PUBLISHED ON : ஏப் 20, 2014
கமல் எழுதிய 100 கவிதைகள்!
நடிகர் கமலஹாசன், இலக்கியத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். அதனால், சில பிரபல இலக்கிய பேச்சாளர்களின் பேச்சை ரசிப்பதுடன், படப்பிடிப்பு நேரம் போக, ஓய்வு நேரங்களில், அவ்வப்போது, கவிதைகளும் எழுதுவார். அப்படி, தான் எழுதிய நூறு கவிதைகளை, தற்போது, புத்தகமாக வெளியிடும் முயற்சியில், இறங்கியுள்ளார். இந்த புத்தக வெளியீட்டு விழாவுக்கு, சினிமா உலகம் அல்லாத, இலக்கியவாதிகள், எழுத்தாளர்களை மட்டுமே, அழைக்கவும் திட்டமிட்டுள்ளார்.
— சினிமா பொன்னையா
யுவன் சங்கர்ராஜா விலகல்!
ஜெய் - சுவாதி நடிக்கும், வடகறி படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜாதான் இசையமைக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால், ஒரேயொரு பாடலை மட்டும் பதிவு செய்து கொடுத்த அவர், பின், இந்துவிலிருந்து, முஸ்லீம் மதத்திற்கு மாறியபோது ஏற்பட்ட சில பிரச்னைகளால், அப்படத்திற்கு தேவையான மீதி பாடல்களை, குறிப்பிட்ட நேரத்திற்குள் அவரால் கொடுக்க முடியவில்லை. அதனால், விவேக் சிவா என்ற புதிய இசையமைப்பாளரை நியமித்து, மீதமுள்ள நான்கு பாடல்களையும் பதிவு செய்து, படமாக்கியும் விட்டனர். இதனால், இப்போது அப்படத்தில் இருந்து விலகிக் கொண்டார் யுவன். இருப்பினும், அவர், 'கம்போஸ்' செய்து கொடுத்த அந்த ஒரு பாடலை, வடகறி படத்தில் பயன்படுத்துகின்றனர்.
— சி.பொ.,
மீண்டும் பிசியான ஹன்சிகா பாசறை!
சிம்புவுடனான காதலை முறித்துக் கொண்ட பின், ஹன்சிகாவின் மார்க்கெட், மீண்டும் 'ஜிவ்'வென்று உயர்ந்து விட்டது. ஆர்யா, விக்ரம் போன்ற, மேல்தட்டு ஹீரோக்கள் அரவணைத்ததை அடுத்து, மேலும் சில ஹீரோக்கள் ஹன்சிகாவை, தங்களது படங் களுக்கு, சிபாரிசு செய்து வருகின்றனர். இந்நிலையில், விஜய், அஜித் என, மேல்தட்டு ஹீரோக்களுடன், டூயட் பாடி, தன் மார்க்கெட்டில், பரபரப்பு கூட்டும் முயற்சியில் இறங்கியுள்ள ஹன்சிகா, சம்பந்தப்பட்டவர்களுடன், அடிக்கடி மீட்டிங் போட்டு வருகிறார். மேலும், தற்போது மேல்தட்டு நடிகர்களின் படங்களை கைப்பற்றி வரும் நயன்தாரா, அமலாபாலை விட, தன் படக்கூலியை, கணிசமாக குறைத்தும், படாதிபதிகளை, தன் பக்கம் திரும்ப வைத்துள்ளார்.ஏட்டிக்கு போட்டி; எகனைக்கு மொகனை!
— எலீசா
இமயமலைக்கு சென்ற நயன்தாரா!
கேரளாவைச் சேர்ந்த, கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர் நயன்தாரா. ஆனால், பிரபுதேவாவை கல்யாணம் செய்து கொள்ளஇருந்த நேரத்தில், இந்து மதத்திற்கு மாறினார். அதையடுத்து, பிரபுதேவாவுடனான உறவு முறிந்த போதும், இந்து மதத்திலேயே, தன்னை இணைத்துக் கொண்டுள்ள நயன்தாரா, ஆன்மீகத்தில் தீவிரமாகி விட்டார். பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு சென்று, சாமி தரிசனம் செய்து வரும் அவர், சமீபத்தில் இமயமலைக்கும், ஆன்மிக பயணம் மேற்கொண்டார். காவி உடையணிந்து, கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து, பக்தி பரவசத்துடன் இமயமலையில், உள்ள பல கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார்.
