
தமிழ் படத்தில் அமிதாப்பச்சன்!
'காமராஜ்' மற்றும் 'முதல்வர் மகாத்மா' படங் களை இயக்கிய, அ.பாலகிருஷ்ணன், அடுத்து ஒரு படம் இயக்குகிறார். இந்தியா - பாகிஸ்தான் உறவு பற்றிய கதையில் உருவாகும் இந்த தமிழ்ப் படத்தில், இந்தி நடிகர் அமிதாப்பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதில், பாகிஸ்தானின் ஜின்னா முதல், இப்போதைய கசாப் வரை, பலர் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இடம் பெறுகின்றன.
— சி.பொ.,
கார்த்திகா கண்டிஷன்!
'கோ'பட நாயகியான கார்த்திகா, தன்னிடம் கதை சொல்லவரும் இயக்குனர்கள் முன் வைக்கும் முதல் கோரிக்கை, கதையில் ஹீரோயினுக்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்பது தான். குறிப்பாக, 'வெறும் மரத்தை சுற்றி, டூயட் பாடும் வேடங்களில் நடிக்க மாட்டேன். கதையில் ஹீரோவுக்கு இணையாக, என் வேடமும் இருக்க வேண்டும்...' என்று கண்டிஷன் போடுகிறார். வந்த வேலையை விட்டுவிட்டு பந்தற்காலை பிடித்த கதை!
— எலீசா.
மும்பையில் வீடு வாங்கிய ரஹ்மான்!
இந்தி படங்களுக்கு இசையமைக்க சென்றால், அங்கு ஓட்டலில் தங்கியிருந்து தான் இசைப்பணியில் ஈடுபடுவார் ஏ.ஆர்.ரஹ்மான். ஆனால், இப்போது மும்பையில் இரண்டு மிகப்பெரிய அடுக்குமாடி வீடுகளை வாங்கியுள்ளார் அவர். இதில், ஒரு வீட்டை, மும்பை சென்றால் தங்குவதற்கும், இன்னொரு வீட்டை, நவீன ரெக்கார்டிங் தியேட்டராகவும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்.
— சி.பொ.,
மோசமான நடிகை தீபிகா படுகோனே!
பாலிவுட் நடிகர், நடிகைகளுக்கான சிறந்த மற்றும் மோசமான நடிப்புக்குரிய விருதுகளை சமீபத்தில் கோல்டன் கேலா என்ற அமைப்பு வழங்கியது. இதில், பல படங்களில், 'ஐட்டம்' டான்ஸ் ஆடிய தீபிகா படுகோனேவுக்கு மோசமான நடிகை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மனசுடைந்து போயிருக்கும் தீபிகா, இனி, 'ஐட்டம்' டான்ஸ் ஆடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். வந்த வழி வந்தால், வாய் திறக்க வழி இல்லை!
— எலீசா.
குதிரை பந்தயம் பார்த்த ஐஸ்வர்யாராய்!
மகள் ஆரத்யா பிறந்த பின், எந்த வெளி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை ஐஸ்வர்யா ராய். ஆனால், குதிரை பந்தயம் பார்ப்பதில் அதிக ஆர்வம் கொண்ட அவர், சமீபத்தில், துபாயில் நடைபெற்ற உலக கோப்பை குதிரை பந்தயத்தை நேரில் பார்க்க சென்றார். இந்தப் போட்டி முடிவடையும் வரை, துபாயில் உள்ள ஒரு ஆடம்பர ஓட்டலில், ஆரத்யாவுடன் தங்கியிருந்தார் ஐஸ்வர்யாராய்.
— எலீசா.
சிம்புவின் ஆதங்கம்!
'ஓஸ்தி' படத்தில், ரிச்சா நடித்த வேடத்தில் நடிக்க, இந்தி நடிகர் அனில்கபூரின் மகளான சோனம் கபூரைதான் முதலில் தேர்வு பண்ணியிருந்தார் சிம்பு. ஆனால், அப்போது அவர் இந்தி படங்களில் பிசியாக இருந்ததால், சிம்புவின் ஆசை நிராசையானது. ஆனால், இந்தியில், தான் நடிக்கும் முதல் படமான, 'ராஞ்சனா' படத்திலேயே, சோனம் கபூருடன் ஜோடி சேர உள்ளார் தனுஷ்.
— சி.பொ.,
வாள் சண்டைபோடும் ஜெனிலியா!
சந்தோஷ் சிவன் இயக்கியுள்ள, 'உருமி' படத்தில், ஆக்ஷன் வேடத்தில் நடித்துள்ளார் ஜெனிலியா. 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த கதைக்களம் என்பதால், அப்போதைய களரி மற்றும் சுருள்வாள் சண்டை ஆகியவற்றை முறையாக பயிற்சி எடுத்து நடித்துள்ளார் ஜெனிலியா. அவர் சம்பந்தப்பட்ட சண்டை காட்சிகளை மட்டும், 15 நாட்களுக்கு மேல் படமாக்கியுள்ளார் சந்தோஷ் சிவன். வந்த கூத்து ஆடி தானே தீர வேண்டும்!
— எலீசா.
ஆந்திராவில் டேரா போட்ட அமலா!
சித்தார்த்துடன் அமலா பால் நடித்த, 'காதலில் சொதப்புவது எப்படி?' படம், தமிழைவிட தெலுங்கில் வசூல் சாதனை புரிந்துள்ளது. இதனால், ராம் சரண் தேஜா உட்பட, அங்குள்ள பிரபல ஹீரோக்களின் படங்கள், அமலாவுக்கு, 'புக்'காகியுள்ளன. அதனால், தெலுங்கில் கூடுதல் கவனம் செலுத்தப்போவதாக சொல்லும் அமலா, தற்போது சென்னையிலிருந்து இடம் பெயர்ந்து, ஆந்திராவில் டேரா போட்டுள்ளார். ஆல் பழுத்தால் அங்கே கிளி; அரசு பழுத்தால் இங்கே கிளி.
— எலீசா.
இரட்டை வேடத்தில் விக்ரம்!
சாமியை அடுத்து, தற்போது ஏ.எல்.விஜய் இயக்கும், 'தாண் டவம்' படத்திலும், போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் விக்ரம். இதே படத்தில், கண்பார்வை இல்லாதவராக, இன்னொரு வேடத் திலும் நடிக்கிறார் அவர். அந்த வேடம் பற்றி இப்போதே வெளியில் சொன்னால், சுவாரஸ்யம் குறைந்து விடும் என் பதற்காக, அதுபற்றிய செய்தி வெளி யிடாமல், சஸ்பென்சாக அந்த கேரக்டரை படமாக்கி வருகிறார் விஜய்.
— சி.பொ.,
அவ்ளோதான்!

