PUBLISHED ON : ஜன 28, 2018

இந்திராவாக நடிக்கும் வித்யா பாலன்!
இந்தியாவின் இரும்பு பெண்மணி என்றழைக்கப்பட்ட முன்னாள் இந்திய பிரதமர் இந்திராவின் வாழ்க்கை வரலாற்றை, சகாரிகோ கோஷ் என்பவர், 'இந்திரா, இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த பிரதமர்' என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தை திரைப்படமாக்கும் உரிமையை, இந்தி நடிகை வித்யா பாலன் பெற்றிருக்கிறார். அத்துடன், அப்படத்தில், இந்திரா வேடத்தில் நடிக்க இருக்கிறார்.
இவர், சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதையில் உருவான, த தர்ட்டி பிக்சர்ஸ் என்ற படத்தில் நடித்து, தேசிய விருது பெற்றவர். எடுத்தாலும் பங்காரு பெட்டியை எடுக்க வேண்டும்; இருந்தாலும் சிங்காரக் கழுவில் இருக்க வேண்டும்!
— சினிமா பொன்னையா
19ம் நுாற்றாண்டு பெண்ணாக பிரியா ஆனந்த்!
கூட்டத்தில் ஒருவன் படத்திற்கு பின், காயம்குளம் கொச்சுண்ணி என்ற மலையாள படத்தில் நடிக்கிறார் பிரியா ஆனந்த். கேரளாவில், 19ம் நுாற்றாண்டில் வாழ்ந்த ஒருவரை பற்றிய கதையில் உருவாகும் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார், நிவின்பாலி. அவரது மனைவியாக நடிக்கும் பிரியா ஆனந்த், அக்கால பெண்ணின் தோற்றத்தில் நடிக்கிறார். இவ்வேடத்தில் நடிக்க நுாற்றுக்கணக்கான நடிகைகள் பரிசீலனை செய்யப்பட்டு, இறுதியில் பிரியா ஆனந்த், அந்த வேடத்திற்கு பொருத்தமாக இருப்பதாக, ஒப்பந்தம் செய்துள்ளனர்.
— எலீசா
கீர்த்தி சுரேஷ் எழுதிய கரப்பான் பூச்சி கவிதை!
தமிழ் சினிமாவில் நடித்து வரும் நடிகையருக்கு, தமிழ் பேசுவதே தகராறு. ஆனால், கேரளத்து நடிகையான கீர்த்தி சுரேஷ், நன்றாக தமிழ் பேசுவார். அத்துடன், சமீபத்தில், இயக்குனர் லிங்குசாமி எழுதிய, 'லிங்கூ ைஹக்கூ' என்ற கவிதை நுாலின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட கீர்த்தி சுரேஷ், கரப்பான் பூச்சியை பற்றி தான் எழுதிய ஒரு கவிதையை வாசித்து, அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அம்பலத்தில் அவல்பொரி போல!
— எலீசா
சிக்கிம் மாநில துாதுவரான ஏ.ஆர்.ரஹ்மான்!
சமீபத்தில், சிக்கிம் மாநிலத்தில் நடந்த குளிர்கால திருவிழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டார். அப்போது, அந்த மாநிலத்தின் முதல்வர் பவன்குமார் சாம்லிங், ஏ.ஆர்.ரஹ்மானை, சிக்கிம் மாநில விளம்பர துாதராக வேண்டும் என்று கேட்டுக்கொள்ள, அதற்கு சம்மதம் தெரிவித்ததோடு, 'சிக்கிம் மாநிலம், ஒற்றுமை, அமைதி, மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாக திகழ்கிறது. அதனால், இந்த துாதர் பணியை பெருமையாக கருதுகிறேன்...' என்று கூறியுள்ளார்.
— சினிமா பொன்னையா
கறுப்புபூனை!
மெட்ராஸ் பட நடிகை, படிப்படியாக மேல்தட்டு நடிகர்களுடன் ஜோடியாகி விடவேண்டும் என்று தீவிரம் காட்டினார். ஆனால், அவர் நடித்த சில படங்கள் சறுக்கி விட்டதால், இப்போது, மூன்றாம் தட்டு நடிகர்களுடன் டூயட் பாடி வருகிறார். ஆனாலும், முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும்போது தனக்கு கொடுக்கப்படும் அனைத்து வசதி வாய்ப்புகளையும் செய்து தரவேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் அடம் பிடிக்கிறார். இதனால், மெட்ராஸ் நடிகை மீது அதிருப்தியில் உள்ளனர், தயாரிப்பாளர்கள்.
கேரளத்து பால் நடிகை, இயக்குனர் கணவரை விவாகரத்து செய்த நேரத்தில், சில இளவட்ட நடிகர்களுடன் நெருக்கமான நட்பு வளர்த்தார். இதனால், அம்மணியின் பெயர் எக்கச்சக்கமாக ஆபாச சர்ச்சைகளில் சிக்கி வந்தது. அதை தடுக்கும் முயற்சியாக, தற்போது, நட்பு வட்டார நடிகர்களுடன் வெளிப்படையாக பழகுவதை நிறுத்திய நடிகை, வில்லங்கமான நடிகர்களையும் ஓரங்கட்டி விட்டார்.
சினி துளிகள்!
* சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேடங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருப்பதாக சொல்கிறார், அமலாபால்.
* மணிரத்னத்தை தொடர்ந்து, இயக்குனர் சரண் இயக்கும் படத்திலும் நடிக்கிறார், சிம்பு.
* தனக்கு தோழிகளை விட, ஆண் நண்பர்களே அதிகம் என்கிறார், கேத்ரின் தெரசா.
அவ்ளோதான்!
