
அஜித் - விஜய் பாடல்களை விமர்சித்த கங்கை அமரன்!
கரகாட்டக்காரன் உட்பட பல படங்களை இயக்கியவர், கங்கை அமரன். இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் என, இவருக்கு பல முகம் உண்டு. தற்போது, தணிக்கை குழு அதிகாரியாக இருக்கும் கங்கை அமரன், அஜித்தின், வேதாளம் படத்தில் இடம் பெற்ற, 'ஆளுமா டோலுமா...' மற்றும் விஜயின், தெறி படத்தில் இடம் பெற்ற, 'ஜித்து ஜில்லாடி...' போன்ற பாடல்களை, கடுமையாக விமர்சித்துள்ளார். 'எதற்காக இப்படி மோசமான பாடல்களை எழுத வேண்டும்... அஜித் மற்றும் விஜய்க்கு இது சரியான பாடல்கள் இல்லை என்று தெரியாதா... எல்லாம் தெரிந்தும், இம்மாதிரியான பாடல்களை, தங்களது படங்களில் வைத்து, தமிழை கொலை செய்கின்றனரே...' என்று விமர்சித்துள்ளார்.
— சினிமா பொன்னையா
காமெடி நடிகையாகும் கயல் பட ஆனந்தி!
கயல் படத்தில் நடித்த ஆனந்தியிடம், உடல் கவர்ச்சி இல்லை என்ற போதும், அவரை கவர்ச்சியாக நடிக்க கூறி, சில இயக்குனர்கள் வற்புறுத்தி வந்தனர். ஆனால், அவரோ, 'கவர்ச்சி எனக்கு, 'ஒர்க் - அவுட்' ஆகாது...' எனக் கூறி, தற்போது, காமெடி கலந்த கதைகளில் நடிப்பதில், கவனத்தை திருப்பியுள்ளார். அவ்வகையில், விமல் நடிக்கும், மன்னார் வகையறா படத்தில், காமெடிக்கு முக்கியத்துவமுள்ள கதையில் நடிக்கிறார். தனக்கு எளிய சம்பந்தம்; விரலுக்குத் தகுந்த வீக்கம்!
— எலீசா
கோடம்பாக்கத்தில் குடியேறும் மலையாள நடிகை!
மலையாள, பிரேமம் படத்தில் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், அதையடுத்து, தமிழில், தனுஷ் ஜோடியாக, கொடி படத்தில் நடித்திருப்பவர், தெலுங்கில், பிரேமம், 'ரீ - மேக்' மற்றும் அ ஆ என, இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதனால், மலையாள படங்களில் நடிப்பதை தவிர்த்த அனுபமா, 'தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாவதே என் எதிர்கால லட்சியம்...' என்று கூறி, விரைவில் கோடம்பாக்கத்தில் குடியேறப் போவதாக கூறி வருகிறார். இருக்க இடம் கொடுத்தால், படுக்க இடம் கேட்டாற் போல!
— எலீசா
விஜயசேதுபதியுடன் மீண்டும் மடோனா!
பிரேமம் மலையாள படத்தில் நடித்த மடோனா, விஜயசேதுபதி நடித்த, காதலும் கடந்து போகும் படத்தில் நடித்தார். அப்படம், பெரிய அளவில் வெற்றியடையவில்லை என்றாலும், விஜயசேதுபதி - மடோனாவின், 'கெமிஸ்ட்ரி' பேசப்பட்டது. விளைவு, தற்போது, விஜயசேதுபதியை வைத்து, தான் இயக்கயிருக்கும் படத்தில், மடோனாவையே நாயகியாக்கி இருக்கிறார், கே.வி.ஆனந்த். இதையடுத்து, கோடம்பாக்கத்தில் முகாமிட, வீடு பார்த்து வருகிறார் மடோனா. அலை மோதும்போதே கடலாட வேண்டும்!
— எலீசா
வில்லனான பார்த்திபன்!
கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற பெயரில், ஒரு படத்தை இயக்கிய பார்த்திபன், உடனடியாக அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதாக கூறினார். ஆனால், சரியான தயாரிப்பாளர்கள் கிடைக்கவில்லை. அதனால், நானும் ரவுடி தான் படத்தில் வில்லனாக நடித்தவர், தொடர்ந்து, மாஸ் மற்றும் திகார் போன்ற படங்களில் நடித்தார். தற்போது, சுசீந்திரன் இயக்கத்தில், விஷ்ணு நடிக்கும் புதிய படத்திலும், வில்லனாக நடிப்பவர், தொடர்ந்து வில்லன் வேடங்களில் நடிக்க தயாராக இருப்பதாக கூறி வருகிறார்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
மூன்றாம் தட்டு கதாநாயகர்களுடன் மட்டுமே, 'டூயட்' பாடி வரும், டார்லிங் பட நடிகை, கோடம்பாக்கத்தில் மையம் கொண்டுள்ளார். தற்போதைய நிலவரப்படி, சில மேல்தட்டு கதாநாயகர்களுடன் அவ்வப்போது, ரகசிய சந்திப்பு நடத்தி, 'அட்டாக்' செய்து வருவதால், 'கூடிய சீக்கிரமே அம்மணி மேல்தட்டு நடிகையாகி விடுவார்...' என்று கோலிவுட்டில் கிசு கிசுக்கின்றனர்.
கதாநாயகன் அரிதாரம் பூசியிருக்கும் இளவட்ட இசையமைப்பாளர், கடைசியாக, தளபதி நடித்த படத்துக்கு இசையமைத்தார்; ஆனால், பாடல்கள் எதுவும், 'ஹிட்'ஆகவில்லை. இதனால், மேற்படி இசையமைப்பாளருக்கு, நடிப்பின் மீது கவனம் சென்று விட்டதால், இசையில் ஈடுபாடு குறைந்து விட்டது என்று, முன்னணி நடிகர்களின் படங்கள், அவரைத் தேடிச் செல்வதில்லை. இதனால், தன் இசை அடையாளம் காணாமல் போய் விடுமோ என்று அதிர்ச்சியடைந்துள்ளார், கதாநாயகனான இசையமைப்பாளர்.
சினி துளிகள்!
* லாரன்சுடன் நடித்து வரும், மொட்ட சிவா கெட்ட சிவா படத்தை, பெரிய அளவில் எதிர்பார்க்கிறார், நிக்கி கல்ராணி.
* ஒரே நேரத்தில், மூன்று படங்களில் நாயகனாக நடித்து வருகிறார், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார்.
அவ்ளோதான்!

