
நட்பா காதலா?
* உன்னைக்
காணும்
ஒவ்வொரு
வேளையிலும்,
பட்டாம்பூச்சியின்
சிறகெனப்
பட படக்கும்
என் இதயத்
துடிப்பை, நான்
எண்ணும்
போதெல்லாம்...
* வாய் திறக்கும்
போதெல்லாம்
உன் பெயரை
மட்டுமே
உச்சரிக்கத்
துடிக்கும், என்
நாவினை
கட்டுப்படுத்த,
என் உதடுகளை
கடித்துக்
கொள்ளும்
போதெல்லாம்...
* எண்ணிலா
நண்பர்கள்
என்னோடு
பேசினாலும்,
உன் குரலை
மட்டும்,
விசேஷ
ஒலியால்,
உணர்த்தி,
என்னை
உலுக்கிடும்
செல்பேசி...
சிணுங்கும்
போதெல்லாம்...
* பிறந்த நாள்
பரிசுகளில்...
பத்திரமாய்
பாதுகாக்கும், உன்
கையெழுத்திட்ட
வாழ்த்து அட்டையை
வாசிக்கும்
போதெல்லாம்...
* கல்லூரி ஆண்டு
விழாவில்,
கடைசியாய்
வந்த நீ,
அழுத்தமாய் தந்த
அந்தப் ஸ்பரிசத்தை
அடிக்கடி நான்
அனுபவிக்கும் போதெல்லாம்...
* நண்பரோடு சென்ற
சுற்றுலாவில்,
என் தோளில்
உன் கைபோட்டு,
மோனாலிசாவென
புன்னகை சிந்தும்,
புகைப்படத்தை,
நான் பார்க்கும்
போதெல்லாம்...
* நட்பு தான் என
நம்பினாலும்,
காதலாய்
இருக்குமோ எனக்
கலங்கும், என்
பெற்றோரிடம் -
கண்டிப்பாய் நான்
பதில் சொல்ல
வேண்டும்...
* சொல்...
நமக்குள்
இருப்பது,
நட்பா,
காதலா?
— கு.மா.பா.கபிலன், சென்னை.

