தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஒரு தீர்வு!

ஒரு தீர்வு!

ஒரு தீர்வு!


PUBLISHED ON : ஏப் 23, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 23, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'காலை, 6:00 மணிக்கு வந்துடுறோம் சார்...' என்று, பேரூராட்சி ஊழியர்கள், தலையிலடித்து சத்தியம் செய்யாத குறையாக சொல்லியிருந்ததால், சீக்கிரமே எழுந்து விட்டார், சுந்தரம்.

'தூங்கும் நேரமாக வந்து, அரைகுறையாக அள்ளிப் போட்டு போய் விடுவரோ...' என்று நினைத்து, இரவெல்லாம் அவருக்கு தூக்கமே வரவில்லை.

அவர் மனைவி சும்மா இல்லாமல், ''அவங்க, வருவாங்கன்னா நினைக்கிறீங்க... எத்தனை நாளு இப்படி சொல்லி, வராம போயிருக்காங்க. அவங்க வேலை நேரமே, 10:00 மணிக்கு தான் ஆரம்பிக்குது; இதுல எப்படி, காலையில், 6:00 மணிக்கு வருவாங்க; அவங்க சொன்னாங்களாம்; இவரும் நம்பிட்டு இருக்காரு,'' என்று சொல்ல, அந்த குளிர் நேரத்திலும், 'பிரஷர்' ஏறி, உடல் சூடாயிற்று சுந்தரத்திற்கு!

மனைவி சொல்வது உண்மை தான். இங்கு குடிவந்த இந்த ஓர் ஆண்டும் துப்புரவு தொழிலாளிகளிடம், அவர் ஏமாந்து தான் இருக்கிறார். ஆனாலும், அவரால், தெருவாசிகளை போல், மெத்தனமாக இருக்க முடிவதில்லை.

சுந்தரம் முன்னர் குடியிருந்த இடங்கள் எல்லாம் தூய்மையானவை. அங்கே, பிரபலங்களும், அதிகாரிகளும் குடியிருந்தனர். அதனால் தானோ என்னவோ அங்கு அரசு இயந்திரம் ஒழுங்காக இயங்கியது.

தினமும் குப்பை அகற்றப்பட்டது; கழிவு நீர் தேங்காமல் ஓடியது; நாய், பன்றி, மாடு மற்றும் கொசு தொல்லை இல்லை.

அங்கு வசித்த மக்களும், பொறுப்போடு செயல்பட்டனர்; மறந்தும் குப்பையை வீதியில் வீசியதில்லை. தொட்டி, தொலைவில் இருந்தாலும், சோம்பல்படாமல் போய், அதில், குப்பையை போட்டனர்; ஏதேனும் பிரச்னை என்றால், உடனே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிக்கு போனிலோ, நேரிலோ புகார் கொடுத்து, நடவடிக்கை எடுக்க, ஆவன செய்தனர். அதனால், அந்த பகுதியே, சுகாதாரமாக இருந்தது.

அங்கு நிலவிய அமைதி மற்றும் சுத்தத்திற்காகவே, கூடுதல் வாடகையை பொருட்படுத்தாமல் இருந்தார், சுந்தரம். இரண்டு ஆண்டுகளுக்கு முன், மகளுக்கு திருமணம் நடத்தியதில் எதிர்பார்த்ததை விட, செலவு அதிகமாகி விட, தொடர்ந்து அந்த வாடகையில் அங்கு வசிக்க முடியாத பெருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

'இதே பரப்பளவு உள்ள வீடு, இதைவிட, பாதி வாடகைக்கு வேணும்ன்னா, புறநகர் பக்கம் தான் போகணும்; நான் விசாரிச்சு பாக்கிறேன்...' என்றார் ஒரு நண்பர்.

அதன்படியே, மறுவாரம் வந்து, அழைத்து போய், வீட்டை காட்டினார்.

வீட்டை பார்க்க போன நேரம், துப்புரவு பணியாளர்கள் அந்த தெருவை சுத்தம் செய்து, கொசு பரவாமல் இருக்க, மருந்து தெளித்தனர். இதை எல்லாம் பார்த்த சுந்தரத்திற்கு, 'பரவாயில்ல... பேரூராட்சி நன்றாக செயல்படுகிறதே...' என்று மகிழ்ச்சியாக இருந்தது.

ஆனால், குடி வந்த பின் தான் தெரிந்தது, தினமும், வீட்டு கழிவுகளை வாங்கி போகும் வண்டியைத் தவிர, துப்புரவாளர்கள், வருவதில்லை என்பது!

