
இரண்டாம் பாகத்தில் பிசியான கமல்!
விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான வேலைகளில், தீவிரமாக இறங்கி விட்டார் கமல். முதல் பாகத்தில் ஆப்கான் தீவிரவாதிகளால் அமெரிக்காவுக்கு ஏற்படும் ஆபத்து பற்றி படமாக்கியவர், இரண்டாம் பாகத்தில், இந்தியாவுக்கு ஏற்படவிருக்கும் ஆபத்து பற்றி சொல்லி, உஷார்படுத்தும் வகையில் படமாக்கவுள்ளார். மேலும், முன்பு இரண்டாம் பாகத்துக்கு, மூ என்று டைட்டில் வைத்த கமல், இப்போது வேறு டைட்டில் யோசித்து வருகிறார்.
— சினிமா பொன்னையா
மகள்களுக்கு ராதா, 'அட்வைஸ்!'
சமீபகாலமாக, பெரும்பாலான நடிகையர் மீடியாக்களை தவிர்க்கின்றனர். ஆனால், மாஜி நடிகை ராதாவின் மகள்களான கார்த்திகா, துளசி இருவரும், மீடியாக்களை வரவேற்கின்றனர். அதோடு, கேட்கப்படும் கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் கொடுக்கின்றனர். இதே மாதிரி, எப்போதுமே மீடியாக்களுடன் நல்லுறவை வைத்திருக்க வேண்டும் என்று மகள்களுக்கு, 'அட்வைஸ்' செய்துள்ளார் ராதா. சொல்லிக் கொடுத்த சொல்லும், கட்டிக் கொடுத்த சோறும் எதுவரையில் நிற்கும்!
— எலீசா
சித்தார்த்தை சாடும் நித்யா!
சித்தார்த் நடிக்கும், டும் டும் பீ பீ என்ற படத்தில், முதலில் நித்யா மேனனை தான் நாயகியாக, 'புக்' செய்திருந்தனர். ஆனால், சித்தார்த் குறுக்கிட்டு சமந்தாவுக்கு சிபாரிசு செய்து, நித்யாவை இரண்டாவது நாயகியாக்கி விட்டார். இச்சேதியறிந்து கொதித்து போன நித்யா மேனன், 'சித்தார்த்தை பெரிய ஹீரோ என்று தான் நினைத்திருந்தேன். ஆனால், அவருக்குள் ஒரு பெரிய வில்லன் இருப்பதை இப்போது தான் அறிந்தேன்...' என்று தன் அபிமானிகளிடம் சொல்லி, ஆதங்கத்தை கொட்டி வருகிறார். அகப்பட்டுக் கொண்டாரே விட்டல பட்டர்!
— எலீசா
ஆதி நடிக்கும் பிரமாண்ட படம்!
அரவான் படத்துக்கு பின், ஆதியின் மார்க்கெட் ஆட்டம் கண்டிருப்பதால், அவரது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தும் முயற்சியாக, யாகாவராயினும் நா காக்க என்ற படத்தை, அவரது அண்ணனான சத்ய பிரபாஸ் தயாரித்து, இயக்குகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படம், பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகிறது. இப்படம் எனக்கு முக்கியமான படமாக அமையும் என்று சொல்லும் ஆதி, இப்படத்தின் ரிலீசை தொடர்ந்து, திருமணம் செய்யவும் திட்டமிட்டுள்ளார்.
— சி.பொ.,
தங்கைக்காக முயற்சி எடுத்த காஜல்!
இஷ்டம் படத்தில், விமலுக்கு ஜோடியாக நடித்த தங்கை நிஷா அகர்வாலை, கோலிவுட்டில் முன்னணி நடிகையாக்க வேண்டும் என்ற முயற்சியில் தோற்று விட்டார் காஜல் அகர்வால். அந்த படத்தை தொடர்ந்து, தங்கைக்காக பல இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டுப் பார்த்தும் பலன் இல்லாததால், இப்போது தெலுங்கில் இறக்கி விட்டுள்ளார். அப்படி தெலுங்கில் நிஷா அகர்வால் நடித்த, சோலோ என்ற படம் இப்போது, என் காதலுக்கு நானே வில்லன் என்ற பெயரில் தமிழில், 'டப்'பாகிறது. இப்படம் வெளியானதும், மீண்டும் புதுப்படங்களுக்கான முயற்சி எடுக்கும் திட்டமும் வைத்துள்ளார் நிஷா.
— எலீசா
விஜய் புகழ் பாடும் சந்தானம்!
தலைவா படத்தில் தன் நண்பனாக நடிக்க, சந்தானத்தை, 'புக்' பண்ண கூறியுள்ளார் விஜய். அதனால், இப்படத்தில் ஆரம்பத்திலிருந்தே அதிக உற்சாகமாக நடித்து வருவதாக சொல்லும் சந்தானம், விஜய் பின்னணி பாடிய ஒரு பாடலில், தன்னையும் அவர் இணைத்து கொண்டதால், இன்னும் ஏகப்பட்ட சந்தோஷத்தில் காணப்படுகிறார். இதையடுத்து, ஹீரோக்கள் புகழ் பாடும் பழக்கமில்லாத சந்தானம், முதன் முறையாக விஜய்யை பெருமையாக பேசி வருகிறார்.
— சி.பொ.,
அனுஷ்கா புராணம்!
ராணி ருத்ரம்மா தேவி படத்தைத் தொடர்ந்து, பாஹுபலி என்ற வரலாற்று படத்திலும் நடிக்கிறார் அனுஷ்கா. நான் ஈ ராஜமவுலி இயக்கும் இப்படத்திற்காக, இதுவரை எந்த கதாநாயகிகளும் எடுக்காத கத்திச் சண்டை பயிற்சிகளை எடுத்து வருகிறார். எந்த வித சோர்வும் முகத்தில் காட்டாமல் அனுஷ்கா எடுக்கும் பயிற்சிகளை பார்த்து, 'இவர் மாதிரி ஒரு தில்லான நடிகை, இந்திய அளவில் யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை...' என்று அனுஷ்கா புராணம் பாடி வருகிறார் ராஜமவுலி.
— சினிமா பொன்னையா
அவ்ளோதான்!

