PUBLISHED ON : ஏப் 23, 2017

ரஜினி படத்திற்கு, 'மேக் இன் இந்தியா' அந்தஸ்து!
இந்தியாவில் தயாராகும் பொருட்களை மட்டுமே வைத்து தயாரிக்கப்படும் படங்களுக்கு, 'மேக் இன் இந்தியா' என்ற அந்தஸ்தை வழங்கி வருகிறது, மத்திய அரசு. அந்த அந்தஸ்தை, ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள, 2.0 படம் பெற்றிருக்கிறது. இப்படத்தில் பணியாற்றியவர்கள் பயன்படுத்திய பொருட்கள் அனைத்துமே இந்தியாவைச் சேர்ந்தவை தான் என்றாலும் நாயகியாக நடித்துள்ள, எமிஜாக்சன், லண்டனைச் சேர்ந்தவர்; இருப்பினும், 'மேக் இன் இந்தியா' அந்தஸ்தை பெற்றிருக்கிறது, இப்படம்.
— சினிமா பொன்னையா
மீண்டும் வந்தார் மாளவிகா நாயர்!
ராஜூமுருகன் இயக்கிய, குக்கூ படத்தில், அட்டகத்தி பட தினேஷுக்கு, ஜோடியாக நடித்தவர், மாளவிகா நாயர். கண் பார்வை இல்லாத கதாபாத்திரத்தில், சிறப்பாக நடித்திருந்த மாளவிகாவுக்கு, அதையடுத்து, எதிர்பார்த்தபடி படங்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில், தற்போது, அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில், வழக்கமான கதாநாயகியாக இல்லாமல், கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிப்பதாக சொல்கிறார் மாளவிகா. கண்டு எடுத்தானாம், ஒரு சுண்டு முத்தை!
— எலீசா
இந்திக்கு செல்லும் விஜயசேதுபதி!
தமிழில், கவண் படத்திற்கு பின், விக்ரம் வேதா, அநீதி கதைகள், கருப்பன் மற்றும் 96 ஆகிய படங்களில் நடித்து வருகிறார், விஜயசேதுபதி. இந்நிலையில், பாலிவுட்டின், பிரபல நடிகை பாக்யஸ்ரீயின் மகன் அபிமன்யூ தசானி அறிமுகமாகும், மர்த் கோ தர்த் நகின் ஹோட்டா என்ற படம் மூலம், இந்தி சினிமாவில் அறிமுகமாகிறார் விஜயசேதுபதி. இப்படம், காமெடி கலந்த கதையில் உருவாகிறது.
— சி பொ.,
மணிரத்னம் பட நாயகியின் தடாலடி பதில்!
மணிரத்தினத்தின், காற்று வெளியிடை படத்தில் நடித்துள்ள, பாலிவுட் நடிகை அதிதி, 2009ல், சத்யதீப் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்தவர், 2013ல் அவரை விவாகரத்து செய்து, இந்தி படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார். இது குறித்து யாராவது கேட்டால், மறுப்பு சொல்லாமல், 'சத்யதீப் மிஸ்ராவை, திருமணம் செய்தது உண்மை தான்; பின், அவரை பிடிக்காததால், விவகாரத்து செய்தேன். பிடிக்காதவருடன், பொய்யான வாழ்க்கை வாழ, விரும்பவில்லை...' என்கிறார், தடாலடியாக! தன் நோய்க்கு தானே மருந்து!
— எலீசா
யுவனை துரத்தும் அறிமுக இசையமைப்பாளர்கள்!
தான் இசையமைத்து வரும் படங்களின் சி.டி., வெளியிட, 'யு.ஐ ரெக்கார்ட்ஸ்' என்ற ஆடியோ நிறுவனத்தை துவங்கி, அதன் மூலம் வெளியிட்டு வருகிறார், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. இந்நிலையில், அஜனீஸ் லோக்நாத் என்ற புதுமுக இசையமைப்பாளர் இசையமைத்துள்ள, குரங்கு பொம்மை படத்தின் ஆடியோவையும், தன் ஆடியோ நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார். இதனால், புதுமுக இயக்குனர்கள் பலர், யுவனின் ஆடியோ நிறுவனத்தின் மூலம், ஆடியோக்கள் வெளியானால், நல்ல, 'ப்ரமோஷன்' கிடைக்கும் என, அவரது ஆடியோ நிறுவனத்தின் முன், நீண்ட வரிசையில் நிற்கின்றனர்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை
ஏற்கனவே, தளபதி நடிகரை வைத்து, இரண்டெழுத்து படத்தை இயக்கிய இயக்குனர், தற்போது, வில்லனாக நடித்து வருகிறார். தளபதி நடிகரின் படத்தில் நடிக்கும் இயக்குனர், சந்தடி சாக்கில், நடிகரிடம், ஒரு கதையை கூறி, ஓ.கே., செய்ய நினைத்தார். ஆனால், நடிகரோ, அவர் எப்போதெல்லாம், கதை கூற ஆரம்பிக்கிறாரோ, அப்போதெல்லாம், எரிச்சலை வெளிப்படுத்தி, இயக்குனரின் வாயை அடைத்து விடுகிறார். இப்படி, தன் எதிர்ப்பை சூசகமாக அறிவித்தும், மேற்படி இயக்குனர், தொடர்ந்து கதை சொல்ல முயற்சிப்பதால், அவர் மீது, செம கடுப்பில் இருக்கிறார் நடிகர்.
சினி துளிகள்!
* துருவங்கள் பதினாறு படத்தை இயக்கியுள்ள, கார்த்திக் நரேன், 'கூகுளை பார்த்து தான், சினிமா எடுக்க கற்றுக் கொண்டேன்...' என்கிறார்.
* வில்லன் வேடங்களில் நடிக்க, கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கிறார், இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா.
* குற்றம் 23 படத்திற்கு பின், ஐங்கரன் மற்றும் இரவுக்கு ஆயிரம் கண்கள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார், மகிமா நம்பியார்.
* கவண் படத்தில் நடித்த மடோனா செபஸ்டியன், சில ஆல்பங்களில் பாடி, அதை யூ - டியூப்பில் வெளியிட்டு உள்ளார்.
* அடங்காதே படத்தில், ஜி.வி.பிரகாஷின் அண்ணனாக, அரசியல்வாதி வேடத்தில் நடித்துள்ளார், சரத்குமார்.
அவ்ளோதான்!
