
சேலம் வேலுச்சாமி, தன் கட்டுரையில் எழுதியது: சென்ற நூற்றாண்டு கவிஞர்கள் மற்றும் அவர்கள் படைப்புகளிடம் எனக்கு பற்று அதிகம். பாவேந்தர் பாரதிதாசனின், 'இன்ப இரவு' நாடகம், சேலத்தில் நடைபெற்ற நேரம் அது! ஒருநாள், மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவுக்கு வந்தார், பாரதிதாசன். 'என் கவிதைகளை படித்திருக்கிறாயா?' என்று என்னிடம் கேட்டார். நான், அவர் கவிதைகளை கண்ணால் கூட பார்த்ததில்லை. ஆனாலும், ஏதோ படித்திருப்பதாக சொல்லி வைத்தேன்.
மாடர்ன் தியேட்டர்சிலிருந்து அப்போது வெளிவந்த, 'சண்டமாருதம்' பத்திரிகை, என் பொறுப்பில் இருந்தது. அதில் வெளியிட, ஒரு பாடல் எழுதித் தரும்படி, அவரைக் கேட்டு வைத்தேன். அடுத்த நாளே, 'அவள் மேல் பழி...' என்ற பாடலை எழுதிக் கொடுத்தார். அதைப் படித்ததும், அவர் மீது, அளவு கடந்த மதிப்பும், மரியாதையும் உண்டாயிற்று. தொடர்ந்து, அவர் பாடல்களை வாங்கி, வெளியிட்டேன்.
அதன்பின், மாடர்ன் தியேட்டர்சின் அபூர்வ சிந்தாமணி, சுபத்ரா, சுலோசனா, பொன்முடி மற்றும் வளையாபதி ஆகிய படங்களுக்கு கதை, வசனம் எழுதினார், பாரதிதாசன்.
ஏழெட்டு ஆண்டுகள் கடந்த நிலையில், சென்னையிலிருந்து எனக்கு கடிதம் எழுதியிருந்தார், பாரதிதாசன். அவருடைய, 'பாண்டியன் பரிசு' காப்பியத் தலைவன் வேலன் பாத்திரத்திற்கு, நான் ஏற்கனவே, கதை வசனம் எழுதியிருந்தேன். இப்போது, அந்த கதை வசனத்தை எடுத்துக் கொண்டு, எழும்பூரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வரும்படி, எழுதியிருந்தார்; அவ்வாறே சென்றேன்.
'படத்துக்கு யார் யாரைப் போடலாம்?' என்று கருத்து கேட்டார், பாரதிதாசன்.
'வேலன் பாத்திரத்துக்கு, சிவாஜியைப் போடலாம்...' என்றேன்; அவர் சற்று தயங்கினார். 'படத்துக்கு, 'ஸ்டார் வேல்யூ' தேவை...' என்று வற்புறுத்தினேன். உடனே, அப்போது முதல்வராக இருந்த காமராஜரை தொலைபேசியில் அழைத்து, தன் படத்தில் சிவாஜியை நடிக்க சொல்லும்படி கேட்டுக் கொண்டார்; காமராஜரும், சிவாஜியிடம் பேச, அவரும் ஒப்புக்கொண்டார்.
அடுத்தநாள் காலை, சிவாஜியின் வீட்டுக்குப் போனோம். 'பாண்டியன் பரிசு' கதையைப் பற்றி சொன்னார், பாரதிதாசன். 'பலமுறை படித்திருக்கிறேன். நானே வேலன் பாத்திரத்தில் நடிக்கிறேன். நாளைக்குப் பேசுவோம்...' என்று கூறி எழுந்தார், சிவாஜி.
நாங்களும் விடுதி அறைக்குத் திரும்பினோம். 'சிவாஜி நாளைக்குன்னு ஏன் சொன்னான்?' என்று கேட்டார் பாவேந்தர். 'தெரியலையே...' என்றோம்.
அடுத்தநாள், தனியாகவே சிவாஜியின் வீட்டுக்குச் சென்றார் பாரதிதாசன். அவரிடம், 'நீங்களே வசனம், பாட்டு எல்லாம் எழுதுங்க; மற்றபடி டைரக் ஷன், இசையமைப்பு, ஒளிப்பதிவு ஆகியவற்றுக்கெல்லாம், நான் சொல்பவர்களைத் தான் போடணும்...' என்றார், சிவாஜி. 'ஏன்'ன்னு கேட்டுள்ளார், பாரதிதாசன்.
'வேறு இயக்குனர்களைப் போட்டால், அவர்கள் என்ன நினைக்கின்றனரோ, அதன்படி நடிக்கச் சொல்வர். ஆனால், நான் எப்படி நடிக்கிறேனோ, அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் இயக்குனர் தான் எனக்கு வேணும். ஆகையால், பீம்சிங்கைப் போடுங்க...' என்றார் சிவாஜி.
'சரி, பாக்கலாம்....' என்று சொல்லி, எழுந்து வந்து விட்டார், பாரதிதாசன்.
அறைக்கு திரும்பிய அவர், நல்ல மனநிலையில் இல்லை. வழக்கத்துக்கு சற்று அதிகமாகவே மது அருந்தினார். 'அவன் என்ன பெரிய நடிகன்... அவன் நடிக்காட்டி என்ன...' என்று வருத்தத்தோடும், கோபத்தோடும் பேசினார். அவரை சமாதானப்படுத்தி, பீம்சிங்கே இயக்குனராக இருக்கட்டும் என்றோம்; அவரும் ஒப்புக் கொண்டார்.
பீம்சிங் வந்தார்; 'பாண்டியன் பரிசு' கதையைக் கொடுத்து, அதற்கு கதை, வசனம் எழுதி வரும்படி சொன்ன பாரதிதாசன், பேச்சுவாக்கில், 'ஆமா... நீ எத்தனாவது படிச்சிருக்கே?' என்று கேட்டார். 'நான் தமிழே படிக்கலே; பூனாவிலே படிச்சேன்...' என்றார், பீம்சிங்.
பாரதிதாசன் நொந்தே போனார்.
சிவாஜி கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்ததில், படம் துவங்கப்படாமலே போயிற்று!
நடுத்தெரு நாராயணன்