ஒரு வாரத்திலேயே தெரு, குப்பையாகி விட்டது; கால்வாய் அடைத்து, துர்நாற்றம் வீசியது.

சுந்தரத்தின் வீட்டை ஒட்டி கால்வாய் ஓடியதால், அவரால் துர்நாற்றத்தை தாங்க முடியவில்லை; அருவருப்பாக இருந்தது. அக்கம், பக்கத்தாரிடம், 'ஏங்க... சாக்கடை சுத்தம் செய்றவங்க, குப்பை அள்ளுறவங்க எவ்வளவு நாளைக்கு ஒருமுறை வருவாங்க?' என்று கேட்டார்.

'எப்ப வர்றாங்களோ இல்லயோ பண்டிகை காலங்கள்ல வந்து, கொஞ்சம் வேலை பாத்துட்டு, இனாம் வாங்கிட்டு போவாங்க...' என்றனர்.

'அப்ப, தொடர்ந்து வர மாட்டாங்களா...'

'இல்லங்க... எப்பயாவது தான்...'

'இதை எல்லாம் நீங்க தட்டி கேட்க மாட்டிங்களா?'

'ஆயிரம் முறை கேட்டாச்சு...' என்று சொல்லியபடி, தேங்கிய சாக்கடையில், மூக்கை சிந்திப் போட்டு போனார், அவர்களில் ஒருவர்.

சுந்தரத்தால் பொறுக்க முடியவில்லை. அடுத்த மாதமே பேரூராட்சி அலுவலகத்துக்கு சென்று, 'அதிகாரிய பாக்கணும்...' என்றார்.

'என்ன விஷயமாக...' என்று கேட்க, விஷயத்தை சொன்னார்.

அவரோ, 'இதெல்லாம் ஒரு விஷயம்ன்னு வந்துட்டியே...' என்பது போல் பார்த்தார்.

'வாரம்தோறும் வண்டி வந்துகிட்டு தானே இருக்கு; அந்த வார்டிலிருந்து, இதுவரை, எந்த புகாரும் வந்ததில்லயே; நீங்க புதுசா சொல்றீங்களே...' என்று, குற்றம்சாட்டும் விதமாக கேட்டனர்.

'இதோ பாருங்க... நான், அந்த ஏரியாவுக்கு குடி வந்து, ஒரு மாசமாச்சு; நான் வந்த நாள்ல, வேலை நடந்தது இல்லங்கல; ஆனா, அதன்பின், ஒண்ணும் நடக்கல. குப்பை தேங்கி கிடக்கு; அதுல பன்னிகளும், நாய்களும் புரண்டு அசிங்கம் செய்து வைக்குதுங்க. இது, மோசமான சுகாதாரக் கேடு. இதனால நோய்கள் பரவும் அபாயம் இருக்கு; நீங்க கொஞ்சம் கவனிக்கணும்...' என்றார்.

பேச்சோடு நிற்காமல், அதை, ஒரு புகார் கடிதமாக எழுதி கொடுத்தார்.

மறுநாளே, நடவடிக்கை எடுப்பர்; வண்டியை அனுப்புவர் என்று எதிர்பார்த்தார். நாட்கள் தான் ஓடியதே தவிர, வண்டி அவரது தெருப்பக்கம் வரவில்லை.

ஒருமுறை, பக்கத்து தெருவில் லாரி தெரிந்தது; துப்புரவு ஆட்கள், அங்கு வேலை பார்த்தபடி இருந்தனர். 'எப்படியும் அவர்கள் இந்த தெருவுக்கு வருவர்...' என்று, எதிர் பார்த்தபடி வாசலில் நின்றிருந்தார். ஆனால், அங்கு வேலை முடிந்ததும், அவர்கள், வண்டியை கிளப்பிக் கொண்டு போயினர்.

'இந்தாப்பா நில்லு...' என்று, குரல் கொடுத்தபடியே ஓடி, வண்டியை நிறுத்தினார் சுந்தரம்.

'இன்னா சாரே...' வாய் நிறைய, வெற்றிலை குதப்பலை வைத்திருந்த பெண், 'கேபினில்' உட்கார்ந்தபடி, அவர் அருகில், 'புளிச்'சென துப்பியபடி, தோரணையாக கேட்டாள்.

'இவ்வளவு தொலைவு வந்து, எங்க தெருவுக்கு வராமலே போறீங்களே... வந்து பாருங்க... தெரு, எப்படி நாறி கிடக்குதுன்னு; நான், ஆபீசுக்கு வந்து புகார் கொடுத்தும், 'ரெஸ்பான்ஸ்' இல்லாம நடந்துக்கிறீங்களே...' என்று சத்தம் போட்டார்.

