
எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!
காமராஜரின் வாழ்க்கை வரலாறு கதையை படமாக்கிய பாலகிருஷ்ணன், தற்போது, எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறை படமாக்கி வருகிறார். எம்.ஜி.ஆர்., எழுதிய, 'நான் ஏன் பிறந்தேன்' கட்டுரை தொடரில் இருந்து பல விஷயங்கள் இப்படத்தில் இணைக்கப்பட்டுள்ளதாம். சதீஷ் என்பவர், எம்.ஜி.ஆராக நடிக்கும் இப்படத்தில், அண்ணாதுரை, கருணாநிதி, ஜெயலலிதா கேரக்டர்களும் இடம்பெறுவதால், அந்த வேடங்களில் நடிக்க, நடிகர் - நடிகை தேர்வு நடந்து வருகிறது.
— சினிமா பொன்னையா
நடிகைகளின் சைடு பிசினஸ்!
இன்றைய நடிகையர், ரொம்பவே உஷார் பேர்வழிகள். சினிமாவில் நடித்தாலும் அதை முழுசாக நம்புவதில்லை. மார்க்கெட் எப்போது வேண்டுமானாலும் வீழ்ந்து போகலாம் என்பதால், சினிமாவில் நடிக்கும் போதே, சைடு பிசினஸ் தொடங்கி விடுகின்றனர். அவ்வகையில் நயன்தாரா, அனுஷ்கா மற்றும் த்ரிஷா உள்ளிட்ட நடிகைகள், ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வருகின்றனர். இலியானா, துணிக் கடையும், ஸ்ரேயா, அழகு நிலையமும், ரகுல் பிரீத்சிங், உடற்பயிற்சி கூடமும், தமன்னா, ஆன்லைனில் தங்க நகை வியாபாரமும் செய்து வருகின்றனர். இவர்களைத் தொடர்ந்து, காஜல் அகர்வால், பிசினஸ் தொடங்க ஆலோசனை செய்து வருகிறார். காற்றுக்கு தகுந்தாற்போல் பாயை மாற்றிக் கட்டு!
— எலீசா
நெகடிவ் ரோலில் ஹன்சிகா!
பிரபுதேவாவுடன், குலேபகாவலி படத்தில் நடித்துள்ள ஹன்சிகா, அதையடுத்து புதிய பட வாய்ப்புகள் இல்லாமல் போராடிக் கொண்டிருந்தார். தற்போது அவருக்கு, அதர்வா நடிக்கும், திரில்லர் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுவரை, மேல்தட்டு நடிகர்களுடன் தான் நடிப்பேன் என்பதில் உறுதியாக இருந்து வந்த ஹன்சிகா, அவர்கள் யாரும் தன்னை கண்டு கொள்ளாததால், இறங்கி வந்துள்ளார். அத்துடன், பாசிட்டிவ் மட்டுமின்றி நெகடிவ் வேடங்களில் நடிப்பதற்கும் தான் தயாராக இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறி வருகிறார்.கண்டதைக் கொண்டு கரை ஏற வேண்டும்!
— எலீசா
ஓவியாவுக்கு வந்த ஆசை!
காஞ்சனா 3 மற்றும் சிலுக்குவார்பட்டி சிங்கம் படங்களில் நடித்து வரும் நடிகை ஓவியாவிற்கும், நயன்தாரா போன்று கதையின் நாயகியாக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. அதனால், தன்னை கவர்ச்சியான, டம்மியான வேடங்களுக்கு, 'புக்' பண்ண வருவோரை துரத்தியடித்து, 'என்னையும் நயன்தாரா போன்று கதையின் நாயகியாக நடிக்க வையுங்கள்; அந்த மாதிரி வாய்ப்பு கொடுத்தால், கொடுக்கிற சம்பளத்தை கண்ணை மூடி வாங்கிக் கொள்கிறேன்...' என்று கூறி வருகிறார், ஓவியா. ஓடி ஓடி, நுாறு குழி உழுவதை விட, அமர்ந்து ஆறு குழி உழுவதே நன்று!
—எலீசா
பார்த்திபனின் இரண்டாம் பாகம்
ஏற்கனவே வெளியான படங் களின் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் உருவாவது, தற்போது பேஷனாகி விட்டது. அவ்வகையில் தற்போது, விஸ்வரூபம் 2 மற்றும் மாரி 2 என, சில படங்கள் உருவாகி வரும் நிலையில், 1993ல் தான் நடித்த, உள்ளே வெளியே படத்தின், இரண்டாம் பாகத்தை துவங்கியிருக்கும் பார்த்திபன், இப்படத்தையும் தானே இயக்கி, நாயகனாக நடிக்கிறார்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
இரண்டெழுத்து கார் ரேசர் நடிகரை விட்டு, விலகிச்சென்று விட்டார், அங்காடித் தெரு நடிகை. அவருடன் நெருங்கி பழகிய ஒரு விஷயத்தை வைத்தே, இயக்குனர்களும், நடிகர்களும் படம் கொடுக்காமல் ஓரங்கட்டுவதால், இந்த அவசர நடவடிக்கை எடுத்துள்ளார் நடிகை. மேலும், நடிகருடன் தனக்கு நெருக்கம் இருப்பது போன்று காட்டிக்கொண்டால், முற்றிலுமாக பட வாய்ப்புகள் குறைந்து விடும் என்பதால், மேற்படி நடிகருக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டு வருகிறார் நடிகை.
சினி துளிகள்!
* ராம் இயக்கிய தரமணி படத்தில், கெஸ்ட் ரோலில் நடித்த அஞ்சலி, தற்போது மீண்டும் அவர் இயக்கி வரும், பேரன்பு படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
* இயக்குனர்கள் மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் இணைந்து நடிக்கும் படத்திற்கு, சுட்டுப்பிடிக்க உத்தரவு என்று பெயரிடப் பட்டுள்ளது.
அவ்ளோதான்!