— எலீசா
மகனுக்காக களமிறங்கும் விஜயகாந்த்!
விஜயகாந்த் முதன் முதலில் தேர்தலை சந்தித்த போது, தனக்கு முதல் வெற்றியாக, விருத்தாசலம் தொகுதி அமைந்ததால், விருதகிரி என்ற பெயரில், ஒரு படத்தை இயக்கி, நடித்தார். ஆனால், முழு நேர அரசியல்வாதியாகி விட்ட அவர், கடந்த ஆண்டு, சகாப்தம் என்ற பெயரில், ஒரு படத்தை துவக்கி, அதில், தன் மகன் சண்முக பாண்டியனை, ஹீரோவாக அறிமுகப்படுத்துவதாக அறிவித்தார். ஆனால், இன்னும் படப்பிடிப்பு துவங்கப்படாத அப்படத்தில், இப்போது, தானும் ஒரு வேடத்தில் நடிக்க, முடிவு செய்துள்ளார் விஜயகாந்த். மகன் அறிமுகமாகும் படத்தில், தானும் இடம் பெற்றால், படத்திற்கு பலமாக இருக்கும் என்பதால், மீண்டும் அரிதாரம் பூசுகிறார் விஜயகாந்த்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
உலக நாயகனின் இரண்டாவது மகளுக்கும், மும்பையை சேர்ந்த ஒரு மாஜி நடிகையின் மகனுக்குமிடையேயான காதல் தீ, பத்தி எரிந்து கொண்டிருக்கிறது. இதனால், ஷாக்கான அவரது தாய்க்குலம், 'காதல் உன் சினிமா கேரியரை பாதித்து விடும்...' என்று, மகளுக்கு, 'அட்வைஸ்' செய்து வருகிறார். ஆனபோதும், அவை அனைத்தும், விழலுக்கு
இறைத்த நீராகி கொண்டிருக்கிறது.
காமெடியனாக நடித்து, காசு பார்த்து வந்த கஞ்சா
நடிகருக்குள், ஒரு குட்டி சிவாஜி ஒளிந்து கொண்டிருப்பதாக, சிலர் உசுப்பி விட, ஒரு படத்தை, தானே தயாரித்து, நாயகனாகவும் நடித்தார். ஆனால், அந்தப் படத்தை, இப்போது, எந்த விநியோகஸ்தர்களும் வாங்க மறுக்கின்றனர். அதோடு, கஞ்சா நடிகர், நாயகனாக நடித்திருப்பதை, கண்டபடி விமர்சிக்கின்றனர். இதனால், 'ஹீரோவாக ஆசைப்பட்டு, காசும் போச்சு; மரியாதையும் போச்சு...' என்று, புலம்பிக் கொண்டு திரிகிறார் கஞ்சா நடிகர்.
* முந்தானை முடிச்சு படத்தின், இரண்டாம் பாகமான, மாப்பிள்ளை விநாயகர் படத்தில், பாக்யராஜ், ஊர்வசி இருவரும், கணவன், மனைவியாக நடித்துள்ளனர்.
* அமிதாப்பச்சன், தனுஷ் நடிக்கும் இந்தி படத்தில், ஒரு வித்தியாசமான மாடர்ன் கேரக்டரில் நடிக்கிறார் அக் ஷரா.
* அஜித்தின் அடுத்த படத்தில், ரோஜா பட புகழ், அரவிந்த்சாமி, வில்லனாக நடிக்கிறார்.
* மொழிவது யாதெனில் என்ற படத்தில், மைக்கேல் ஜாக்சன் கெட்டப்பில், ஆடிப்பாடியுள்ளார் கானா பாலா.
* முன்னாள் உலக அழகிகளான ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் இருவரும், 20 ஆண்டுகால பகையை மறந்து, ஒரு படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.
* வம்சம் படத்தில், அருள் நிதியுடன் நடித்த கஞ்சா கருப்பு, மீண்டும், அவருடன், ஒரு படத்தில் நடிக்கிறார்.