'இதென்னடா பேஜரா போச்சு...' என்ற அவள், காக்கி ட்ரவுசரும், மண்வெட்டியுமாக நின்ற ஆளை பார்க்க, அவன்,'வண்டி இல்ல சார்... மொத்தமே மூணு வண்டி தான்; அதுல, ரெண்டு ரிப்பேர். இந்த ஒத்த வண்டிய தான் ஊரெல்லாம் ஓட்டிட்டு வர்றோம். எங்க கஷ்டமெல்லாம் உங்களுக்கு தெரியாது; ஆளு வரலைன்னா மட்டும் எழுதிக் கொடுத்துருவீங்க...' என்று சலித்தவன், 'இன்னைக்கு, 'டூட்டி' முடிஞ்சு போச்சு; அப்புறம் வர்றோம்...' என்று, வண்டியை நகர்த்தினான்.

டூட்டி முடிந்தது என்று சொன்னவர்கள், அடுத்த தெருவில் குப்பை அள்ளுவதை பார்த்து, கொதித்து போனார்.

'இப்ப மட்டும், 'டூட்டி' நேரம் முடியலயா... 'ஓவர் டைம்' பாக்குறீங்களோ...' என்று சத்தம் போட்டார்.

'அதான் வந்து சுத்தம் செய்றோம்ன்னு சொல்லிட்டோம்ல...' என்றனர், காட்டமாக!

பேசாமல் வந்து விட்டார்; ஆனால், அவர்கள் வரவில்லை.

'இது, எனக்கு மட்டுமான தனி விஷயமா, நாமெல்லாம் சேர்ந்து கேட்டால் தானே வழி பிறக்கும்...' என்று, அந்த தெருவில் இருந்த, 16 வீடுகளையும் கேட்டார்.

'உண்மை தான்...' என்று தலையசைத்தனரே தவிர, பின் காணாமல் போயினர்; அவர்களுக்கு சொல்லிக் கொள்ள, ஆயிரம் காரணம் இருந்தது.

அசோசியேஷனுக்கு போனார்.

'உங்க தெருவாசிகள் சரிவர ஒத்துழைப்பு கொடுக்கறதில்ல சார்... பிரச்னைன்னதும், நீங்க வந்திருக்கீங்க. இத்தனைக்கும், நீங்க வாடகைக்கு குடி இருக்கிறவரு... உங்க தெருவுல சொந்த வீட்டுக்காரங்க, 15 பேர் இருக்காங்க; ஒரு கூட்டம், நடவடிக்கைன்னா வந்து கலந்துக்கணும், செய்யணும் இல்லயா... நமக்கென்னான்னு ஒதுங்கி இருந்தா, யார் என்ன சொல்ல முடியும்...' என்றனர். ஏதோ பூசல் என்று தெரிந்தது.

இவர்களுக்கிடையே பூசல் என்பதற்காக, அந்த பக்கம் வரும் வண்டி, இந்த பக்கம் வராமல் போவது என்ன நியாயம்.

அன்று முதல் அவர் யாரையும் அணுகவில்லை. பேரூராட்சிக்கு, நேரிலும், போனிலும் கோரிக்கை அனுப்பியபடியே இருந்தார்.

'யாருடா இந்த ஆள்...' என்று, பார்த்து போக வந்தார், கவுன்சிலர். சுந்தரம், வாடகைக்கு இருப்பவர் என்று தெரிந்ததும், கவுன்சிலர் முகம், ஒரு போக்காய் போனது.

'அடுத்த தேர்தலுக்கு இது எங்க இருக்குமோ... இந்தாளு ஓட்டு நமக்கு விழ போறதுமில்ல; எதுக்கு மெனக்கெடணும்...' என்று, தோன்றியிருக்க வேண்டும். உடன் அழைத்து வந்திருந்த இரண்டு ஆட்களை, மேலெழுந்த வாரியாக கடமைக்கு செய்யச் சொன்னார்.

'கவுன்சிலர் சார்... இங்க பெரிய தொல்லயே இதோ, இந்த பன்னிகளும், நாய் கூட்டங்களும் தான்...' என்று, சுட்டிக்காட்டினார். அந்த நேரம், ஒரு தாய் பன்றி, தன், 10 குட்டிகளுடன், வீதி உலா வந்து கொண்டிருந்தது.

'இதுகள ஒழிக்க, ஏதாவது செய்யக் கூடாதா... இப்பதான், எல்லா மிருகத்தின் பேராலும், நோய் பரவுதே...'

