PUBLISHED ON : ஜூலை 10, 2016

பிரித்து வைத்தல் நியாயம் இல்லை... பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை... இரண்டல்லோ... இரண்டும் ஒன்றல்லோ... என, இரட்டை கிளவியையும், இரட்டை சகோதரர்களையும் ஒப்பிட்டு, வைரமுத்து எழுதிய பாடல் வரிகள், குண்டடத்தில் உள்ள, இரட்டை சகோதர்களின் வாழ்வில் ஒன்றிப்போகிறது.
சமீபத்தில், அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கவுன்சிலிங் ரேங்கிங் பட்டியல் வெளியானது; அதில், திருப்பூர் மாவட்டம், குண்டடத்தை சேர்ந்த மாணவர், சிவராம் கிருத்விக், 200க்கு 200 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் ஐந்தாமிடம் பிடித்தார். இது, அனைவரும் அறிந்ததே!
இரட்டையர் என்றாலே, உருவ ஒற்றுமை ஒன்று போலிருக்கும். ஆனால், சிவராம் கிருத்விக் மற்றும் சிவலஷ்வந்த் என்கிற இந்த இரட்டையர்களின் உருவம் மட்டுமின்றி, எண்ணம், சொல், செயல், கல்வி என, அனைத்திலும் ஒன்றாகவே வலம் வருகின்றனர்.
அந்த சுவாரசியங்களை அறிய, குண்டடம் பேருந்து நிலையம் எதிரே உள்ள, இவர்களின் வீட்டுக்கு சென்றோம். சகோதரர்கள் இருவரும் ஒற்றுமையாக, 'வாங்க... வாங்க...' என, வரவேற்றனர். அவர்களது பெற்றோர், சத்தியசீலன் - ஜெயந்தியிடம், இருவர் குறித்து கேட்டோம்.
சத்தியசீலன் பேசத் துவங்கினார்:
குண்டடத்தில், கோழிப்பண்ணை வைத்துள்ளேன்; 1999ல், இவர்கள் பிறந்தனர். இருவரின் பிறப்புக்கும் இடையே, ஒரு நிமிடமே வேறுபாடு என்பதால், கிருத்விக் பெரியவனாகவும், சிவலஷ்வந்த் இளையவன் எனவும் அடையாளப்படுத்திக் கொண்டோம். படிப்பிலும், விளையாட்டிலும் இருவரும் கில்லாடிகள்.
இவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, எந்த பொருள் வாங்கினாலும், இருவருக்கும் ஒன்று போலவே வாங்குவோம். அதேபோன்று, ஒருநாள் கூட, இருவரையும் பிரித்ததும் இல்லை என்றார்.
இடையில் குறுக்கிட்ட தாய் ஜெயந்தி, 'இவர்களது ரெண்டு வயதில் ஒருமுறை, ஒருத்தனை மட்டும், என் தாய் வீட்டுக்கு அனுப்பினேன். மறுநாளே, ரெண்டு பேருக்கும் காய்ச்சல் வந்துவிட்டது; அதன்பின், இவர்களை பிரித்து வைக்கவே இல்ல...' என்றார்.
இருவரும், தெலுங்கானாவில் உள்ள ஸ்ரீசைதன்ய ஐ.ஐ.டி., அகாடமியில், பிளஸ் 2 படித்தனர். பிளஸ் 2 தேர்வில், கிருத்விக், சமஸ்கிருதம் - 195, ஆங்கிலம் - 190, கணிதத்தில், 300க்கு, 300, இயற்பியல் மற்றும் வேதியியலில், 150க்கு, 150 என, 1,000க்கு, 985 மதிப்பெண் பெற்றார். சமஸ்கிருதம், 197; ஆங்கிலம் - 192, கணிதம், 300, இயற்பியல், 148, வேதியியல், 150 என, 987 மதிப்பெண் பெற்றுள்ளார், சிவலஷ்வந்த்.
இருவரும் ஒன்றுபோல், ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., நுழைவுத்தேர்வு எழுதினர். அண்ணா பல்கலை வெளியிட்ட, 'கட் - ஆப்' மதிப்பெண்ணில், கிருத்விக், 200க்கு, 200ம், சிவலஷ்வந்த், 199.5 மதிப்பெண்ணும் பெற்றனர்.
இதைப் பற்றி கிருத்விக் சொல்லத் துவங்கினார்...
இரட்டையராக இருப்பதை நாங்கள் பலமாக நினைக்கிறோம். படிப்பு, விளையாட்டு என, எல்லாவற்றிலும் ஒற்றுமையாக இருக்கிறோம். நான், சிவில் சர்வீஸ் தேர்வெழுதி, கலெக்டராக விரும்புகிறேன்; சிவலஷ்வந்த், எம்.எஸ்., (மாஸ்டர் ஆப் சயின்ஸ்) படிக்க விரும்புகிறார். இதுவரை, எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் வந்ததில்லை; எதிர்காலத்திலும் வராமல் ஒற்றுமையாக இருப்போம் என்றார், அமைதியாக!
'உங்களுக்குள் ஏதாவது ஒரு விஷயத்தில் வேறுபாடு ஏற்பட்டதுண்டா...' என கேட்டதும், 'கிரிக்கெட் விளையாடும்போது, இடதுகையால், 'பேட்டிங்' செய்வார், கிருத்விக். நான், வலதுகை பேட்ஸ்மேன்; தானே பெரியவன் எனக்கூறி, சிலநேரங்களில், என்னிடம் வேலை வாங்க நினைப்பார் கிருத்விக்; இதுவே, எங்களுக்குள் உள்ள ஒரே ஒரு வேறுபாடு...' என்றார், சிவலஷ்வந்த்.
'இரட்டையர் என்பதால், ஏதேனும் பிரச்னையை சந்தித்திருக்கிறீர்களா?' என, பெற்றோரிடம் கேட்ட போது, 'இதுவரை, எந்த ஒரு சிறிய பிரச்னையும் வந்தது இல்ல; அப்படியே வந்தாலும், அவர்களுக்குள் பேசி சரி செய்துக்குவாங்க. நாங்க தலையிட வேண்டியதே இல்ல. சிவலஷ்வந்த் மட்டும் தன்னை இளையவன் என்பதை ஏற்றுக்க மாட்டான். 'பயலாஜிக்கல்'படி, நானே பெரியவன்னு, அவ்வப்போது வாதிடுவான்...' என்றார், ஜெயந்தி.
'எதிர்காலத்தில் இருவரும் பிரிய வேண்டி வருமே...' எனக் கேட்டதும், 'வெளிநாடு செல்ல விரும்புகிறான், சிவலஷ்வந்த்; இருவரும் எந்த திசையில் இருந்தாலும், எங்களை பார்க்க, ஒன்றுபோல் வரணும்ன்னு சொல்லியிருகோம்...' என்றார், ஜெயந்தி.
தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் இந்தி என, நான்கு மொழிகளை அறிந்துள்ள இவர்களை, மேலும் பல வெற்றிகள் பெற, வாழ்த்தி வந்தோம்.
டி.கிருஷ்ணபிரபு

