்.
பாலசுப்பிரமணிய சுவாமி, ஆறுபடை முருகன், தட்சிணாமூர்த்தி, மதுரை வீரன் தம்பதி, அகோர வீரபத்திரர், பாவாடைராயன், மகிஷாசுரமர்த்தினி மற்றும் ராகு கால துர்க்கை சன்னிதிகளும் இங்கு உள்ளன.
குழந்தை வரம் மற்றும் சுக பிரசவம் வேண்டி, பெண்கள் வழிபடுகின்றனர். ராணியின் வயிற்றைக் கிழித்து, குழந்தையை, தொப்புள் கொடியுடன் வெளியே எடுக்கும் பேச்சியம்மனின் சிற்பம், சுதையாக வடிக்கப்பட்டுள்ளது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து, 40 கி.மீ., துாரத்தில், துறையூர் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது.
தி. செல்லப்பா