'பன்னியோ, நாயோ உயிரோடு இருக்கும் போது, புடிக்க கூடாதுன்னு, 'ரூல்' சார்; செத்தா சொல்லுங்க... வந்து தூக்கி போடுவாங்க...' என்று அலட்சியமாக சொல்லி சென்றார், கவுன்சிலர்.

அவரால், பொறுக்க முடியவில்லை. பத்திரிகையில், புகார் பகுதிக்கு கடிதம் எழுதினார்; தெருவின் நிலையையும், அதிகாரிகளின் அலட்சியத்தையும், வருத்தத்துடன் சுட்டிக் காட்டியிருந்தார்.

கடிதம் வெளியான தினம், தலைவரே வந்து விட்டார். 'என்ன சார் இப்படி எழுதிட்டீங்க... என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்க கூடாதா...' என்றவர், தம் பணிச்சுமை, அலுவலக பற்றாக்குறைகள் என்று அங்கலாய்த்து போனார். அன்று, ஒருநாள் வேலை நடந்தது; பின், பழைய குருடி, கதவை திறடி கதை தான்.

'சார் அதிகாரிகள விடுங்க... அவங்க இந்த பக்கம் ஒண்ணு சொல்வாங்க; அந்த பக்கம் போய், வேறு மாதிரி உத்தரவு போடுவாங்க. துப்புரவு பணியாளர்கள புடிச்சு அஞ்சு, பத்து, 'டிப்ஸ்' கொடுங்க; தன்னால வேலை நடக்கும்...' என்று, ஒருவர் சொல்ல, 'டிப்ஸ்' கொடுக்க பிடிக்கவில்லை என்றாலும் வேறுவழியில்லாமல் முன் வந்தார்.

'எனக்காக வந்து செய்யுங்க; என்னால முடிஞ்சத தர்றேன்...' என்று சொன்ன பின் தான், 'சரி சார்... காலையில், 6:00 மணிக்கெல்லாம் வந்து, தெருவை, 'கிளீன்' செய்திடறோம்...' என்றனர்.

அவரும், நம்பிக்கையோடு காத்திருந்தார்.

காலை, 6:00 மணி, ஏழாகி, எட்டாகி, மதியமாகி, மாலையும் முடிந்து, இரவாகி விட்டது. வெறுத்துப் போன சுந்தரம், கடைக்கு சென்று, சாக்கடை அள்ளும் குச்சி ஒன்றும், குப்பை வாரும் வாருகோல் மற்றும் சிறிய கூடை ஒன்றும் வாங்கி வந்தார்.

தன் வாசலில் தேங்கிய கால்வாயை வழித்துப் போட்டார்; வீட்டு முன்புறம் குவிந்து கிடந்த குப்பையை அள்ளி சேகரித்து, குப்பை லாரி போகும் தடத்தில், அவர்கள் எந்த இடத்தில் இருந்து குப்பை எடுக்கின்றனர் என்று பார்த்து, கொட்டி விட்டு வந்தார். அதைப்பார்த்து, 'என்ன சார் நீங்க போய்...' என்று பரிதாபம் காட்டினர், தெருவாசிகள்.

''என்னய்யா செய்யச் சொல்றீங்க... வாங்க போய் கேட்கலாம்ன்னு கூப்பிட்டாலும், வர மாட்டீங்க... நாத்தத்துல, மூக்கை பிடிச்சுட்டு இருந்தாலும் இருப்பீங்க; ஆனா, சீர்செய்ய மாட்டீங்க. அவங்களும், போக்கு காட்டுறாங்க. என்ன தான் செய்ய முடியும்... எனக்கு தெரிஞ்ச வழி இது தான்; இதை, முதல்ல இருந்து செய்யாம விட்டுடேனேன்னு இப்ப தோணுது... போங்க போங்க...'' என்று கூறியபடி குப்பையை அள்ளினார்.

'வேறு நல்ல இடத்தில் வீடு பார்த்து போகும் வரை செய்வோம்...' என்று தான் நினைத்தார், சுந்தரம்.

ஆனால், அவர் செயலால், உத்வேகம் கொண்ட ஓரிருவர், தங்கள் வாசல்களை, தாங்களே சுத்தம் செய்ய துவங்க, சீக்கிரமே அந்த தெரு, பாதி வேலையை, தானே செய்து கொண்டது.

பேரூராட்சியின் மனசாட்சி உறுத்தியதோ என்னமோ... அதுவரை மெயின் தெருவில் மட்டும் போய் கொண்டிருந்த குப்பை லாரி, இப்போது கிளை தெரு பக்கமும் திரும்பி பார்க்க ஆரம்பித்துள்ளது.

எஸ்.ரங்கநாதன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us