
ஐஸ்வர்யாவுடன் நடிப்பது லட்சியமாம்!
கண்ணா லட்டு தின்ன ஆசையா மற்றும் யா யா உட்பட, சில படங்களில் நடித்தவர், டாக்டர் சீனிவாசன். பண மோசடி வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளியே வந்த அவர், மீண்டும், புதிய படங்களில் நடிப்பதில், ஆர்வம் காட்டி வருகிறார். அதோடு, முன்னாள் உலக அழகியும், இந்நாள் அபிஷேக் பச்சனின் மனைவியுமான ஐஸ்வர்யா ராயுடன், 'ஒரு படத்திலேனும், டூயட் பாடி விட வேண்டும் என்பது தான், என் சினிமா லட்சியம்...' என்று, கூறி வருகிறார். 'இதெல்லாம், பேச வேண்டுமானால், நன்றாக இருக்கும். நடைமுறைக்கு ஒத்து வராது...' என்று, சிலர் அவரிடம் சொல்ல, 'மத்தவங்க முடியாதுன்னு சொல்றத, முடித்துக் காட்டுறது தான், இந்த பவரோட ஸ்டைல். சீக்கிரமே, இந்த கோலிவுட்டே, மூக்குல விரலை வைக்கிற மாதிரி, ஐஸ்வர்யா ராயோட நடிச்சுக் காட்டுறேன்...' என்று, சொடக்கு போட்டு, கூறியுள்ளார்.
— சினிமா பொன்னையா
காஜலை கவர்ந்த தமிழ்நாட்டு இட்லி!
தமிழ்நாட்டு நடிகைகளெல்லாம், அரிசி உணவு சாப்பிட்டால், உடல் பெருத்துவிடும் என்று, கோதுமை உணவுகளை எடுத்துக் கொண்டு வருகின்றனர். ஆனால், வட மாநில மார்வாடி பெண்ணான, காஜல் அகர்வாலுக்கு, தமிழ்நாட்டு இட்லிதான் ரொம்ப பிடித்துள்ளது. அதனால், தமிழகத்தில், எந்த பகுதியில் படப்பிடிப்பில் இருந்தாலும், காலை வேளையில் இட்லியும், கெட்டி சட்னியும் தான் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுகிறார். மேலும், உடம்பில் எந்த வெயிட்டும் போடுவதில்லை என்றும், தன் அனுபவத்தை சொல்கிறார். ருசி கண்ட நாக்கு; சும்மா இராது.
— எலீசா
கமர்சியல் நடிகையாகும் ப்ரியா ஆனந்த்!
எதிர்நீச்சல் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, வணக்கம் சென்னை படத்தை எதிர்பார்க்கும் ப்ரியா ஆனந்த், 'இதுவரை, என்னை, கிளாமர் ஹீரோயினாக பார்த்து வந்த திரையுலகத்தினர், இப்படத்திற்கு பின், பர்பாமென்ஸ் நடிகை பட்டியலில், சேர்ப்பர். அந்த அளவுக்கு, இப்படத்தில், என் ரோலுக்கு நல்ல, 'ஸ்கோப்' கிடைத்துள்ளது. மேலும், இதன் பின், அதர்வாவுடன் நடிக்கும், இரும்புக் குதிரை படத்திலும், எனக்கு வெயிட்டான வேடம் தான். அந்த படம் வந்தபின், சிறந்த கமர்ஷியல் நடிகை என்ற, அங்கீகாரத்தை பெறுவேன்...' என்கிறார். முயல் பிடிக்கிற நாய் மூஞ்சியை பார்த்தால் தெரியாதா!
— எலீசா
கிசு கிசுவை விரட்டியடிக்க அஞ்சலி புதிய திட்டம்!
இப்போதெல்லாம் அஞ்சலி, அவுட்டோர் சென்றாலே காதல், ரகசிய திட்டம் என்று, அவரைப்பற்றி கலர் கலராக, வதந்தி பரவி விடுகிறது. அதிலும், சமீபத்தில், அரசியல் புள்ளி ஒருவரை, திருமணம் செய்து கொண்டதாக, பரவிய செய்தியில், ஆடிப்போயிருக்கிறார் அஞ்சலி. அதனால், தொடர்ந்து தன்னைப்பற்றி கிசுகிசுக்கள் வந்தால், தன் மார்க்கெட்டுக்கே உலை வைத்து விடும் என்று நினைக்கும் அஞ்சலி, இனி, படப்பிடிப்பு சம்பந்தமாக, எந்த அயல் நாடுகளுக்கு சென்றாலும், அதை, 'பேஸ் புக்'ல், பப்ளிசிட்டி செய்ய திட்டமிட்டுள்ளார். பட்டவருக்கு தெரியும் படையிற் கலக்கம்!
— எலீசா
சந்தானத்துக்கு மும்பை மாடல் அழகி!
கதாநாயகன் ஆசைக்கு, கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில், அஸ்திவாரம் போட்ட, காமெடி நடிகர் சந்தானம், இப்போது, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்திலும், ஹீரோவாகி விட்டார். செய்தி பரவியதும், அவருடன், காமெடி காட்சிகளில் நடித்த, காதல் சந்தியா உள்ளிட்ட சில நடிகைகள், கதாநாயகி வாய்ப்பு கேட்டனர். அதற்கு, 'இப்போது நானும் பெரிய ஹீரோ தான். அதனால், மற்ற நடிகர்கள் போன்று, மும்பையிலிருந்து இறக்குமதி செய்த நடிகையுடன் நடித்தால் தான் மரியாதையாக இருக்கும்...' என்று சொன்னவர், இப்போது, அஸ்னா ஜவேரியா என்ற மும்பை மாடல் அழகியை, தனக்கு ஜோடியாக நடிக்க, 'புக்' செய்துள்ளார்.
— சினிமா பொன்னையா
* சமீபகாலமாக சிட்டி சப்ஜெக்ட்டுகளாக நடித்து வந்த அஜீத், சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கும், வீரம் படம் கிராமத்து கதை என்பதால், வேஷ்டி அணிந்து நடித்து வருகிறார்.
அவ்ளோதான்!

